சிவமஹிம்ந ஸ்தோத்திரம்
தமிழ் மொழிபெயர்ப்பும், உரை விளக்கம்
civa mahimna stotram - Tamil translation
with commentary/notes by
Natesa Gounder & Muthukumaraswamy
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. C.N. Muthukumaraswamy of Coimbatore for providing the e-version of this work
and permissions to include the work as part of Project Madurai collections
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிவமஹிம்ந ஸ்தோத்திரம்
தமிழ் மொழிபெயர்ப்பும், உரை விளக்கம்
Source:
சிவமஹிம்ந ஸ்தோத்திரம்
நின்மாலியம் தந்த தெய்வப் பாடல்
புட்பத்ந்தரின் வடமொழி நூல்
தமிழ் மொழிபெயர்ப்பு : கோவை கவியரசு கு. நடேச கவுண்டர்
உரை விளக்கம்: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
மொழிபெயர்ப்பாசிரியனின் நோட்டுப் புத்தகத்திலிருந்து பெயர்த்தெழுதி உரை எழுதப்பட்டது.
--------------
சிவமஹிம்ந ஸ்தோத்திரம்
அறிமுகம்
இறைவனுக்குச் சாத்திக் களைந்த மலர் மாலை நின்மாலியம் எனப்படும். அது இலையாயினும் பூவாயினும் மிகப் புனிதமானதாகக் கருதப்படும். இக்கோட்பாடு சைவம் வைணவம் இரண்டுக்கும் உரியதாம். நின்மாலியத்தின் உயர்வை விளக்கும் நிகழ்ச்சிகள் வரலாற்றிலும் உண்டு; புராணத்திலும் உண்டு.
சேரன் செங்குட்டுவன் ‘வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக், கடவு ளெழுதவோர் கற்கொண்டு ‘ வருவதற்கு, ‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோ’னாகிய சிவனின் சேவடியை வெட்சிமாலையொடு சிரசில் புனைந்து, மானிடர் யாரையும் வணங்காச் சென்னி இறைஞ்சி கடக்களியானைப் பிடர்த்தலை ஏறினன். அப்பொழுது ‘குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்க’ என, ஆடக மாடத்தறி துயி லமர்ந்தோனாகிய அனந்தபத்மநாபனின் சேடம் (நின்மாலியம்) கொண்டு வந்து அந்தணர் சிலர் ஏத்தினர்.
சேரன் செங்குட்டுவன், சைவன், ‘தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுளின் வண்ணச் சேவடியைத் தன் முடிமேல் வைத்தவன். ஆகவே, அனந்தபத்ம நாபனின் சேடத்தை வாங்கித் தன் அணிமணிப் புயத்தில் தாங்கினன். சைவனேயாயினும், சேரன் செங்குட்டுவன், திருமாலின் சேடத்தை அலட்சியம் செய்யாது, பணிவுடன் பெற்றுத், தோளில் தாங்கினான். சேடத்தைச் சிரசில் தாங்குதல்தான் முறை. சேரன் செங்குட்டுவனின் சிரசில் நீங்காமல் சிவனின் சேவடி உள்ளது. அதன்மேல் அல்லது அதற்கு நிகராகத் திருமாலின் சேடத்தை வைக்கச் சைவனான அவன் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. எனவே, தோள்மீது தாங்கி அதற்கு உரிய மரியாதையைச் செய்தான். சைவர்கள் திருமாலின் சேடத்திற்கும் தரும் மரியாதையைச் சேரன் செங்குட்டுவன் தன் செயலில் காட்டினான்.
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம் நின்மாலியத்தை அலட்சியம் செய்த இந்திரனும் அவன் வாகனமாகிய வெள்ளையானையும் அடைந்த தண்டனையைக் கூறுகின்றது.
கருவாசனையை கழிக்கும் காசி நகரில் துருவாசமுனிவர் விசுவநாதனை ஆகம முறைப்படி வழிபட்டு , இன்புற்று அருச்சனை செய்தார். அருச்சனை முடிவில் பெருமானின் சிரசிலிருந்து தாமரை மலரொன்று சரிந்து விழுந்தது. அதனைத் துருவாசமுனிவர் கரத்தில் ஏந்தினார். பரமனின் சிரசிலிருந்து சரிந்த அந்த உயரிய நின்மாலியத்தை உயர்ந்த ஒருவனுக்கு அளிக்க விரும்பிய முனிவர் இந்திரலோகத்தை அடைந்தார்.
இந்திரன் தன் செல்வச் செருக்கெல்லாம் வெளிப்படத் தன் வெள்ளையானைமீது ஊர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான். இந்திரனைத் தாங்கிவரும் பெருமையினால் ஐராவதமும் மதக் களிப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தது.
துருவாசமுனிவர் பரமனின் நின்மாலியத்தினை இந்திரனிடம் அளித்து வாழ்த்தினார். பெரியோர் அளிக்கும் நின்மாலியத்தை இருகரம் நீட்டிப் பெறுவதுதான் முறை. ஆனல் அறிவிலாத இந்திரன் மரியாதையின்றி ஒருகரம் நீட்டி வாங்கி அதை அலட்சியமாக யானையின் மத்தகத்தின் மீது வைத்தான்; யானை மத்தகத்தின்மீது இருந்த மணமலரைத் தன் துதிக்கையினால் எடுத்துத் தரையில் வீசித் தன் நெடுந்தாளால் மிதித்துச் சிதைத்துச் சென்றது. சினமுற்ற துருவாசர், இந்திரனை நோக்கி, 'உன்னுடைய சென்னி செழியரில் (செழியர் – பாண்டியர்) ஓர் வீரனின் வளையால் (வளை ஒருவகை படைக்கலன்) சிதறுக. உன்னுடைய நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரம் காட்டு யானையாக அலைக’ எனச் சாபமிட்டார்.
வைணவத்திலும் நிருமாலியத்தின் சிறப்பைப் போற்றும் செய்திகள் உண்டு. அவற்றில் ஒன்று உருக்குமாங்கதன் எனும் அரசனின் கதை.
செல்வச் செழிப்பில் அதிதியர் வழியில் தோன்றிய குபேரனைப் போலவும், தறுகண்மையில் தென்திசைக் கோனாகிய இயமனைப் போலவும் பெருகும் சீர்த்தியால் ஒளிவாய்ந்தவன் உருக்குமாங்கதன் எனப் பெயரிய மன்னவன். தன் குடிமக்களைக் குழவியை ஓம்பும் தாயெனப் புரந்தான். குடிமக்களுக்குக் தீங்கிழைத்தவன் தன் அருமைப் புதல்வனே யாயினும் கூரிய வாளால் கொன்று நீதி புரியவும் தயங்காத மனுநெறியில் நின்றான். நலம் மிக்க தன் நாடெனச் சொல்லும் இராச்சிய லட்சுமியை மாற்றரசர்கள் தம்முடைய புயபலங்கொண்டு பற்றிடா வண்ணம் பகை விலக்கிப் பாதுகாத்து வந்தான்.
உருக்குமாங்கதனின் தலைநகருக்கு மிக அருகில் கற்பக வனத்தவர்களாகிய வானவரும் ஆசைகொளும் ஒரு அழகிய பூஞ்சோலை தழைந்திருந்தது. பொழுதுகள் ஐந்தினும் பருவங்கள் ஆறினும் மாறாமணம் மிக்க வண்டுகள் மொய்க்கும் செழுந்தேன்மலர்கள் நிரம்பியிருந்தது அந்த நந்தனவனம்.
பூதேவி சீதேவியாம் இருவரைப் புணர்ந்த கார்முகில்வண்ணனாகிய ,மாதவனின் செய்ய திருவடியைச் சாரும் விழைவுடைய தொண்டர்கள், அச்செய்ய திருவடியை ஒக்கும் மலர்கள் மலர்ந்துள்ளன என்று அந்த நந்தவனத்தைச் சார்ந்தனர் என்றால் அந்த நந்தவனத்தின் வனப்பின் பெருமையைச் சொல்லப் போமோ?
அரி அடியவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைப் பிறக்களிப்பதல்லாமல், பிறரிடமிருந்து பொருள்களைத் தாம் கொள்ளார் எனும் உண்மையை இந்த நந்தவனம் மணமிக்க மலர்களினின்றும் நீரெனத் தேனைச் சொரிந்து உலகுக்குக் காட்டுவதாக இருந்தது..
அந்த நந்தவனத்தில் பூத்த மலர்களின் மேன்மையைக் கண்டு அவற்றின் மீது விருப்பம் வரவே, தேவமகளிர் இரவுதொறும் அங்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்றனர்.
நாள் தோறும் மலரும் பூக்கள் இவ்வாறு களவாடப்படுதலை அறிந்து அந்நாட்டு மன்னன் உருக்குமாங்கதன் மிக்கசினம்கொண்டான். நந்தவனக் காவலாளியை அழைத்து, “நம் நந்தவனத்தில் நாள்தோறும் மலர்கின்ற பூத்திரளை யாரோ ஒளிந்திருந்து களவாடுகின்றனர். இதனை நீ அறிகிலாய் போலும். நீ காவல் செய்யும் இலட்சணம் மிக நன்றாக இருக்கின்றது !. யார் இம்மலர்களைத் திருடிச் செல்கின்றனர் என கண்டுபிடித்து எனக்கு நீ சொல்லாதபோனால் என்னுடைய கூரிய வாளால் உன்னை வெட்டி வேரறுத்திடுவேன். நான் சொல்வது உண்மை; உன்னை மிரட்டுவதற்காகச் சொன்னதன்று” எனக் கடுஞ் சினத்துடன் கூறினான்.
நந்தவனக் காவலன் அரசனது சினத்தைக்கண்டு தனக்கு இறுதி நாள் வந்துற்றதோ எனக் கவலையால் முகமும் மனமும் தளர்ச்சி அடைந்தான். மலரைத் திருடிக்கொண்டு செல்வார் ஒருநாள் கூடக் என் கண்ணுக்குத் தென்படவில்லை. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்னும் பழமொழி. வெறும் அபத்தம் போலும். நந்தவனம் பூக்கும் மலர்களை காண்கிலானெனில் அரசன் தான் செய்த சூள் பிழையான், உறுதியாக நம்மைக் கொல்லுவான் என்று அஞ்சிய வனக்காவலன் , தனக்குத் தெரிந்த பௌராணிக வேதியர் ஒருவரிடம் சென்று தனக்குற்ற பெரிய கண்டத்தைக் கூறி அவரது திருவடியை இறுகப் பற்றிக் கொண்டான்.
பௌராணிக வேதியர் காவலன் கூறியதனைத்தையும் மனத்தில் நன்கு ஆராய்ந்தார். ஒளிமிக்க அந்த நந்தவனத்தில் மலர் கவர்வார் மானிடர் அல்லர். மானிடர்கள் அந்த நந்தவனத்திற் புகவும் அஞ்சுவர். எனவே, இந்த மலர் திருட்டுச் செய்பவர் இயக்கர்,கந்தருவர், இராக்கதர் எனப்படுவோரில் ஒருவரே. என்று கூறி, இத்திருட்டைக் கண்டுபிடிக்கும் உபாயமும் ஒன்றை இசைத்தான்.
“தீயவிச்செயலுக்காக நீமனம் அஞ்ச வேண்டா. பெருமாளுக்குச் சாத்திய நிர்மாலிய மலர்களைக் கொண்டுவந்து நந்தவனம் முற்றிலும் பரப்பி, இரவு முழுவதும் மறைவாக ஓரிடத்தில் மறைவாக இரு. அங்கு வரும் கள்வன் விடியலில் வெளிப்படுவான்” என்றுகூற, காவலன் அவ்வாறே செய்து ஓரிடத்தில் மறைந்திருந்து தூக்கந் துறந்து அந்நிசியில் நடப்பதைக் கண்ணுறக் காணக் காத்திருந்தான்.
வைகறை விடியலில் காவலன் அங்கு ஒளிகொள் திப்பிய வடிவத்தொடு ஒரு பெண் நிற்பதைக் கண்டான். இரகசியமாக வந்தவர்களில் நின்மாலியத்தை மிதியாதவர்கள் மலரொடு நந்தவனத்தை விட்டு அகன்றனர். இவள் நின்மாலியத்தை மிதித்தமையால், தன் பிறப்புக்கு ஊறு விளைந்து திகைப்புடன் அங்கேயே அசையாமல் நின்றுவிட்டாள்.
அவளைக் கண்ட காவலன் களிப்பாம் கடலினில் மூழ்கினான். வானுலகத்து அழகியைக் கண்டும் அவன் வேட்கை மனத்திடைக் கொண்டிலன். தனக்கு ஓராபத்து வந்துறும் என்று உள்ளவாறு உணர்வாரை பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை எனும் பேய் மயக்காது.
நந்தவனத்தில் நின்றிடும் தேவமகளைக் கண்ட காவலன், அரசனிடம் விரைவாகச் சென்று, “இறைவனே!, நம் நந்தவனத்தில் மணமலர்களைத் திருடுபவரைக் கண்டேன். அச்செயலைச் செய்வது ஒருபெண். அவளுருவச் சவுந்தரியம் எல்லாத் திசையிலும் ஒளி வீசிடுவதால், அவள் மக்களுள் ஒருத்தி அல்லள்” என்று தெரிவித்தான்.
விம்மிதனாகிய அரசன் விரைவில் நந்தவனம் சென்று அத்தேவப் பெண்ணைக் கண்டான். யாவள் நீ? யாண்டுளாய்? ஈண்டு அடைந்தது எங்ஙனம்? அஞ்சாமல் நின் செயல்முழுவதும் உரை” என்றான்.
அதற்கு அப்பெண், “யான் சுவர்க்கத்தை இடமாகக் கொண்ட அப்சர மகள். உனது நந்தவனத்துக்குத் தோழிமாருடன் விண் வழியே வந்தேன். என் சகிகளாயினார் அனைவரும் மீண்டும் சுவர்க்கத்தை எய்தினார். நானறியாமல் இங்கிருந்த நின்மாலியந்தனை மிதித்துவிட்டேன். அச்செய்கையினால் வான்வழியே செல்ல இயலாத கனத்த விக்கினத்தை அடைந்தேன். என் வரலாறு இதுதான்” என்றனள்.
அவள் வரலாற்றை கேட்ட அரசன் மனமிரங்கி,” நீ சுவர்க்கத்திற்கு மீண்டிட உபாய மேது?” என்றான்.
உருவச் சுந்தரப்பொலிவும் ஒளிமிக்க ஆடைஅணிகலன்களோடு கூடிய அந்த அழகிய அப்சரமாதைக் கண்டு வெகுளியோ மயக்கமோ கொள்ளாமல், அவள் உறுதுயர் துடைத்திட உபகரிக்கும் உருக்குமாங்கத மன்னனின் இந்திரிய அடக்கமும் பொறையும் என்னென்று உரைப்பது!!
எந்த உபாயத்தால் நீ உன்னுடைய சுவர்க்கலோகத்தை அடையலாகும் அதைச் சொல்; அதனை விரைவில் செய்வேன் என்ற உருக்குமாங்கத மன்னனுக்கு . .அப்பெண்கூறுவாள்:
“அரசே! குற்றங் களையும் ஏகாதசி விரதம் கைக்கொண்டவர்கள் இங்கு உளரோ? அவ்விரதம் பூண்டோர் தம் புண்ணியத்தை எனக்கு அளித்தால் யான் சுவர்க்கம் புகலாகும்” என்றாள்.
இப்படி அந்தக்கதை செல்லுகின்றது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நின்மாலியத்தின் சிறப்பினை உணர்த்துவன. இனி, நின்மாலியத்தால் தோன்றிய தெய்வப் பாடலை அறிவோம்.
புஷ்பதந்தர் என்னும் கந்தர்வ தலைவர், காசிமன்னனான வாகு என்பவன் தன்னுடைய போகத்துக்கு அமைத்திருந்த நந்தன வனத்திலிருந்து நாள்தோறும் உயர்ந்த மணமிக்க மலர்களைக் கவர்ந்து சென்று சிவபூசை செய்து வந்தார். இவர் , நிலத்தில் கால் பதியாது, வானத்தில் சஞ்சரிப்பவ ராதலால் நந்தனவனத்தைச் சுற்றிலும் இருந்த கடுமையான காவல் பயனற்றதாயிற்று.
அரசன் நுண்ணறிவுடையவ னாதலால் மலர்க் கள்வனைப் பிடிக்க அரியதொரு சூழ்ச்சியினைச் செய்தான். நந்தன வனமெங்கும் சிவ நின்மாலியங்களைத் தூவச் செய்தான். மலர் பறிக்க வந்த புட்பதந்தர், சிவநின்மாலியங்களை மிதித்துச் சிவாபராதத்துக்கு ஆளானார். ஆகாயத்தில் பறக்குமாற்றலை இழந்தார்; மண்ணுலகில் தங்க வேண்டியவரானார்.
சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார்.ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவபரம்பொருளின் மகிமைகளை எடுத்துக் கூறித் துதிக்கத் தொடங்கினார்.
சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடைய தாயிற்று.
வடமொழியில் உள்ள இந்த அருமையான நூல், பரஞ்சோதி முனிவரால் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில்,
“பந்தநான் மறைப்பொருட் டிரட்டென வடபாடல் செய்தெதிர் புட்ப
தந்தனேத்த” (திருமணப்படலம் 112) எனப்புகழப்படுகின்றது. இந்த அரிய நூலுக்கு வடமொழியில் ஜகந்நாத சக்ரவர்த்தி என்னும் வங்காள அறிஞர் உரை எழுதியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் வங்காள உயர்நீதி மன்ற நீதியரசர் ஸர் ஜான் உட்ரூஃப் எனும் ஆங்கிலேயப் பெரியவர் ‘ஆர்தர் ஆவலான்’எனும் புனைபெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளார். சுவாமி விவேகாநந்தரும் இந்நூலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நூலில் 36 பாடல்கள் உள்ளன. அனைத்தும் சிவபரம்பொருளின் பெருமையை எடுத்துமொழிவன. அவற்றைச் சுவைப்போம்.
------
சிவமகிம்ந ஸ்தோத்திரம் - நூல்
1. பத்தியே சிவனுடைய புகழுக்கு எல்லை
‘ உன்னுடைய அநந்த கல்யாண குணங்களில் எதை எவ்வாறு அறிந்து எப்படிப் பாடித் துதிப்பேன்’ எனச் சுந்தரமூர்த்தி நாயனார் கவலைப்பட்டதைப் போன்றே, புஷ்பதந்தரும் ‘உன்னுடைய எல்லையற்ற மகிமைகளில் எதை எப்படி இயம்புவேன்’ என ஏங்கினார். இந்த ஏக்கமே முதற்பாட்டாக அமைந்தது. இப்பாட்டு இந்த நூலின் உட்பொருளையும் ஆசிரியரின் மனக் கருத்தையும் எடுத்துக் காட்டும் பாயிரமாகவும் அவையடக்கமாகவும் உலகோரை ஆற்றுப் படுத்தும் அற உரையாகவும் அமைந்தது.
“அரனே ! உன்னுடைய பெருமைக்கு உயர்வெல்லையே இல்லை. உன் பெருமையை அறியாதவர் அதனைக் குறித்துப் பேசுதல் என்பது பிழையாம். வேதன் எனச் சிறப்புப் பெயருடையவனும் ஓதுதற்குக் கருவியாக நான்கு நாக்களைக் கொண்ட நான்முகமுடையோனுமாகிய பிரமன் முதலாய தேவர்கள் உன்னைத் துதிக்கும் மொழியும் குறைபடுதல் எனும் குற்றமுடையதாகும். (விரிக்கில் பெருகும்;சுருக்கில் எஞ்சும்) அதேசமயம், அன்பினால் உம் மகிமைகளை மனத்தில் எண்ணி, அவரவர் அறிவுக்கு எட்டிய அளவில் உன்னைப் புகழ்ந்து துதித்தால் அது குற்றமாகாது. அதனாலென்னுடைய உரையும் உனக்கு ஏற்புடைத்தாகும்.
1. பெருமையுன துயர்வெல்லை யில,தறியார்
பேசுவது பிழையா மென்னில்
சுருதியுணர் பிரமன்முத லியருமுனைத்
துதிமொழியுந் துரிசா மன்பால்
கருதியுணர் தமதுமதி யளவுபுகல்
பவரெவர்க்குங் கரிசின் றென்றால்
ஒருபிழையு மிலதாகு மரனேயென்
னுரையுமுனக் கேற்ப தாமே.
[கரிசு- பிழை. துரிசு – குற்றம்.]
----------
2. சிவனே முத்தொழிற்கும் முதல்
சிவனே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் திருவந்தொழில்களுக்கும் கருத்தா. இவற்றில் முதல் மூன்றும் மாயையாகிய சடத்திலும் பின்னைய இரண்டும் சித்தாகிய உயிரிலும் நடைபெறும். ஐந்தொழிலை முத்தொழிலாகவும் கூறுதல் உண்டு. மறைத்தல் தொழிலைத் திதியாகிய காத்தலிலும் அருளல் தொழிலைச் சங்காரமாகிய ஒடுக்கலிலும் அடக்கிக் கூறுவர்.
சிவபெருமான் மாயாகாரியமாகிய முக்குணங்கள் இல்லாதவன். மாயாகாரிய நிர்குணனாகிய சிவன் சர்வஞ்ஞம் முதலிய அருட்குணங்கள் கொண்டவன். ஆன்மாவின் பொருட்டு சிருட்டி திதி சங்காரம் எனும் முத்தொழில்களை மாயை இடமாகச் செய்யும் போது, அத்தொழில்களுக்குரிய குணங்களோடு இயற்றுவன்.
“……. விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத் தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை”
(ஞானசம்பந்தர், திருவெழுகூற்றிருக்கை)
“அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே” (11ஆம் திருமுறை)
“எதினின்று இந்தச் செந்துக்களெல்லாம் பிறக்கின்றனவோ, பிறந்தவை எதனால் நிலையுறுகின்றனவோ (திதி, திரோபவம்) , ஒழியுங்காலத்து அவை எதனுட் பிரவேசிக்கின்றனவோ , அதனை அறிதி; அது பிரஹ்மம்” (தைத்திரீயோபநிடதம்)
இதனால் படைத்துக் காத்து அழிப்பது (சிவப்)பிரஹ்மம் எனப் பெறப்படுகின்றது
முக்குணங்கள் – சாத்துவிகம், இராஜசம், தாமசம். இறைவன் ராஜதகுணவடிவாக அயனிடத்தும், சாத்துவிக குணவடிவாக அரியிடத்தும், தாமச குணவடிவாக உருத்திரனிடத்தும் நின்று படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைச் செய்கின்றான். ஆயினும் அவன் மும்மூர்த்திகளில் ஒருவனல்லன்.
“முக்குணத்தின் மூவுருவி னின்றுலகம்
முழுவதையும் படைத்துங் காத்தும்
ஒக்கவழித் திடுமுனது பேரிறைமை
மறைமூன்றும் உணர்த்தக் கேட்டும்
தக்கநிறை புண்ணிய மிலாதசிலர்
அதையிகழ்ந்து தருக்கும் கொள்வர்;
மிக்கமதி வாணர்களுக் கம்மொழிகள்
செவிசுடுமே விளங்கும் வள்ளால். 1
--------------------
3. வாக்கு மனம் கடந்தது நின் மகிமை
அரனே! உன்னுடைய மகிமை வாக்கு மனம் ஆகியவற்றின் ஆற்றல்களையும் கடந்து அப்பாற்பட்டது. வேதங்களும் உன்னுடைய மகிமைகளை அச்சத்துடனேயே கூற முயலுகின்றன.
சிவம் , கடம், படம் போன்று இதுவென்றோ அதுவென்றோ சுட்டி அறியத்தக்க பொருளன்று.
குணங் குறி கடந்த சிவமாம் அப்பொருளை, அதன் குணத்தினைக் காட்சி முதலிய நான்கு அளவைகளால் அளவிட்டுரைத்தல் இயலாது.
சிவத்தின் சொரூபமான நிர்குண நிலையை அறிய இயலாமையால் உருவத்தோடு கூடிய உன்னுடைய சகுண தடத்த மூர்த்தத்தில் மனம் பதியாதார் யாருளர்? அம்மூர்த்தி வடிவினை நாவால் போற்றிப் புகழாதார் எவருளர்?
இறைவன் மறைகளால் அளவிட்டுச் சொல்ல முடியாது பரந்து நின்றவன். மறைகள் நால்வகை வாக்குக்களால் ஆயவை; மாயேயங்கள். இறைவன் மாயையைத்தன் வைப்புச் சக்தியாகக் கொண்டவன்; மாயையை இயக்குபவன். அவனுக்கு கருவியாக இருத்தலால்,” வேதங்கள் ஐயா “ எனத் திகைத்து நிற்கின்றன.
வாக்கு – பேச்சு. போக்கு – குற்றம்
சகுணநிலை – உருவத்தோடு கூடிய நிலை;தடத்தநிலை. அதற்கு மாறானது நிர்க்குணநிலை எனும் சொரூபநிலை. ஆன்மாக்களின் பாசங்களை அரித்தொழிப்பதனால் அரன் என்ப்பட்டான்.
வாக்குமனம் கடந்ததுநின் மகிமைமறை
தானுமஃ தல்லாத் தன்மை
நீக்கிவெரு வுடன்புகலு நின்மகிமை
நிகழ்த்தவலார், அரனே! யாவர்?
ஆக்கமிகு நின்குணத்தின் அளவென்னோ?
அறிகருவி யாதோ? யார்தான்
போக்கருநின் மூர்த்தமதில் மனம்பதியார்?
யார்நாவாற் புகழா ரையா? 3
-------------
4. உன் புக்ழை உரைப்பதனால் என்மொழியைத் தூயதாக்க விரும்பினேன்
சுரகுரு எனப்படுபவர் பிருஹஸ்பதி. வாக்கு வல்லமை யுடையவர். அவரது பெயரேஅவருடைய வாக்கு வல்லமையை உணர்த்தும். பிரகஸ்பதி – சொல்லின் வேந்தன். நறுமணமும் இனிமையும் வாய்ந்த பூந்தேன்போல் இன்பமளிக்கும் வாக்கு வல்லமைகொண்ட அவர்,சிவனின் பெருமைகளை எடுத்தோதித் துதிக்கும் அமுதனைய பாடல்கள் கூறும் புகழ்ச்சி மொழிகள், நமக்கு அற்புதமான மொழிகள்;சிவனின் விரிந்த மகிமைகளை நோக்க அவை வியப்புக்கு உரியன அல்ல ( His hymns, though wonderful to others ,is not so toSiva). எனவே அவை சிவனிடத்தில் எள்ளளவும் வியப்பினை விளைப்பதில்லை.
உயர் ஞானச் செல்வர்கள் பெற்ற பெருஞ்செல்வமாகிய பேறே! பொருள்கள் அனைத்திலும் மேலாம் பொருளே! முப்புரங்களையும் எரித்தருளிய மகாதேவனே! நானுன் புகழைப் பாடுவதனால் என் மொழியைத் தூயதாக்கிக் கொளவிழைகின்றேன். செம்மேனி எம்மான் சிவனின் மகிமைகளைப் பாடுவதால் என்மொழி செம்மொழியாயிற்று. என் நா செந்நா ஆயிற்று. “எய்யாகூறிப் புகழ்தல் செய்யாவாகும் என்சிறுசெந்நாவே”. இறும்பூது – வியப்பு.
தங்கத்தின் மாற்றினைஅறிய அதற்கென உள்ளதொரு கல்லில் உறைத்துக்கணிப்பர். அந்தக் கல்லுக்கு மாற்றுரைகல் என்றுபெயர். தங்கத்தை அதன்மீது உறைப்பதால் அக்கல்லின்மீதுதங்கத் துகள்கள் படிந்திருக்கும். அதுபோல இறைவனின் மெய்ப்புகழ்களைப்பேசுவதால் நா தூய்மையும்புனிதமும் அடைகின்றது. அந்த நா மறந்தும் இழிசொல்லைப் பேசாது.
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறமெழ உரைத்தாற்போல்
உன்னை கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா! இருடீகேசா! என் உயிர்க் காவலனே!
(திவ்யப்பிரபந்தம்)
4. நறும்பூந்தே னனையமொழிச் சுரகுருசொல்
துதியமுது நலத்தா லுன்பால்
இறும்பூதெட் டனையும்விளைத் திடலரிதாம்;
உனதுபுக ழிசைக்கும் செய்கை
உறும்பேற்றா லென்மொழியைத் தூய்தாக்கிக்
கொளவிழைந்தேன் உயரு ஞானர்
பெரும்பேறே பரம்பொருளே புரமூன்றும்
பொடித்தவருட் பெரிய தேவே. 4
-------------
5. குதர்க்கமொழி
சிலர், காணப்படும் இவ்வுலகம் இப்படியே இருந்து வருகின்றது, இனிமேலும் இப்படியே என்றென்றும் இருக்கும், இது ஒருவனால் படைக்கப்பட்டதன்று; இறைவன் என ஒருவன் இதனைப் படைத்திருப்பானேல், அவன் இதனை எவ்வுருக் கொண்டு படைத்தான்? எதை விரும்பிப் படைத்தான்; இந்த உலகைப் படைக்க அவன் முதற் காரணமாக எதனைக்கொண்டான்?; அவன் துணைக் காரணமாக எதனைக் கொண்டான் என்றெல்லாம் குதர்க்கம் பேசிக்குழப்பம் விளைப்பார்கள்; கேட்போர் அறிவினை மயக்கம் செய்வார்கள்
இவ்வாறு பேசி ,எந்தையே! உன்னுடைய அளப்பறும் இறைத் தன்மைக்கு இழுக்குக் கற்பிக்க முனைவர், அந்தப் பேதையர்கள்
யாதுவிழைந் தெவ்வுருவின் எம்முதற்கா
ரணத்தாலெவ் விடத்தின் மேவி
யாதுதுணைக் காரணமா இறைவனுல
கனைத்தினையும் இயற்றி னானென்
றீதனைய குதர்க்கமொழி பிதற்றியுல
கினைமயக்கி யெந்தாய் சிற்சில
பேதையர்நின் கணக்குவழக் கற்றவிறை
மைக்கிழுக்குப் பிடிப்பா ரந்தோ. 5
விழைந்து – விரும்பி. முதற்காரணம் ஒருபொருளைச் செய்வதற்கான மூலப்பொருள். குடத்தை வனைவதற்கான மண்போல். துணைக்காரணம் – மூலப்பொருளை ஒர் பொருளாகச் செய்வதற்குதவும் கருவிகள். பானை வனையத் தண்டசக்கரம் போ
இறைவன் இந்த உலகினை, உயிர்களின்மேல் கொண்டுள்ள கருணையின் காரணமாகவே படைத்துள்ளான். உயிர்களின் சீவத்துவத்தைப் போக்கிச் சிவத்தை அளித்தலேஅவனுடைய நோக்கம். இந்த உலகத்தைப் படைக்க அவனுக்கு மூலப் பொருளாக அமைந்ததது,மாயை எனும் சடப்பொருள். அது அவனுக்கு அந்நியமாக அன்றி அவனிடத்திலேயே இருப்பது. துணைக்காரணமாக அமைந்தது, அவனுடைய சத்தியே. சத்தியினால் அவன் ஐந்தொழில் செய்வதாலவன் விகாரப்படுவதில்லை. இறைவன் தன்னிலிருந்தே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தலால் அவனுக்குப் பிரபஞ்சம் அன்னியமாக இல்லை. பிரபஞ்சத்தோடு சத்தியினால் கலந்து இருந்தே படைக்கின்றான். இவனுடைய இந்த ஆற்றலை, “விச்சதின்றியே விளைவு செய்குவாய்” எனப்பெரியோர் வியப்பர்.
சிலர் இதனை இறைவனின் ‘லீலா விநோதம்’ என்பர். லீலை என்றால் விளையாட்டு என்பது பொருள். இறைவன் ஐந்தொழிலை ஒரு விளையாட்டுப் போல எளிதில் , முயற்சியின்றிச் செய்வன் என்பது கருத்து.
----------------
6. படைப்போன் இன்றிப் படைப்பு இல்லை
நாம் காணும் இந்த உலகம் அறிவற்ற சடமாக உள்ளது; அவயப் பகுப்பு (parts) உள்ளதாகக் காணப்படுகின்றது. சடமாகவும் அவயவப் பகுப்புடையதாகவும் உள்ளபொருள் செயப்படுபொருளாகத்தான் இருக்கும். (All things with parts ‘Sa avayava’) are born or created. ) செய்வோனைஇன்றிச்செயப்படு பொருள் இல்லை.
நம்மால் காணப்படும் உலகம் ‘அவன் அவள் அது’ எனும் அவயவப் பகுப்புடை யதாகவும் சடமாகவும் இருப்பதால் இது ஒருவரால் படைக்கப்பட்டதாகத்தான் இருத்தல்வேண்டும். (The universe, which has parts, therefore, is created)
சடமான இவ்வுலகமொரு ஒழுங்குடன் இயங்கிவருகின்றது. பேரறிவுடைய ஒருவனால் விசித்திரமான இவ்வுலகை இவ்வாறு படைத்து இயக்கமுடியும். எனவே, குடத்தைக் கண்டாலதனைச் செய்தவன் ஒருவன் உண்டு என அறிதலைப்போல, ‘உள்ளதாய்க், காரியப்படுதலின்,யாது உள்ளதாய்க் காரியப்படுவது,அதுசெய்வோனை உடைத்து, குடம்போலும்’ (சிவஞான மாபாடியம்)
தம்மையே பெரிதும் மதிக்கும் புல்லறிவாளர்களுக்கு இந்த உண்மை புரியாது.
பகுப்புடைய சகம்படையாப் பண்பினதோ?
படைப்பாமேல் படைப்பான் இன்றோ?
உகப்புடைய வாலறிவன் ஒழியவிசித்
திரவுலகுண் டாக்கு வோர்யார்?
இகப்பரிய புல்லறிவர்க் குன்னிருப்பி
லையமுளத் தெழுவ தேனோ?
சகப்படைப்பு மீசனல்லார் தம்மாலா
மோவமரர் தம்பி ரானே. 6
சகம்- தோன்றியழிவதாகிய உலகம். வாலறிவன்- தூய அறிவினையுடையவன்.
புல்லறிவர்- அறிவு இன்றியே அஃதுடையராகத் தம்மை மதித்துள்ளோர். ஈசன் படைத்தலாதி ஐந்தொழிலையும் தன்னுடைய செல்வமாகவும் அதிகாரமாகவும் உடையவன். அமரர் – தேவர்கள்.
------------
7. “ஈற்றில் நினையே சேர்வர் சிவமாம் தேவே”
சிவன் ஒருவனே தேவன். அவனை அடையும் மார்க்கங்கள் பல. ‘யாதொரு தெய்வங் கொண்டீர்! அத்தெய்வமாக மாதொரு பாகனே வருவன்”. ஆன்மாக்களின் மனப்பக்குவம், அறிவு பல திறத்தன. அவற்றிற்கேற்பவே சிவனும் குருவாய் வந்து அவ்வான்மாக்களை நெறிப்படுத்தினான். எனவே எல்லா நெறிகளும் அவனால் படைக்கப்பட்டனவே. ‘விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதே யாகும்”.
மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும்.
அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்.
அருமறையே சாங்கியமே யோகம்மே
பசுபத மரிமார்க் கம்மே
பெருமையுடைத் தெனவொன்றே பேணியொழு
குநருமிச்சா பேதத் தாலே
வருநதிகள் நேர்புகுவ வளைந்துசெலு
மவையும்வழி வழியே யீற்றில்
திருவின்மிகு கடல்புகுத லெனநினையே
சேர்வர்பர சிவமாந் தேவே. 7
அருமறை- வேதாந்த நெறி. அரிமார்க்கம் – வைணவசமயம். இப்பரந்த கருத்தாலே சிவத்தைச் “ சமயாதீதப் பழம்பொருள் என்பர். சிவராத்திரியில் இச்சிவத்தின் மகிமைகளைத் தியானிப்போமாக.
-------------
8. இழி புலப்பேய்த்தேர்க்கு அனுபூதிச் செல்வர் மயக்குறுவார்களோ
இதுவரை சிவபரம்பொருளின் நிர்குண மகிமைகளைப் போற்றி வந்த புட்பதந்தர் இப்பாட்டில் சகுண மூர்த்தியைத் தோத்திரம் செய்கின்றார்.
வாகனம் பெரிய எருது; கையில் ஏந்தியது மழுப்படையும் கட்டுவாங்கமும். மேல் போர்த்தியது உலராத ஈரப்பசையுடைய தோல். அணிந்துள்ள ஆபரணம் சீறும்பாம்பு. இருப்பிடம் யாரும் நெருங்காத சுடலை, மயானம். பூசுவது சாம்பல். பிச்சை வாங்கி உண்பது பிரம கபாலத்தில். இத்தகைய எளிய வாழ்க்கையை (austerity) ,’இறைவனே!’ நீ மேற்கொண்டுள்ளாய்.
உன்னுடைய திருக்கண் நோக்கத்தால் மிகப் பெருமைவாய்ந்த பல்வகைப் பெருஞ்செல்வத்தைத் தேவர்கள் அனுபவிக்கக் கொடுத்த ருளினாய்!. ஆராய்ந்து பார்த்தால், சிவானுபூதிச் செல்வர்கள் ஐம்புல இன்பமான பேய்த்தேரினை விரும்பி மயங்குவார்களோ? (மயங்கார்)
மூரியெரு தெரியுமழுக் கட்டுவாங்
கம்பசுந்தோல் மூக்கப் பாம்பே
யாருமணு காச்சுடலை நீறுமுடை
தலைவாழ்க்கைக் கிறைவா கொண்டாய்
சீருடைய பெருஞ்செல்வம் பலவகைய
சுரர்க்களித்தி திருக்க ணோக்கால்
ஓரினிழி புலப்பேய்த்தேர்க் கனுபூதிச்
செல்வர்மயக் குறுவார் கொல்லோ. 8
மழு – மழுப்படை.. கட்டுவாங்கம் – தண்டத்தின்மேல் பிரமகபாலம் அமைந்ததென்றும் நீண்ட எலும்பின் மேற்பகுதியில் மற்றொரு சிறிய எலும்பைக் குறுக்காகக் கட்டப்பட்டதென்றும் கூறுவர். “கட்வாங்கிந்” என்பது இறைவனின் திருநாமங்களில் ஒன்று. பசுந்தோல் – உலராததோல். மூக்கப் பாம்பு – சீறும்பாம்பு. முடைத்தலை – முடைநாற்றம் வீசும்தலை; பிரம கபாலம். புலப்பேய்த்தேர்- ஐம்புல இன்பமாகிய கானல் நீர். சிவபெருமான் ,”ஐந்தவித்தான்” அவாவற்றவன். மூரி எருது – பெரிய விடை. ‘பெரிய விடை மேல் வருவார்’ (திருஞானசம்பந்தர், திருக்கடவூர் மயானம் தேவாரம் 1)
சிவன் பரமயோகி;மாயோகி. அவன் தன் கரங்களில் மழுவும் கட்வாங்கமும் ஏந்தியுள்ளான். எரி மழு – ஒளி வீசும் மழு. சிவன் ஏந்திய மழுவுக்குப் பெருமையாவது பகைவர் எவர்மீதும் எய்யப்படாமல் இறைவன் திருக்கரத்தில் சாங்கமாக(சாங்கம் – திருமேனியுடன் கூடியிருப்பது) மட்டும் நின்று திருவருளாகவே உயிர்களை ஓம்புவது. தொழுவார்தம்துயர் தீர்க்கும் அவனதுகருணைக்கு அடையாளம் மழு. “மெய்பரன் கொலைகுறித் தெடாமழு” (பிரபுலிங்க லீலை, வசவண்ணர்கதி, 22) எனச் சிவப்பிரகாசர் மழுவின் சிறப்பைக் கூறுகின்றார்.
கட்டுவாங்கம் யோகியர் யோகிருக்கும்போது தம்கரத்தை ஊன்றிக் கொள்ளப் பயன்படுத்தும் தண்டு.
பசுந்தோல் – யானை, சிங்கம், புலி,மான் ஆகியவற்றின் உலராத தோல். இவை தாருகாவனத்து முனிவர்களால் சிவபெருமான்மேல் ஏவி விடப்பட்டவை. யானைத் தோலை உரித்து ஏகாசமாகப் போர்த்துக் கொண்டான். புலித்தோலை அரைக்கசைத்துக் கொண்டான்.
மூக்கப்பாம்பு சிவனுக்குக் கச்சையாகவும் கங்கணமாகவும் கவிழ்த்த கைமேல் அணியாகவும் ஆடுதலை மணிவாசகர் திருப்பொற்சுண்ணம் 16ஆவது பாடலிற் கூறுகின்றார். ‘கட்டிய மாசுணக் கச்சை பாடி’ – மாசுணக்கச்சைஎன்றது, பாம்பாகிய அரைக்கச்சு. இதனை’உதர பந்தனம்’என்பர். இதனைக் குண்டலி சத்தியாகிய திரோதானம் என்னும் திருவைந்தொழிலின் மறைத்தல் தொழிலைக் குறிக்குமென்று கூறுவர். சிவபெருமானின் கையில் கங்கணமாகப் பாம்புளது. அதனைக்(கட்டிய) ‘கங்கணம் பாடி ‘ என்றார், மாணிக்க வாசகர். கங்கணம் – காப்பு.
கூத்தப்பிரானைன் தூக்கிய திருவடியை சுட்டிக் காட்டிவது இடது முன்கரம். இதனை மணிவாசகர் ‘கவித்த கைம்மேலிட்டு நின்றாடும் அரவம்’ என்றார். இது திருவைந்தொழிலில் ‘அருளலை’க் குறிக்கும். அரவக் கங்கணம்- உபாங்கம். கவித்தகை- பிரதியங்கம். அதிலரவம்-சாங்கம். இவை அனைத்தும் திருவருளேயாம்.(பார்க்கசிவஞான சித்தியார் சுபக்கம் சூ1 செய்யுள் 47)
சுடலை –மயானம். “கோயில் சுடுகாடு” (திருச்சாழல்) மயானம் அச்சமும் வெறுப்பும் தருவது; யாரும் நெருங்கத் தயங்குவர். ஆதலால்,’யாருமணுகாச்சுடலை’ என்றார். சர்வ சங்கார காலமாகிய பேரூழியில் உலகங்கள் அனைத்தும் அழிந்து பரிகிரகசத்தியாகிய மாயையில் ஒடுங்க, மாயை அம்பிகையாகிய சிவசத்தியில் ஒடுங்க அம்பிகையும் சிவனுள் ஒடுங்க, இறுதியில் அவன் ஒருவனே உள்ளான். இப்பொழுது அவன் இருக்குமிடம் யாவும் அழிந்த இடமாகும். அதனையே சுடுகாடு , சுடலை, மயானம் என சித்தாந்த நூல்கள் குறிக்கின்றன. இது சிவனது பரத்துவத்தைக் குறிப்பதாகும்.
நீறு – சாம்பல். சர்வசங்காரத்தில் அனைத்துமெரிந்துசாம்பலாகும். இறைவன் ஒருவனேநிற்பன். எரிந்த சாம்பல் வேறிடமின்றி அவன்மீதே படிந்து இருக்கும். பேரூழியை ஆதியாகக் கொண்ட தாதலின் இது ஆதிவிபூதி எனப்படும். சிவந்த கனலி லிருந்து தோன்றிய வெண்மையான சாம்பல் அந்தக் கனலின்மீதே படிந் திருப்பதைப் போலச் சிவசத்தி சிவத்தினொடு ஊழியில் கூடி யிருப்பாள். அந்த நிலையையே திருஞானசம்பந்தர் ‘பராவண மாவது நீறு” எனாருளினார். பரனுக்குப் பெண்பால் பரை. அந்தப் பரையின் வண்ணம் வெண்மையானதிருநீறு. திருநீறு சிவசத்தியாகிய திருவருள். எனவே, திருநீறு பூசுவது திருவருளுடன் கூடி இருப்பதை உணர்த்தும்.
முடைதலை வாழ்க்கை- முடை தலை – முடை நாற்றம் வீசும் பிரம கபாலம் இதில் சிவன் பிச்சை யேற்கும் வாழ்க்கையை உடையன்.
நான்முகன் தலையோட்டில் இறைவன் பலி தேர்ந்த செய்தி பல புராணங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் அவன் அவ்வாறு பெற்ற உணவை உண்டதாகச் செய்தி எங்கும் இல்லை. அவன் குருதிப் பலி இரந்தது, திருமால் முதலிய தேவர்களின் ஆணவத்தை நீக்கி அவர்களை உய்விப்பதற்கேயாம். இறைவன் ஈசுவரன். எல்லா ஐஸ்வர்யங்களையும் கொண்ட பரமேஸ்வரன். எதனையும் இரந்து பெற வேண்டிய வறுமை அவனுக்கில்லை.
இதனை,
“பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே” (1857)
“பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி யென்ப ரெற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையு மடியார்
இரந்துண்டு தன்கழ லெட்டச் செய்தானே “(1858)
எனத் திருமந்திரம் தெளிவடையுமாறு கூறு கின்றது.
சிவபரத்துவத்தின்மீது பொறாமைக் காழ்ப்புக் கொண்ட வைணவர் இந்த வரலற்றைத் திரித்து வேறு கூறுவர். ஒருகாலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே ஐந்துதலை யுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கின்ற-தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையிலொட்டிக் கொள்ளுதலும், அவன், ‘இதற்கு என்செய்வது’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் ’இப்பாவம் தொலையப் பிச்சை யெடுக்க வேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையை விட்டு அகலும்’ என்று உரைக்க , சிவபிரான் பலகாலம் பலதலங்களிலும் சென்று பிச்சை யேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக , பின்பொருநாள் பத்ரிகாச்சிரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது , அப்பெருமான்,’அக்ஷ்யம்’ என்று பிச்சையிட உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது’ என்பது அவர்கள் திரித்து விட்டகதை. இது நாராயணது பரத்துவத்தை வெளியிடுவதென்றும், ஈஸ்வரனென்ற பெயருடைய சிவன் கர்மவயப்பட்டவன் என்றும் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ள மாட்டானென்றும் ஸ்ரீமந்நாராயணே ஸ்ர்வாநிஷ்ட நிவர்த்தகன் என்றும் நன்கு வெளியாக்குமென்று பெருமைப்பட்டுக் கொள்வர்.
பரமசிவனைத் தேவர் முனிவர்களுக்கும் கீழான ஓரான்மாவாகக் கூறி மகிழ்ந்துகொள்ளும் இவர்களின் பொய்யும் புரட்டும் மலிந்த மொழிகளைச் சைவர் பொருட் படுத்தாமல் புறந்தள்ளுவர்.
சிவபெருமான், பரமயோகி மாயோகியாய்த் தனக்கென எதுவும்வேண்டாத் தன்மையனாகியிருந்தே, வேண்டுவார் வேண்டுவதே யன்றி அதற்கும் மேலாய் அருளுவோ னாக உள்ளான் என்பதை, “சீருடைய பெருஞ்செல்வம் பலவகைய சுரர்க்களித்தி திருக்கண் நோக்கால்” என்றுரைத்தார்.
சிவனின் இப்பெருமையை உணர்ந்தோர் ஐம்புலனையும் வென்று ஐந்தவித்த பெருமை உடையோராவர்.
---------------
9. நின்புகழை விளம்ப லுற்றேன் நாத்தினவு விரும்புமாறே
இதுவரை சிவனது நிர்குண சகுண மகிமைகளைப் பேசிய புட்பதந்தர் இனி இந்திய தத்துவதரிசனங்களில் சிலவற்றைக் குறித்துத் தம் கருத்தினை வெளிப்படுத்துகின்றார். இந்தியத் தத்துவ தரிசனங்களில் மிகப்பழமை யானது சாங்கியம் எனப்படும். இதன் ஆசிரியர் கபிலர் எனும்வேதகால முனிவர். இவருடைய கொள்கையே இந்திய தத்துவ ஞானவளர்ச்சிக்கு அடிப்படை.
சாங்கிய மதத்தின்படி மூலப்பிரகிருதி (பகுதிஎன்றும் சொல்லப்படும்) , புருடன் எனும் இரண்டுமே என்றும் உள்ள,அழியாத நித்தப் பொருள்கள்.
மூலப்பிரகிருதி நித்தமாய் வியாபகமாய்ச் சடமாய் எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் சாத்துவிகம் இராசதம் தாமசம் எனும் முக்குணங்களும் ஒப்ப சமமாய் அருவாய் உள்ளது. பிருதுவி (மண்) முதல் தத்துவம் என்றால் மூலப்பிரகிருதி 24 ஆவது தத்துவம்.
மூலப்பிரகிருதியினின்றும் புத்தி முதல் நிலம் ஈறாக 23 தத்துவங்களும் காரியமாகத் தோன்றும். காரியங்கள் விக்ருதி எனப்படும்.
இந்தத் தத்துவங்கள் 24க்கும் வேறாக ஆன்மா அல்லது புருட தத்துவம் எனப்படுமொன்றுண்டு. இது வியாபகமாய், நித்தமாய், அருவாய், பலவாய் அறியும் செயலுமின்றி அறிவு மாத்திரமாய், வேறொன்றற்குக் காரணமாதலோ காரியமாதலோ இன்றி நிற்கும். இது 25ஆம் தத்துவமென்றும்கூறப்படும். இவை என்றுமுள பொருள்கள்
காரணமும் அதன் காரியமும் ‘சத்து’ எனப்படும் நித்திய அழிவிலாப் பொருள்கள். காரியம் அல்லது விக்ருதி என்பது பிரகிருதி அல்லது காரணத்தின் நிலை மாற்றமே. (Nothing but a transformation of Karana (Prakrithi)
‘உள்ளதே தோன்றும்; இல்லது என்றும் தோன்றாது; உள்பொருளுக்கு அழிவில்லை’ எனும் சற்காரிய வாதத்திற்கு சாங்கியமே அடிப்படை வகுத்தது.
புத்த மதத்தில் உயிர் எனும்பொருள் இல்லை. ஞானமே ஆன்மா எனப்படும் ஞானம்- புத்தி. புத்தியே சேதனம் அது ஆன்மாவைச் சார்ந்தது அல்ல.புத்தியே ஆன்மா என்றதனால் பௌத்தம் காரணப்பெயராயிற்று. ( Buddishts allege that Buddhi or the pshychic consciousness is Cetana (in-itself conscious) and not dependent for its apparent consciousness on the enduringAtmA and hence the followers ofthisdoctrine are called Buddhists)
அவ்வாறு தோன்றி அழியும்போது கஸ்தூரியிலெழும் வாசனைபோல முன் அழிவடைந்த ஞானத்தில் தோன்றிய வாசனை பின்னர்த் தோன்றும் ஞானத்தைப் பற்றுவதால் அறிவுமுதலாயின தொடர்ந்து நிகழ்வது போலத் தோன்றும். உள்பொருள் எனப்பட்டவை யெல்லாம் கணந்தோறும்தோன்றி அழியும். பௌத்தர்கள் இக் கொள்கையராதலின் ’கணபங்கவாதிகள்’ எனப்படுவர்.
வைசேடிகர் என்போரும் நையாயிகர்களும் நிலம் நீர், வளி ஆகாசம், காலம், திசை , ஆன்மா,பரமாணு, திக்கு, ஆத்மா ஆகிய திரவியங்களில்(பொருள்) நிலம்,நீர், தீ,வளி எனும் நான்கும் அநித்தப் பொருள்கள்; அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்கள் ஆகாயமாகிய ஐந்தும் நித்தப்பொருள்கள் எனக்கொள்வர்.இவ்வாறு சிலபொருள்கள் நித்தமென்றும் சில பொருள்கள் அநித்தம் எனவும் கொள்வது அவர்களுடையகொள்கை.
‘ இந்தக் கொள்கைகளை மேலிட்டு காதிமோதி வாதாடும் தத்துவப் போர்வீரம் என்னை மருட்டினாலும், திரிபுரம் எரித்தவனே! நான் ,என் பக்குவ மின்மையைக் குறித்துச் சற்றும் நாணாமல், பேரறிவுடையவனைப் போல, உன் புகழை, என் நாத் தின வெடுப்படுதனால் விரித்துப் பாடலுற்றேன்.’ என்கிறார் புட்பதந்தர்.
‘இந்த வாத பிரதிவாதங்கள் தர்க்கிக்க உதவுவனவே யன்றிச் சிவானு பவத்துக்குத் துணையாவன அல்ல. எனவே,அவை என்னை மருட்சி கொள்ளச் செய்தாலும் நான் அவற்றில் மயங்கேன்; உன்னையே புகழ்வேன்’ எனச் சிவத்தின் மகிமையைப் பாடத் தன் விழைவைக் கூறுகின்றார், புட்பதந்தர்.
நித்தியமிச் சகமனைத்து மெனுமொருவன்
ஒருவனநித் தியமே நேர்வான்
நித்தவநித் தியப்பொருளா லிருமையதா
மெனுமொருவன் நிகழு மிந்தத்
தத்துவப்போர் வீரர்செயல் தனைவியந்தேன்.
புரமதன; சற்று நாணேன்;
வித்தகன்போ லுன்புகழை விளம்பலுற்றேன்
நாத்தினவு விரும்பு மாறே. 9
வீரர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. புரமதனன் – திரிபுரங்களை அழித்தவன். வித்தகன் – பேரறிஞன்.
------------
10. சிவ வழிபாடு எப்பயன்தான் ஈயாது?
“(சிவபெருமானது முடியைத் தேடப்போன பிரமாவோடு) கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையையும் தேடப் படுகின்றன; வாக்கு மனசுக்கெட்டாத சிவபெருமானை ஸ்துதித்துப் பத்தியினாலே வணங்கினவராகிய விஷ்ணுவுக்குச் சிவபெருமான் அருள் பாலித்தார்.”
- சரபோபநிடதம்
“யத்பாதம்போருஹத்வந்த்வம் ம்ருக்யதேவிஷ்ணுநா சஹ|
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹோசாநமவாங்மநஸகோசரம்|
ப்கக்த்யா நம்ரதநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத் விபு||
இந்த உபநிடத மொழியைப் புட்பதந்தர் ஒருபாடலில்சிவபிரானின் மகிமையை எடுத்துக் கூறப் பயன்படுத்துகின்றார்.
திருமாலும் பிரமனும் தம்முள் யார் பெரியவர் என்று பூசலிட்டுக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் நடுவில் சிவபிரான் பேரொளிப் பிழம்பாகத் தூண்போல் தோன்றுகிறார். அப்பிழம்பின் அடியையும் முடியையும் யார் காண்கின்றாரோ அவரே பெரியர் அசரீரி உரைக்க, இருவரும், அன்னமாய் விசும்புபறந்து அயன் முடிதேடத் திருமாலும் பன்றியாய் மண்ணகழ்ந்து அடியையும் தேட முயல்கின்றனர்.
அவ்வாறு பலகாலம் சிவபிரானின் பெருமையைக் கண்டு பிடிப்போமென உழல இயலாதவராயினர். நல்லறிவு சற்றே தோன்றத் தலையன்பினால் சிவனைப் பூசை செய்தனர். அந்தச் சோதிமத்தியில் சிவபிரான் உமாசமேதராய் எழுந்தருளினார். உலகத்துக்கு இதஞ் செய்பவராகிய சிவபிரானை மிகுந்த பத்தியினால் தோத்திரம் செய்து வழிபட்டு நலம்பலபெற்றனர்.
கிரீசனே! இவ்வாறு அவர்களது மயக்கத்தினை நீக்கி உன்னுடைய மகிமைகளை அவர்கள் அறியட் தெளிவித்தனை. உன்னை வழிபடுவது எப்பயனைத்தான் ஈயாது?அனைத்தும் தரும்.
பேரொளிநீள் பிழம்பாகி நின்றவுன்றன்
பெருமைகண்டு பிடிப்போ மென்றே
பாரிடந்தும் விண்பறந்தும் அரியயனும்
மாட்டாராய்ப் பயத்த ராயுன்
சீர்பரவப் பத்திசிரத் தையின்மிகுதி
யொடுகிரிச! திகைப்பு நீக்கி
யேர்பரவு பெருமைதெளி வித்தனையுன்
வழிபாடெப் பயனீ யாதே. 10
கிரீச- மலையில் படுத்திருப்பவன், பரமேசுவரன். உன்சீர் பரவத் தெளிவித்தனை என இயைக்க. கிரி+ச = மலையில் உறங்குபவன். கிரி + ஈச = மலையின் தலைவன்
--------------
11. தவவலிமைத் தசமுகன்
தசமுகன், பத்துத் தலைகளைஉடைய இராவணன். பத்துத் தலைகள் அவனுடைய பேராற்றலைச் சுட்டும் குறியீடாகும். அவனுடைய ஆற்றலுக் கெல்லாம் அடிப்படை அவனுடைய தவ வலிமை. ‘முக்கோடி வாழ்நாள், முயன்றுடைய பெருந்தவம், ஊழிமுதல்வனாகிய முதல்வன் முந்நாளில் யாராலும் ‘வெல்லப்படாய்’ எனக் கொடுத்தவரம், உலக னைத்தையும் வென்று கைக் கொண்ட புயவலி ஆகிய பெருமைகளை உடையவன் தசமுகனாகிய இராவணன். இந்தப் பெருமை தசமுகனுக்கு எப்படிக் கிடைத்தது?
புவனமொரு மூன்றிலும் இனியொருவர்
எதிர்பொருநர் பொருந்தா தின்றென்
குவவுபுய மலைதினவு குடையலுறு
குறையுளதென் குறையாச் செல்வம்
தவவலிமைத் தசமுகனெய் தியதுபுர
கரவுன்பொற் றாளின் மேலே
உவகையொடு தனதலையாங் கமலமலர்
வனமலர்வித் துறும்பே றன்றே. 11
புட்பதந்தர் கூறுகின்றார்:
‘மேலுலகம் கீழுலகம் மண்ணுலகமெனும் உலகங்கள் மூன்றினும் இனித் தன்னை எதிர்த்துப் போரிடுவார் ஒருவம் இலாமையால் பெருத்த மலை நிகரும் புயங்கள் போரிடத் தினவு எடுக்கின்றது எனும்குறையுடைய குறையாச் செல்வம் தசமுகன் எய்தியது எவ்வாறெனில், முப்புரங்களையு மெரித்த புரகரனே! உன்னுடைய பொலிவுடைய இருதாள்களின் மீது உளமகிழ்ச்சியுடன், உவப்போடு தனது தலைகளாகிய கமலங்களை (தாமரைமலர்களை) மலர்வித்துப் பெற்ற பெரும் பேறல்லவா?
பிறரெல்லாம் சிவனின் திருவடிகளில் மலரிட்டு வணங்குவர். இராவணன் தன் பத்துத் தலைகளையே மலர்களாக இட்டு வணங்கினான்.
Jagannatha chakravarthi says: ‘sraddha’ (faith) is mental worship (mAnasikasEva), whilst Bhakthi (devotion) is bodily service ( KAyika sEva) for in it there is also bodily action , such as obeisance, kneeling, the folding of the hands in supplicatory prayer and soforth. True service of Siva must bring forth the appropriate fruit for the worshipper’.
-------------
12. கயவர் பெறும் வெறுக்கை
இராவணன் சிவபெருமானிடம்பெற்ற வரத்தின் வலிமையினால் தன்னை எதிர்ப்பவ ரொருவரு மின்றி மூவுலகிலும் தன் அதிகாரத்தைச் செலுத்தினான். அதிகாரம் அவனுடைய மதியை மயக்கியது. தனக்கு எதிராவார் ஒருவருமில்லை என்னும் அகந்தையும் ஆணவமும் ‘வளர்த்த கடா மார்பிற் பாய்தலை’ப் போலத் தனக்கு இத்தகைய வலிமையை அருளிய சிவம் வாழும் கயிலை மலைக்கு எதிராக எழத் தூண்டின. தேரைக்கயிலைக் கெதிராகச் செலுத்தத் தன்பாகனை இராவணன் தூண்டினான்.
பாகன் இராவணனுக்கு அறிவுரை கூறினான். “ இது கடுந்தேராயினும் (கடுமை - வலிமையும்வேகமும் ) வாய்ந்த தேராயினும் கயிலாயமீது விடுந்தேர் அன்று. விட்டாலும் கயிலாயத்தின் மீது செல்லாது. உன்னுடைய வீரம் மகாருத்திரனிடம் வேண்டா. வீரத்தை விட்டொழி. என்னைக் கயிலாயத்தை நோக்கித் தேரோட்டு என முடுகுவது தருமம் அன்று” என மொழிந்தான்.
இவ்வாறு அறவுரை மொழிந்த பாகனைச் சினந்து இராவணன், ”விடு விடு’ என முடுகினன். பாகனும் தேரை முடுக்கினான். இராவணன் கயிலைக்கு விரைவுற்றான்; வரையுற்றான்; எடுக்க முயன்றான். மலை அசைய அம்மை அஞ்சினாள். ஐயன் தன் கால்பெருவிரல் நுனியைச் சிறிது ஊன்றினான்.
அரக்கனது முடியும் தோளும் நெடுநெடு என இற்று வீழ்ந்தன.
சிவனது ஒருவிரல் நுனிக்கே இவ்வாளவு ஆற்றல் எனில் அவனது ஆற்றல் எத்துணைப் பெரிது? இதனை அப்பரடிகள் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார்.
“கடுகிய தேர்செலாது கயிலாயமீது
கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்மம் எனநின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடுவென்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்று வீழ விரலுற்ற பாதம்
நினைவுற்ற தென்றன் மனனே” 12
இராவணன் சிவபக்தன். சிவனை வழிபட்டு உயர்நிலை எய்தினான். ஆயினும் அவனுடைய அரக்க குணம் நீங்கவில்லை; ஆணவம் தலையெடுத்தது. புட்பதந்தர் இறைவன் பத்தனின் குற்றத்தையும் குணமாக் கொண்டு அருளும் இறைவனின் கருணையையும், கயவன் இறைவனிடம் பெற்ற பெருவரமே அவன் பிழை செய்தபோது அவனை ஒறுக்கும் திறத்தையும் நினைவூட்டியது. கயவர் இறைவனிடம் பெறும் பேறு அவர்களுடைய மதியை மயக்கி அழிவையே தரும் எனக் கூறிய புட்பதந்தர் இறைவனின் வேற்றுமை பாராட்டாத கருணையின் மகிமையையும் பேறு பெற்றவன் பிழை செய்யின் அவனைத் தண்டித்துத் திருத்தும் மகிமையையும் போற்றுகின்றார்.
“உன்னைவழி பட்டடைந்த அருட்டுளியாற்
றழைத்தவலி யுடைத்தாய் ஓங்கும்
தன்னுடைய கரவனத்தா லுன்கயிலை
மலைபெயர்த்த சமர்த்தன் சாயப்
பன்னுமெழிற் பவளவிரற் கொழுந்தையழுத்
தினையவன்பா தாளம் பாய்ந்த
பின்னுநிலை பெற்றிலன்மன் கயவர்பெறும்
வெறுக்கைகளி பெருக்கு மாலோ.”
சமர்த்தன் – இகழ்ச்சிக் குறிப்பு. துளி – மழை. மழைத்துளியால் காடு தழைத்ததுபோலச் சிவனது அருட்டுளியால் இராவணனது தோள்கள் ஆகிய (கரவனம்) வனம் தழைத்தன. களி – அறிவு மயக்கம்.
உயர்ந்தோர் பெற்ற வரத்தால் அவர்களும் உயர்வர்; உலகமும் உயரும். கயவர் பெற்ற வரத்தால் அவர்கள் அழிவர்; உலகமும் அவர்களால் துயருறும்.
According to old traditions (Pura kila) Ravana used to go everyday to Mount KailAsh toworship Siva. He found this however troublesome and thought to save himself this trouble of a daily journey by carrying off the whole mountain to his abode to Lanka . He began thereupon to pull up the mountain which trembled as he assaulted it. Parvathi Siva’s wife became afraid and embraced her husband for safety. SivA upon this disturbance merely moved his toe and sent Ravana tumbling down through space to the nether worlds from which he was subsequently raised by SivA. Though the strength of Ravana came to him from the Supreme he forgot this through his wicked nature and assaulted the heaven of Siva.
The wicked in prosperity loses his senses, that is, forgets the source of his prosperity.
-------------
13. சிவகதியும் அரிதாகாதே
வரத!திரி புவனமெலா மேவல்செயத்
தன்னாணை வைத்தான் தேவர்
அரசர்திருக் கீழ்ப்படுத்தான் பாணனுன
தருச்சனைசெ யாற்ற லாலே;
பெரியவியப் பிதிலென்னை? நினதடிக்கீழ்த்
தலைவணங்கப் பெற்றால் எய்தற்கு
அரியதென வுலதெந்தப் பெறும்பேறோ?
சிவகதியு மரிதா காதே. 13
வரங்கள் அளிப்பவனே! பாணன் என்னும் அசுரன் மூவுலகங்களையும் வென்று தன் ஆணைக்குக் கீழ்ப்படியச் செய்தான்; தேவர் மற்றுமரசர்களைத் தன் கீழ்ப்படியச் செய்தான்; அவர்களுடைய செல்வங்கள் எல்லாம் தனக்கு அடங்கிய தாக்கினான். இவற்றை இவன் செய்தது, உன்னை அருச்சனை செய்த ஆற்றலாலே. இவ்வாறு இவன் செய்ததில் ஆச்சரியமென்ன உள்ளது? உனது திருவடிக்கீழ்த் தலைவைத்து வணங்கப் பெற்றால் அடைய அரிதான பெரும் பேறு உளதோ? (இல்லை) அவ்வாறு வணங்குவாருக்குச் சிவகதியும் அரிதன்று.
---------------
14. வெந்தோடந் தானும் பேரழகே தரும்
சுரர்களும் அசுரர்களும் தங்களுக்குள் பகைமை கொண்டு நெடுங்காலம் போரிட்டமையால் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டனர். நீண்ட ஆயுளுடன் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள அமுதம் பெறவிழைந்தனர். சிவனின் அருளை நாடாமல், மாறுபட்ட கொள்கையுடைய அரசியல்கட்சியினர் சுயநலத்துக்காகக் கூட்டணி சேர்வதைப்போலச் சுரர்களும் அசுரர்களும் பிரஜாபதியாகிய பிரமனின் அறிவுரைப்படி, பாற்கடலைக்கடைந்து அமுதம்பெற நினைந்தனர். பாற் கடலைக்கடையத் திருமாலி னுதவியை நாடினர்.
திருமால் உளத்தில் எண்ணிப் பார்த்து, “மந்தரமலையை மத்தென நாட்டி வாசுகிப் பாம்பினைக் கயிறெனப் பூட்டித், திருப்பாற் கடலினைக் கடைந்து சுவையமிழ்தம் எடுக்கலாம்” என்றார் . தேவரும் அசுரரும் அவ்வாறே உவப்புடன் செய்யத் துணிந்தனர்.
மந்தரமலையைப் பாற்கடலில் நாட்டி வாசுகியைக் கயிறாகப் பூட்டிக் தலைப்பக்கம் தேவரும் வால்பக்கமசுரரும் பற்றிக் கடையும்போது வேதனை தாங்க இயலாமல் வாசுகி நஞ்சினைக் கக்கியது. பாற்கடலில் அமுதத்திற்குப் பதில் முதலில் நஞ்சு திரண்டு வந்தது. இவ்விருவகை நஞ்சுகளும் ‘ஆல காலம்’ எனப்பட்டன.
அந்தக்கொடியவிடத்தின் வெப்பம் தாக்கியதால் தேவர்களும் அசுரர்களும் பாம்பினைக் கைவிட்டுச் சிதறி ஓடினர். திருமால் தன் இயற்கை வெண்ணிறம் நீங்கிக் கருநிறமடைந்தான். அனைவரும் சிவபெருமானைப் புகல் அடைந்தனர். ‘ அருளாய் பிரானே” என அவர்கள் வேண்டக் ‘கண்டாரைக் கொல்லும் நஞ்சினை’ இறைவன் பேரருள் கொண்டு உண்டான்; உண்டு அவர்கள் நஞ்சால் எரிந்து விடாமல் காத்தான். பிறரை எரியாமல் காத்த அவனே தேவதேவன் . அவனே அனைத்துயிருக்கும் புகல்.
“நெற்றியிற் கண் விளங்கும் தெய்வமே! இந்த அண்டங்களழியும் ஊழிக் காலத்தில்தானே நமக்கும் முடிவு என நாங்கள் இருந்தோம்? பேரூழி வரும் முன்னே இந்த ஆலகாலம் வந்தோ நாங்கள் முடிவெய்துவது? என வருந்திய தேவாசுரர்களின் துயரம் தீர்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைய நீ நஞ்சுண்டு கண்டங் கறுத்தாய்.
ஆரழல்போல் சிவந்த உன் திருமேனியில் கழுத்துக் கருநிறம் பெற்றாய். சிவந்த அழகிய திருமேனியில் கண்டக் கறை திருஷ்டிப் பொட்டுப்போல, உலகுக்கு ஒரு உண்மையை விளக்குகின்றது.
உலகினைக் காப்பாற்றி வரும் பெருங்கருணையாளர் அடையும் கொடிய தோஷமும் அவர்களுக்குப் பேரழகாகவே திகழும் “
“அந்தோவிப் பிரமாண்ட மழிகாலம்
வருமுன்னே ஆல காலம்
வந்தோவிங் கழிவதென வானவரும்
தானவரும் வருந்தல் தீர்ந்தே
சந்தோட முறநுகர்ந்து களங்கறுத்தாய்;
உலகுபுரந் தருவோர்க் கெய்தும்
வெந்தோடந் தானுமொரு பேரழகே
தருநுதற்கண் விளங்குந் தேவே.”
[களம் கறுத்தாய் – கழுத்துக் கருநிறம் பெற்றாய். வெம்தோடம் – தோஷம்,கொடிய குற்றம்.]
வெப்பால் அமரர் குழுவெல்லாம்
வெருவும் விடமெவ் விதம்பார்த்தாய்
கைப்போ தகத்துத் தாங்கினாய்
கனிந்த நாவற் பழங்கொல்லோ
செப்பாய் நாவில் வைத்தனையே
சித்த குளிகை யோசம்போ
தப்பா மிடற்றில் நிறுவினையே
சாம மணியோ தயைக்கடலே.
[சிவானந்த லகரி 31. வெப்பு – சூடு. கைப்போது – கையாகிய மலர். சாமமணி – கருமைநிற மணி]
---------------
15. ஐம்புலன் களைந்தார்ப் பேணுக
புலன்கள்வழி பொறி ஓடாமல் காத்தொழுகுவானை எல்லா அறநூல்களும் போற்றுகின்றன. புலன்களை அடக்குவதற்கு மனத் திண்மை இன்றியமையாது வேண்டப்படும். தெய்வப்புலவரும் இதனைக் கூறுகின்றார். திண்மையென்னும் தோட்டியால் பொறிகளாகிய யானை ஐந்தனையும் தத்தம் புலன்களின்மேற் செல்லாமல் காப்பவன், எல்லா உலகத்தினும் மிக்க உலகமாகப் போற்றப்படும் வீட்டுலகத்திற்கு வித்துப் போன்றவன் என்றார். இங்கு இவ்வுலகில் அவன் வித்தாகிறான்; வீட்டுலகிற்சென்று முளைக்கின்றான்.
பொறிகள், அவற்றை உடையவனுக்குக் கருவிகள். உடையவனின் விருப்பத்திற் கேற்பக் கருவிகள் இயங்க வேண்டுமே அல்லாமல் கருவிகளின் வழியே சென்று உடையான் அவற்றிற்கு அடிமையாகி விடலாகாது.
புலனுக்கு அடிமையானவன் அழிவான். ஐம்பொறிகளையும் அடக்கியவனின் சிறப்பைச் சுட்டிக் காட்டியது போலவே, ஐம்பொறி வழியே செல்வோனினின் இழிவையும் தெய்வப் புலவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி” (25)
சபித்த முனிவன் ஐந்தவித்தவன். இந்திரன் ஐந்தவியாது சாபமுற்றுநின்று அவித்தவனது ஆற்றலை உணர்த்தினான். ஆதலினால் ஐந்தவித்தவனது ஆற்றலுக்கு அமரலோகத்துக்கு அதிபதியாகிய இந்திரனே சாட்சியானான்.
யார் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் நீடு வாழ்வார்? தெய்வப்புலவர் கூறுகின்றார்
“பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” (6)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் வென்றவனது மெய்யான ஒழுக்க நெறியில் வழுவாது நின்றவர்களே பிறப்பிறப்பின்றி ஒருதன்மையராய் நெடிது வாழ்வார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் யார்?
பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனே. அவன் பரமயோகி; மாயோகி; பகரொணாத மாஞானி. அவன் புலன்களை வென்றவன் என்பதைத் திருஞானசம்பந்த நாயனாரும்,
“சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள்
வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே”
அவன் உண்டது பிறருண்ணா நஞ்சே; தேவாமிர்தமன்று. உடுத்தது தோலே; பட்டுப் பீதாம்பரங்களன்று. பூசுவது வெண்ணீற்றுச் சாம்பலே; நறுமணக் கலவைகளன்று. பூண்பது என்பும் பாம்பும்; விலைமதிப்பேறிய அணிகலன்கள் அன்று; இருப்பிடம் அம்பலமே; மாடமாளிகையன்று. அவன் விரும்புவது ஆடம்பரப் பூசனை யன்று.
சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். அதாவது யாக்கையில் வந்து பிறவாத மகாதேவன். ஆதலால் இயல்பாகவே அவன் புலன்களை வென்றவன். அவனை வழிபடுகின்ற கிரியைகளிலும் புலன் நுகர்ச்சிக்கு உரிய பொருள்கள் தேவைப்படுவதில்லை. நீரும் பச்சிலையுமாகிய எளிய பூசனையை ஏற்றுக் கொண்டு வீட்டுலகமாகிய பெரிய செல்வத்தை அன்பர்க்கு அளிப்பவன்.
“குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும்;
படங்கொள் பாயும் பூவணையும் தரும்” பரமேட்டி அவன்.
(திருவிளையாடற் புராணம், இசைவாது வென்ற படலம்).
எளிதில் மகிழ்ச்சி கொள்பவன் எனும்பொருளில், ‘ஆசுதோஷக:’ எனும் திருநாமமும் சிவனுக்கு உண்டு.
பரமயோகியாகிய அவனை வழிபடுவோரும் புலனை வெல்வர். மாதுசொன்ன சூளால் இளமையைத் துறந்த திருநீலகண்டநாயனாரை, “வென்ற ஐம்புலனில் மிக்கீர்” என இறைவனே அழைத்ததாகத் தெய்வச் சேக்கிழார் பாடுகின்றார். பொறிவாயில் ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்க நெறி சிவநெறி. சிவநெறி புலனொடுக்கப் பயிற்றும் நெறி.
சிவனுடைய மகிமையாக அவனுடைய ஐம்புல வெற்றியைப் புட்பதந்தர் நினைவு கூர்ந்து போற்றுகின்றார்.
சூரபன்மன் முதலிய அசுரர்களால் துன்புற்ற இந்திராதி தேவர்கள் பரமேசுவரனை அடைக்கலம் புகுகின்றனர். அவர் தமக்கொரு வீரமகன் பிறப்பான், அவனால் தேவர்களின் அசுரபயம் நீங்கும் என்றும் அருளினார். அவ்வாறு அவர் அருளும்போது தேவியைவிட்டு நீங்கிப் பரம யோகியாக இருந்தார்.
சிவன் சத்தியோடு கூடினால்தானே மகன் பிறப்பன் என எண்ணிய தேவர்கள், அதற்கு அவனை வழிபடாமல், திருமாலின் யோசனையின் படி சிவனுக்கு உமைமேல் கருத்துப் பிறக்கச் செய்ய மன்மதனை நாடினர்.
மன்மதன் கையில் ஏந்திய மலர்வாளி யார்மேல் செலுத்தினாலும் அவரை வென்றே மீளும். சுரர் அசுரர் அனைவரையும் தன்னுடைய மலரம்பினால் வென்ற ஜெசசீலன் மன்மதன். ஆயினும் அவன் சிவனின் ஆற்றலை நன்கறிந்தவன்.
திருமால் முதலிய தேவர்களின் சாபத்தாலழிவதைக் காட்டிலும் சிவனின் சினத்துக்காளாதல் சிறந்ததே எனச் சிவன்மேல் அம்பு தொடுத்தான். சிறியோர் நட்பைக் காட்டிலும் பெரியோர் சினம் நன்மையே தருமென அவன் நம்பினான். சிவனின் நெறிக் கண்ணால் சாம்பரானான்; அவனுடை மனைவி இரதிக்கு இரங்கி அருளப் பெற்ற நினைவுருவாக நிலைபெற்றான்.
புட்பதந்தர் சிவனின் இந்த மகிமையைக் கூறிப் போற்றினார்.
“சிவனே! காமவேள் உன்னைப் பிற தேவர்களைப் போல நினைந்து உன்மேல் மலரம்புகளை ஏவினான். உன்னால் எரிக்கப்பட்டுப் பின் கட்புலனாகும் பருவுடல் பெறாது, நினைவில் மட்டும் அறியக் கூடிய நினைவுரு அடையப் பெற்று நிலைபெற்றவனாயினன். அநங்கன் (உருவமிலாதவன்) ஆயினன்.
காமவேள் தன் செயலால் உலகத்துக்கு ஒஉ உண்மையை விளக்கினான்.
“ஐந்து புலன்களையும் வென்ற வெற்றியுடையவரை மதியாமை பெருந்தீங்கு விளைக்கும்”
“வென்றன்றி மீளாத விசிகமத
வேளமரர் அசுரர் வேறு
துன்றும்பல் லுயிரனைத்தும் வென்றாணை
செலுத்துசெய சீலன் பொங்கி
நின்றன்னைப் பிறதேவர் போனினைந்து
நினைவுருவா நிலைய னானான்
வென்றைந்து புலங்களைந்தார்ப் பேணாமை
பெருந்தீங்கு விளைக்குந் தானே.” 15
விசிகம் – அம்பு. மதவேள் – மன்மதன்.
-------------
16. பேரிறைமை சிறிது இடுக்கண் படுத்துமாறே
முன்னம் ஒரு முறை ஒரு அரக்கன் பிரமனை வழிபட்டு ஒரு வரம் கேட்டான். இந்த உலகத்தை முற்றாக அழிக்கும் ஆற்றலே அவன் கேட்டவரம். இரப்பதை மறுக்க முடியாமலும் இரப்பதை ஈந்தால் வருங் கேட்டினாலும் பிரமன் கலக்கமுற்றான். இரந்த அவ்வரத்தைப் பெற மற்றொரு சமயம் வரும்படி அரக்கனிடம் கூறி அவனைப் போக்கிவிட்டுக் காலந் தாழ்த்தான். . இதை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று குறையுற்றார்கள்.
ஒருவன் கொடுப்பதைத் தடுப்பது பாவம். “கொடுப்பது தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்” என்பது தெய்வப்புலவர் வாக்கு அல்லவா? அதேசமயம், அத்தெய்வப்புலவரே, “ நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர், பண்பறிந்து ஆற்றாக் கடை” என்றும் அறிவுறுத்தி யுள்ளார்.
எனவே சிவன் மாற்று வழி நினைந்தான். பிரமன் அசுரன் கேட்ட வரத்தினை கொடுக்கக் காலந் தாழ்க்குமாறு அவனுடைய மனத்தைத் திசை திரும்புமாறு செய்ய, ஊழிக்கூத்துப் போல ஆடத் தொடங்கினான். பிரமனின் வரத்தினால் உலகம் அழிந்துவிடாமல் காக்க இறைவன் ஆடிய இந்தக் கூத்தின்போது சில துன்பங்களும் உயிர்களுக்கு ஏற்பட்டன.
“அடிபேரின் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் – கடகம்
மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தாங்கு” (காரைக்கால் அம்மையார்)
இறைவன் தன்னுடைய இந்தக் கூத்தினால் மூவுலகில் வாழும் உயிர்கள் துன்பமுறும் என அறிந்தே ஆடினான். வரத்தால் விளையும் பேரழிவைத் தடுக்க இத்துன்பங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இந்தக் கூத்தினால் பிரமாவின் கவனம் திசை திரும்பியது. அசுரன் கேட்ட வரத்திற் குரிய காலம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. இறைவன் ஆடிய கூத்தைச் சந்தியா நடனம் என்றும் கூறுவர். அக்கூத்தினால் மாலைப் பொழுதும் இரவும் தோன்றிப் பின் காலையும் பகலும் பிறக்கின்றன. இரவிருள் உயிர்கட்குத் துன்பமும் பகலொளி மகிழ்ச்சியும் தருகின்றன.
அடியசைவி னொடியினுல கழியுமெனப்
பேரைய மடையு மோங்கு
நெடுவிசும்பி லுடுநிரைகள் சுழலுமெழு
நிரையனைய நீண்ட தோளால்
சடையசையத் தேவுலகஞ் சலிப்படையும்
தாண்டவம்செய் சமயத் தன்பாற்
படிபுரக்க நடமிடுதி பேரிறைமை
சிறிதிடுக்கட் படுத்து மாறே. 16
விசும்பு – ஆகாயம். உடுநிரைகள் – நட்சத்திரக் கூட்டங்கள். எழு – பரிகை;தூண். தாண்டவம்- மாலைக்காலநடனம். படிபுரக்க- உலகத்தைக் காக்க. பேரழிவினின்றும் காக்கும் செயல்களால் சிறிய இடுக்கண் வரினும் ஏற்கலாம் என்பது கருத்து. இதை இராஜ இராட்சச நியாயம் என்பர் வடமொழியாளர்.
அரக்கர்கள் சிலர் ஒரு அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட நகரினை அழிக்க முற்பட்டனர். அரசன் தன் படைகளை ஏவி அரக்கர்களை அழிக்க ஆணையிட்டான். போர் மூண்டது. போரினால் அந்நகரில் வாழும் மக்களுக்குச் சில துன்பங்களு மேற்பட்டன. அரக்கர்களால் ஏற்படக் கூடிய தீங்கினை விலக்கப் போரினால் விளைந்த துன்பத்தினை மக்கள் தாங்கிக் கொண்டனர். தாங்கிக் கொள்ள வேண்டுமென்பது நியதி.
Such is the nature of things that it is not possible to do good without some accompanying evil. When we look at the whole sub specie aenitatis what we thought to be evil when considered as a fact detached from its surroundings’ is no longer seen to such when taken as part of a whole which is working for good. So with the dance of Siva. (Arthor Avlon)
----------------
17. நினதரிய திருமேனிப் பெருமை எவர் அறிவர்!
பகீரத மன்னன், தன் மூதாதையரின் நற்கதிக்காக விண்ணுலகிலிருந்த கங்கையை மண்ணுலகுக்கு வந்து அவர்கள் உடல்கள் எரிந்த சாம்பல் குவியலின் மீது பாய வேண்டித் தவமிருந்தான். காட்சி கொடுத்த கங்கை தான் மண்ணுலகில் இறங்கினால் தன்னுடைய வேகத்தை நிலவுலகம் தாங்காதென்றும் அதனைத் தாங்கும் ஆற்றல் பெற்ற ஒருவனை அணுகித் தன்னைத் தாங்கிக் கொள்ள இசைவு பெறும்படியும் கூறி மறைந்தாள்.
பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். இறைவன் கங்கை இறங்கும்போது தன் சடையில் தாங்கிக் கொள்வதாகப் பகீரதனுக்கு வரமளித்தார்.
கங்கை வெகு ஆக்ரோஷமாக கடுவேகத்துடன் நிலம் நோக்கிப் பாய்ந்தாள் . வெள்ளம் வானம் முழுதும் பரவி நிறைந்தது. ஆகாயத்தில் நிறைந்துள்ள விண்மீன்களின் வெண்மை நிறம், வெள்ளத்தின் நுரைகளிலும் அலைகளிலும் பரவியது. இவ்வாறு வேகமுடன் பாய்ந்த பெருவெள்ளத்தை இறைவன் தன் சடைமுடி ஒன்றின் நுனியில் தாங்கினான்.
“ஜெகதீசனே ! உலகை அண்டப்பரப்பையே அழிப்பதுபோலப் பாய்ந்து வந்த கங்கைப் பெருவெள்ளம் உன் சடை முடியின் ஒரு மயிர்முனையில் பனித்துளியாக விளங்கும். அதுவே பூமியைச் சூழ்ந்த கடல்களின் வறட்சியை நீக்கும். என்றால், ஐயனே!, உன் திருமேனியின் மகிமையைத் தெளியும் அறிவுடையவர் யாரே உளர்? நின் திருமேனியின் மகிமையை எவராலும் தெளிய இயலாது.
அகல்வான முழுதுநிறைந் துடுக்கணத்தின்
குணத்தினுரை யலைமே லேந்தி
மிகவேக முடனிழிந்த கங்கைபனித்
துளியாக விளங்கு முன்மின்
நிகர்வேணி மயிர்முனையில் நிலம்வளைந்த
கடல்நிரப்பு நீக்கு மாயின்
செகதீச நினதரிய திருமேனிப்
பெருமையெவர் தெளிநீ ராரே. 18
உடுக்கணம்- நட்சத்திரக் கூட்டம். அவற்றின் குணம் – வெண்மைநிறம்.
Arthor Avlon;
The Greatmess of His body is celebrated.
The celestial Ganges MandAkini, the Milky Way. The same stream is in the heavens Mandakini, on earth Ganga and in the nether world Bogavathi.
Even the heavenly Ganges but apportion of whose waters were sufficient to surround the world appears as a mere drop on Siva’s head.
---------------
18. ‘ஆடுவதிற் பலனாய்தல் அமைவாகாதே”
முன்னம் ஒருகாலத்தில் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் அசுரர்கள் பாசுபத விரதம்மேற்கொண்டு, சிவனை வழிபட்டு வரம்பல பெற்றார்கள். வரவலிமை பெற்ற அவர்கள் விஷ்ணுவின் மாயையில் அகப்பட்டுத் தமது பாசுபத விரதத்தையும் சிவபூசையையும் விடுத்து உயிர்களை நலியத் தொடங்கினர்.
அவர்களுடைய வரலாற்றை மகாபாரதம் கூறுகின்றது.
தேவர்கள் அந்த அசுரர்களை அழிக்கச் சத்தியிலராக இருந்தனர். தேவர்களுள்ளே வியாக்கிரமாயுள்ளோர் (மேன்மை) பூமி தேராகவும் பிரமா சாரதியாகவும் மற்றைத் தேவர்களெலாம் அத்தேருக்கு அங்கங்க ளாகவும் அமைய, அக்கிகினியையும் சோமனையும் விஷ்ணுவையும் முறையே பாணத்தின் அடியாகவும் நடுவாகவும் நுனியாகவும் வாயுவை பாணத்தின் இறகாகவும் கொண்ட அஸ்திரத்தை எடுத்துச் சிவபெருமான் தமது திருவடியைத் தேரிலே வைத்தார். அங்ஙனம் திருவடியை வைத்தபோது பாரம் பொறுக்காமல் இரதம் இற்றது.”
“ஒருகணம் முப்புரங்களும் ஒன்றுசேர்ந்தன. சிவபிரானுடைய புன்முறுவலக்கினியும் பாணாக்கினியும் இயைந்து திரிபுரத்தினைக் கணத்தில் தகித்தன. அசுரர்கள் புன்முறுவலக்கினியினாலே தகிக்கப்பட்டார்” – உபதேசகாண்டம்.
சிவபெருமான் ஏன் சிரித்தான்?
தேராகவும் படைகளாகவும் அமைந்திருந்த தேவர்கள் சிவபிரானது ஆற்றலை நினையாது, தம் துணை இருப்பதாலேயே சிவபிரான் முப்புராதிகளை எதிர்க்கத் துணிந்தான் என மனதில் கருதினர். உள்ளுவார் உள்ளுவ தெல்லாம் உடனிருந்தறியும் சிவன் தேவர்களின் மனவோட்டத்தை அறிந்தார். அவர்களின் அறியாமை அவருக்குப் புன்னகை விளைத்தது. தேரையோ,படைக்கலன்களையோ பயன்படுத்தாமல் புன்னகையினாலேயே முப்புரங்களையும் அழித்தார். சங்கல்பத்தினாலேயே எவற்றையும்சாதிக்கும் பேராற்றல் அவருடைய எண் குணங்களில் ஒன்றாம்.
சிவனின் இந்த மகிமையைப் புட்பதந்தர் போற்றி மகிழ்கிறார்.
வையநெடு வையமதை யோட்டுபவன்
சததுருதி, மலையே விற்கை
வையசுட ராழியவன் வைந்நுனைய
வாளி,வைய மாட்டு மாழி
செய்யசுடர் வெண்சுடராச் செய்துதிரி
புரதிரணந் தீத்தா யென்பர்
ஐயனுடைப் பொருள்களைக்கொண் டாடுவதிற்
பலனாய்தல் அமைவா காதே.
இறைவனே! பூவுலகமே வலிய பெரிய தேர்; அதனைச் செலுத்தும் தேர்ப்பாகன் பிரமன்; நீ கையில் ஏந்திய வில் திண்ணிய மேருமலை; வையசுடராழியவன்- கூர்மையும் ஒளியும் பொருந்திய சக்கரமேந்தியவன், திருமால். திருமால் கூரிய அம்பு வாளி – அம்பு. வையம் ஆட்டும் ஆழி செய்ய சுடர் வெண்சுடர்- தேரினை இயங்கச் செய்கின்ற சக்கரங்கள் சூரியனும் சந்திரனும். ஆட்டும்- இயக்கும். ஆழி – சக்கரம்,உருளை. செஞ்சுடர் – சூரியன். வெண்சுடர் – சந்திரன். திரிபுரதிரணம் தீர்த்தாய்- முப்புரங்களாகிய துரும்பை எரித்தாய். திரணம் – துரும்பு, புல் எனலும் ஆம்.
உடைப்பொருள்களைக் கொண்டு ஆடுவது- தனது உடைமைப் பொருள்களைக் கொண்டு விளையாடுவது. ஆடுவது- விளையாடுவது. ஆய்வு அமைவு ஆகாது – ஆராய்வது பொருத்தமாகாது.
ஐயன் உடைப் பொருள்களைக் கொண்டு ஆடுவதின் பலன் ஆய்தல் அமைவு ஆகாதே-
துரும்பு அல்லது புல் போன்ற எளிய முப்புரங்களை அழிப்பதற்கு ஐயன் இத்துணைப் பொருள்களைக் கொண்டதேன்? நகத்தால் கிள்ளி எறியக் கூடிய பொருளை யாரும் கோடாலியால் வெட்டமாட்டார்கள். சிவன் தன் சங்கல்பத்தினாலேயே இதனைச் செய்திருக்க முடியும். சிவனுடைய சங்கல்பம் எதனையும் சார்ந்ததல்ல. சிவன் போருக்குரிய படைக்கலன்கள் இன்றியே திரிபுரத்தை அழித்திருக்க முடியும். அவற்றை அவன் ஏந்தியது, ஒரு (பயன் குறித்த) விளையாட்டே.
Why do so much to destroy that which is but grass before Thee? No one uses an axe when a finger nail is sufficient. He could have done it of His mere wish. The will of the God is not dependent on anything. He could have done without them but the play of His will selected them as the instruments of His purpose. (Arthor Avlon).
-------------------
19. அன்பதுவே திருவாழி உருவாகி… …
ஒருமுறை அசுரர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களெல்லாரும் திரண்டு விஷ்ணுவைச் சரண் அடைந்து, “ தேவரீரே! தீயோரை அழித்து நல்லவர்களைக் காப்பதற்கும் சிறப்பாக எங்களைப் புரப்பதற்கும் சிவபெருமானால் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அசுரர்களை அழித்து எங்களைக் காக்கவேண்டும்” என வேண்டினர்.
அதனைக் கேட்டு விஷ்ணு கூறுவார்.”தேவர்களே ! அவ்வசுரர்களை வெல்ல எம்மால் முடியாது; ஏனெனில் எனது சுதர்சன சக்கரம் ததீசி முனிவருடைய வஜ்ராயுதம் நிகர்த்த எலும்பிற்பட்டு முனை ஒடிந்துபோயிற்று” என்றார்.
அதனைக் கேட்டுத் தேவர்கள் மீட்டும் உரைப்பாராயினர்.” சுவாமீ! ஜலந்தராசுரனைக் கொல்லுமாறுசிவபெருமானால் ஓர் சக்கரம் அமைக்கப் பெற்றதன்றோ; அதனைப் பெறுதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என ,விஷ்ணுவும் அது சரி யென்று உடன்பட்டு அச்சக்கரத்தைப் பெறுதலைக் கருதி , காஞ்சிபுரத்துக்குப் போய், அங்கே சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் பூசித்து வந்தார்.
சிவபெருமான் தன்மேல் விஷ்ணுவுக்கு உள்ள மேலான அன்பை உலகுக்கு உணர்த்த ஒருநாள் ஆயிரம் பூவில் ஒரு பூவினை மறைத்தார். ஆயிரத்தில் ஒரு பூக் குறைவதைக் கண்ட விஷ்ணு , தாமரை மலர் போன்ற தன் கண்ணினை இடந்து இறைவன் திருவடிமேற் சாத்தினர். விஷ்ணுவின் பத்தியை மெச்சிய இறைவன், அவர் விரும்பியவாறு சக்கரம் ஈந்தனன். (உபதேசகாண்டம்)
சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் ஈந்ததைத் திருமுறைகள் போற்றுகின்றன.
“தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை பெருமா னுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக் களித்த அவனாம் நமக்கொர் சரணே”
(அப்பர், தசபுராணம்)
யோ வாமபாதார்ச்சித விஷ்ணு நேத்ரஸ் தஸ்மை ததௌ சக்ரமதீவ ஹ்ருஷ்ட: | தஸ்மை ருத்ராய நமோஸ்து|
“எவர் வலது பாதத்திலே பூசிக்கப்பட்டவிஷ்ணுவின் நேத்திரத்தை யுடையராய், (அதனால்) மிகமகிழ்வுற்று அந்த விஷ்ணுவுக்குச் சக்கரத்தைக் கொடுத்தாரோ, அவ்வியல்பினராகிய சிவபெருமானுகு நமஸ்காரம் உளதாகுக” சரபோபநிடதம்.
அன்பே சுதர்சன சக்கரமாயிற்று எனச் சிவன்மேல் திருமாலுக்கிருந்த பத்தியின் மகிமையைப் புட்பதந்தர் போற்றுகின்றார்.
“செங்கணெடு மால்கமல மாயிரங்கொண்
டுன்பூசை சிறக்கச் செய்வாற்
கங்கணொன்று குறையுறக்கண் டங்கணொன்று
பறித்தருச்சித் தருள்பெற் றானால்
சிங்கலரும் அன்பதுவே திருவாழி
யுருவாகிச் செகங்கண் மூன்றும்
எங்கணுமோ ரிடுக்கணுறா தினிதளிக்கின்
றதுபுரமூன் றெரித்த கோவே.”
திரிபுரம் எரித்த கோவே! உன்னிடத்து வைக்கும் குறைவற்ற அன்பே திருவாழி (சுதர்சனச் சக்கரம்) உருவாகி மூவுலகங்களையும் இடுக்கண் உறாது காக்கின்றது.
‘உண்மையில், திரிபுரமெரித்தவனே! உன் மீது வைக்கும் பத்தியாகிய அன்பே மூவுலகையும் காக்கின்றது. “
அங்கண் ஒன்று குறையுற – அவ்விடத்தில் ஒருபூக் குறைய. அங்கண் ஒன்று பறித்து – அழகிய கண்களில் ஒன்றை இடந்து. சிங்கல் – குறைவுறுதல். ஆழி – சக்கரம்.
Vishnu was wont to worship Siva with a thousand lotuses. Finding one day that a lotus was missing, He, rather than break His rule of worship, plucked out His own eye to make up the number of a thousand. For this devotion Siva gave Him the Sudarsana Cakra or Discus which Vishnu always bears.
This discus is itself devotion; devotion, as it were, materialized; and this devotion again it is which saves the world and not any mere material instrument . (Arthor Avlon)
--------------
20. மறையோர் சிரத்தையுடன் வேள்வி செய்வதேன்?
ஒருபலனை விரும்பிச் செய்யும் யாகத்திற்குத் தமிழில் வேள்வி என்று பெயர். வேட்டல் என்றால் விரும்புதல் என்று பொருள். வேள்வி வேட்டல் என்பது முறையான சொல்லாட்சி.
வேள்விகள் ஐவகைப்படும் எனத் தமிழ் இலக்கியங்கள்கூறுகின்றன. ஐவேள்வி வைதிகமுறையிலும் சைவமுறையிலும் தம்முள் வேறுபடும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார்,
“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை” (43)
எனும் குறளில் வைதிகவேள்வி ஐந்தினையும் கூறுகின்றார். வைதிக வேள்விகள் ஐந்தாவன: 1. பிரமவேள்வி. 2. தேவவேள்வி. 3.மனிதவேள்வி. 4.உயிர்வேள்வி. 5. பிதிர் வேள்வி என்பன.
வேதம் ஓதுதல் பிரமவேள்வியிலும் இறைவழிபாடு தேவவேள்வி யிலும் விருந்தோம்பல் மனித வேள்வியிலும் உயிர்களிடத்து இரக்கங் கொள்ளுதல் உயிர்வேள்வியிலும் தென்புலத்தார் கடன் செய்தல் பிதிர் வேள்வியிலும் அடங்கும்.
சைவ நெறியில் வேள்விகள் ஐந்தாவன: 1.கன்ம வேள்வி. 2.தவவேள்வி. 3. செபவேள்வி.4. தியானவேள்வி. 5. ஞானவேள்வி.என்பனவாம்.
வைதிக வேள்வி ஐந்தும் சைவவேள்விகளுள் ஒன்றான கன்மவேள்வியினுள் அடங்கும் வேட்டல் முடிந்தவுடனேயே செயலும் நிறைவு பெறுகின்றது. வேட்டதன் பயன் உடனே கிட்டுவதில்லை. பசித்தவனுக்கு உளவு அளித்தல் மனித வேள்வி. உணவு கொடுத்தவுடன் கொடுத்தல் நிறைவு பெறுகின்றது. உணவினைப் பெற்றவன் அதனை உண்டு பசி நீங்கியவுடன் வேள்விக் கர்மம் முடிந்து விடுகின்றது.
அழிந்துபோன கர்மம், (உண்ட உணவு,) பலனை அளிப்பதில்லை. வேள்விப் பயனாகிய புண்ணியம் வேட்டவனுக்கு எவ்வாறு வந்து எய்துகின்றது?
சிவனே வேள்வியாகவும், வேள்விப் பொருளாகவும், வேள்வி வேட்பவனாகவும் வேள்விக்கு அதிபனாகவும் வேள்வியின் பயனுமாகவும் இருப்பதனால் , வேள்விப் பயனை வேட்டவனுக்குக் கொடுத்தருளுகின்றான்.
“வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
வேள்விவேட் பானுந் தானே வேள்விகொள் இறையுந் தானே
வேள்வியின் பயனுந் தானே”
என்கிறது, காஞ்சிப்புராணம். (கச்சிமயானப் படலம் 15)
சிவனே யக்ஞபதி. “யக்ஞோவை விஷ்ணு”, “மேதபதிம் ருத்ரம்” என்கின்றன, வேத மந்திரங்கள்.
வேள்விப் பயனை வேள்விக்கதிபதியாக இருந்து வேட்டவனுக்கு அருளும் சிவபெருமானின் மகிமையைப் புட்பதந்தர்போற்றுகின்றார்.
“ வேள்விமுடிந் ததன்பின்னும் வேட்டவனுக்
கதன்பயனை விளைவிப் போய்நீ;
ஆள்வினையோ அழிவுறுமே; பலனரனர்ச்
சனையல்லா லளிப்ப தேதோ
வேள்விமுதற் கன்மபலன் நீயளிப்பை
எனுமுறுதி மேவித் தானே
கேள்விமறை யறைகருமங் களிற்சிரத்தை
கொடுமுயல்வர் கேடில் சோதீ.”
“ முடிவிலாப் பேரொளியே!. வேள்வி முற்றுப் பெற்றவுடன் அதன் பயனை வேட்டவனுக்கு விளைவிப்பவன் நீயே. வேட்ட செயல் வேள்வி முடிந்தவுடன் அழிவுறும். (உத்பத்தி நாசா தர்மயோகாத் அநித்ய:) வேள்விப் பயன் உடனே கிடைப்பதில்லை. காலம் , இடம் போன்ற இடைவெளிக்குப் பின்னரே வேள்விப்பயன் கிட்டுகின்றது. (வேட்டலாகிய காரணத்துக்கும் பயனாகிய காரியத்துக்கும் இடையே உள்ள சம்பந்தம், தொடர்ச்சி யாது?) வேள்விக்கு அதிபதியாகிய சிவனே , அத்தொடர்ச்சியாய்,அப்பயனை அளிக்கின்றான். ஆதலால் அரன் அர்ச்சனையே அல்லாமல் வேள்விப்பயனை அளிப்பது எது”?
வேள்விப் பயனை அதைச் செய்தவனுக்கு உரிய காலத்தில் ஊட்டுபவனாக நீ இருக்கும் உறுதியினால் அல்லவா வேதம் கூறும் கன்மங்களைச் சிரத்தையாக முடிப்பர் மறையோர்!
வேள்வியே பயனைத் தரும் ; வேள்விப் பயனைத் தருவதற்குக் கருத்தா வேண்டுவதில்லை என்பது வைதிகர்களுள் ஒருசாரார் கருத்து . அதனை மறுத்து, யக்ஞாதிபதி சிவனே, சிவனே வேள்விப் பயனை ஊட்டுபவன்,
உறுதியினால்தான் (Surety) மறையோர் சிரத்தையுடன் வேள்வி முயல்கின்றனர் எனச் சிவனது மகிமையைப் புட்பதந்தர் கூறுகின்றார்.
------------------
21. சிவனை இகழ்ந்து செய்யும் அறமும் பாவமே ஆகும்
தக்கன் வேதாவாகிய பிரமனின் புதல்வன். பிரஜாபதி என்ற சிறப்புக்கு உரியவன். தக்கன் சிவபெருமான்மேல் காழ்ப்புக் கொண்டு அகங்காரத்தினால் சிவபிரானை விலக்கி விட்டு ஒரு மகத்தான வேள்வி செய்யத் தொடங்கினான். ‘மருத்துவர் (அசுவினிதேவர்கள்) ,முனிவர், சித்தர், அஷ்டவசுக்கள், சந்திராதித்தர்,உருத்திரர், அயன் மால் ‘ மற்றும் ஏனைய அனைவரையும் ஒன்றுசேர அழைத்து வேள்வி தொடங்கினான்.
அவன் செயலைக் கண்ட ததீசி முனிவர், வேள்வியின் பயனை அளிக்கும் ‘யக்ஞபதி’ யாகிய சிவனை ஏன் அழைக்கவில்லை என வினவினார். அதற்குத் தக்கன், “ எச்சன் தன்னை எச்சத்தால் தொழுக” என்பது வேதவிதி. ‘எச்சன் மாயவன்’ எனவும் வேதம் செப்பும். (யக்ஞோவை விஷ்ணு, யக்ஞநாராயணம், யக்ஞ ராமன் முதலிய பெயர்கள் தக்கன் கருத்தை உணர்த்துகின்றன.) ஆதலால் ‘யக்ஞமூர்த்தி’ அச்சுதனே. அவனேயன்றி தமோகுண ருத்திரன் இந்த அவையில் வருவதற்கு ஏது இல்லை” என்று உரைத்தான்
அவனுடைய பதிலைக் கேட்ட ததீசி முனிவர் சினம் கொண்டு அவையினரை நோக்கிக் கூறினார்
“எச்சத்தால் எச்சம் என்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர். ஏனைக் கருமங்களில் எச்சம் (யக்ஞம்) சிறந்தது. எச்சம் ஏனைக் கருமங்களில்சிறந்து நிற்றலைப் போல ,எச்சத்திற்குச் சிறந்தவர் சிவபெருமான் என்னும் கருத்தில் அல்லவா வேதம் சிவபெருமானை எச்சம் என்னும் பெயரினால் கூறுகின்றது. எனவே யக்ஞம் சிவனை நோக்கியே செய்யத் தக்கது” என்றுரைத்தார்.
அவருடைய அறிவுரையை மதியாத தக்கனும் ஏனைய தேவர்களும் சிவனின் ஆணையால் வீரபத்திரராலும் காளியாலும் தண்டிக்கப் பட்டனர் என்பது புராணம் கூறும் வரலாறு. சிவனை மறந்து செய்யும் தவமும் அவமாகும் மகிமையைப் புட்பதந்தர் புகழ்ந்து போற்றுகின்றார்.
“யக்ஞாதிபதியே! தக்கன் என்னும்பெயரையுடையவன் யக்கியம் நடத்துவதில் திறமை மிக்கவன்; உடலெடுத்துப் பிறந்த எல்லாஉயிர்களுக்கும் தலைவன் எனும்கருத்தில் பிரஜாபதி எனப்படுவான்; அவன் முன்னின்று நடத்தும் வேள்வியை நடத்தும் இருத்துவிக்குகள் முனிவர்கள் . வேள்விச் சாலையில், மகத்தான வேள்வியைக் காணக் கூடியிருந்தோர் (சதசோர்) தேவர்கள்.
இத்துணை பெரியோர் கூடி ஆற்றிய அருவேள்வி முற்றுப் பெறாமல் அழிந்தது. வேள்விப்பயனை அளிக்கும் உன்னை இகழ்ந்த அழிம்பின் காரணமாகவே அழிந்தது. உன்னிடத்து அன்பும் பத்தியும் இல்லாமல் புரியும் வேள்வி எத்துணைச் சிரத்தையுடன் செய்தாலும் அவ்வேள்வி செய்பவனுக்கு தீங்கே விளைக்கும். வேள்வி நற்செயலேயாயினும், பெருவேள்விப் பெரியோய்!, உனை இகழ்ந்து செய்யின் அது செய்வோனுக்குத் தீமையே ஆகும்”.
“பெருவேள்விப் பதியோய்,எக் கியவினையிற்
பெருந்திறலோன்; தக்கப் பேரோன்;
உருமேவு பல்லுயிர்க்குப் பதி;முனிவோர்
இருத்துவிக்குச்; சதசோர் உம்பர்;
அருவேள்வி யழிந்ததுறு பலனளிக்கும்
உனையிகழ்ந்த அழிம்பால்; உன்பால்
மருவாத சிரத்தையனாய் மகம்புரிவோற்
கதுதீங்கே வழங்கு மாலோ.’
[சதசோர் – சதஸில் காணவும் மேற்பார்க்கவும் கூடியிருந்தோர்.]
Here the Hymnist points out that without prayer (ArAAdhana) to the supreme Purusha all ritual action futile. ஸதச்ய: Sathasya- : that is, Vidhidarsin or inspector of rites; generally a Bramana, who overlooks the carrying of the rite by the other priests and sees that everything is faultlessly done. In the present case so magnificent was th sacrifice that in lieu of the ordinary Brahnans, Rishis, and Devas were the priests and masters of ceremonies respectively. (Arthor Avlon)
-------------------
22. சிவனே முறை செய்து ஆணைசெலுத்தும் இறைவன்.
பல்லுயிர்களுக்கும் உடல் உலகினைப் படைப்பவன் பிரமன். அவன் தன் மனத்தில் நினைத்த எல்லா அழகுகளும் வாய்ந்த திலோத்தமை என்னும் பெண்ணைப் படைத்தான். படைத்த அவன் அப்பெண்ணுக்குத் தந்தையாவான்; அவனால் படைக்கப் பட்டதனால் அப்பெண் அவனுக்கு மகளாவாள். அவளுடைய அழகில் மயங்கிய தந்தை, பிரமதேவன் அவளைக் கூட விரும்பினான். அவனுக்கு அஞ்சிய அத்திலோத்தமை பெண்மான் வடிவுகொண்டு தப்பி விரைந்தோடினாள். பிரமன் அவளைப் பற்றக் கலைமான் வடிவுகொண்டு தொடர்ந்தோடினான்.
அவனது அடாத செயல்கண்ட இறைவன் வேடவுருக்கொண்டு வில்லேந்தித் தொடர்ந்து அக்கலைமானை எய்தான். பிரமன் மிருகசீரிஷ நட்சத்திரமாயும் சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரமாயும் இன்னும் வானவெளியில் சரிக்கின்றனர் என இலிங்கபுராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
. “பல்லுயிரும் படைத்தவன்,தான் படைத்தவளை
விரும்ப,அந்தப் பாவை யஞ்சி
வல்விரைந்து பிணையுருவாய் வான்வழியில்
ஓடவுந்தான் வலிந்து புல்லத்
தொல்லையொரு கலையுருவாய்த் தொடர்ந்தானைக்
கணைதொடுத்துத் தொடர்ந்து நீபின்
செல்லவவன் ஓடவுமுன் சினந்தணியாய்
நாத!யின்னும் தொடர்கின் றாயே.”
பல்லுயிரும் படைத்தவன் பிரமன். பாவை- திலோத்தமை. பிணை- பெண்மான். தொல்லை- முன்பொரு காலத்தில். கலை – கலைமான், ஆண்மான். தொட்ர்ந்தானை- பின் தொடர்ந்து ஓடிய பிரமனை; வினையாலணையும் பெயர். நாதன் – முறை செய்து ஆணை செலுத்தும் இறைவன்.; சிவபெருமான். அவனுடைய அடாத செயலைக் கண்டு சினந்து இன்னும் அவனைத் தொடர்கின்றாய் எனச் சிவனின் முறை செய்யும் மகிமையைப் புட்பதந்தர் பாடுகின்றார்.
இந்தப் புராணக் கதை ஒரு அழகிய குறியீடாகும். பிரமன் இரஜோகுண காரியங்களுக் கெல்லாம் ‘சமஷ்டி’ யாக உள்ளான். ஐம்புல நுகர்ச்சி, அதனை அடைய உயிர் மேற்கொள்ளும் தகாத முயற்சிகள் அனைத்தையும் பிரமன் எனும் குறியீடு மொத்தமாகச் சுட்டுகின்றது. புலன் நுகர்ச்சியை அடக்காதவன் , தன்மகளையே புணர விரும்பிய பிரமனைப்போலத் தான் விரும்பியதைஅடைய எந்தவிதமான அட்டூழியத்தையும் செய்யத் தயங்கான். சிவன் புலனை வென்றவன். ‘பொறிவாயில் ஐந்தவித்தவன்’ அவன் வகுத்த நெறியே ‘பொய்தீர் ஒழுக்கம்’
உலகியல்பான ஐம்புல நுகர்ச்சி வேட்கைக்கும் பொறிவாயில் ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்க நெறிக்கும் தொடர்ந்து நடக்கும் போராட்டமே கலைமான் உருவில் ஓடும் பிரமனை அழிக்க வில்லேந்திய வேடனாகச் சிவன் தொடரும் இந்தக் இக்குறியீடு.
In the 7th century A.D. Kumarila in his Tantra vArthia (p189 trans) explains the incident symbolically as follows:
“ The word Prajapathi means one who protects all creatures : as such it can be taken as a name of the sun; and it is an ordinarily fact that towards the end of the night the sun touches the dawn; as the early dawn is brought about by the sun it is spoken of as his daughter (usha) ; and it is the following of sun after dawn that has been described as Prajapthi running after his daughter.”
According to Markandeya Purana when pierced by an arrow He (Brahna) was changed into a star.
பிரமன் திலோத்தமையைப் படத்து அவளழகின்மேற் காமுற்ற புராணக் கதையைத் தெய்வச் சேக்கிழார் ‘பொறிவாயில் ஐந்தவித்தவனாகிய சிவ்பெருமானின் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரின் பொய்தீர் ஒழுக்க நெறி நின்ற சிறப்பின் மேன்மையை விளக்க எடுத்தாண்டுள்ளார்.
எண்ணிலாண்டு முதியவன் பிரமன். பெண் என்பது மனதை மருட்டும் மாயையியின் உருவம் என்றும் பாராது, தன்னால் படைக்கப் பெற்றவளாதலின் தன் மகளெனவும் பாராது, அவளைக் காமக்கண் கொண்டு நோக்கல் கூடாவொழுக்கம் என்றும் தேராது, தன் நான்கு முகங்களிலும் உள்ள எட்டுக்கண்களால் கண்டனன்.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் உலகியல் இன்ப்ம் நுகர்தற்குப் பருவமான பதினாறு வயதில், தனக்கென்று சொல்லி வளர்க்கப் பெற்ற பூம்பாவையை, அங்கம் பூம்பாவையாக்கிய சிறப்பினால் தன்மகளாகக் கொண்டு, அவளது திருமகளினும், திலோத்தமையினும் விஞ்சிய பேரழகினைக் கண்ணுதல் கருணை வெள்ளமாக ஆயிரமுகத்தாற் கண்டார் எனத் தெய்வச் சேக்கிழார் போற்றுகிறர்; பிள்ளையாரின் பெருமையினை உய்த்துணர வைக்கின்றார்.
தன் மகளாகிய திலோத்தமையின் அழகு தன் காமத்துக்கு திருவருள் துணையால் உரியதாகப் கிழட்டுப்பிரமனுக்குத் தோன்றியது.
திருவருள் துணையால் எலும்பைப் பெண்ணாகத் தான் பிறப்பித்ததனால் மகளாகிய பூம்பாவையின் பேரழகு , புண்ணியப் பதினாறாண்டினராகிய திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவபிரானது கருணை வெள்ளமாகவே தோன்றியது
“எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவ ளெழிலின் வண்ணம்
நண்ணுநான் முகத்தாற் கண்டான்; அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு பேர்பெரும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தார் கண்டார்”
--------------------
23. மாதர் மிகுபேதையர் என்பது வாய்மையாமே.
சிவபெருமான் பரமயோகியாக மவுனத்தில் வீற்றிருந்தான். அசுரர்களுக்கு அஞ்சிய இந்திரன் முதலிய தேவர்கள் பிரமன் தலைமையில் திரண்டு வந்து இறைவனிடம் ஓலமிட்டனர். இறைவன் தனக்கொரு மகன் பிறப்பான், அவன் சூரபன்மன் முதலியோரைக் கொன்று அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காப்பான் என்று கூறிவிட்டு மீண்டும் யோகத்தில் அமர்ந்தான்.
தேவியைப் பிரிந்துள்ள யோகநிலையில் பெருமானுக்கு எப்படி மகன் பிறப்பான் என ஐயுற்ற தேவர்கள் , இணைவிழைச்சைத் தூண்டும் மன்மதனை அழைத்து யோகத்தில் இருக்கும் இறைவன்மேல் மலரம்பு விடத் தூண்டினர்;. மறுத்தால் சாபமிடுவதாக அச்சுறுத்தினர் தேவர்களின் சாபத்தைக் காட்டிலும் இறைவனின் தண்டனையே மேல் எனக் காமவேள் இறைவன் மேல் மலரம்பு விடுத்தான். இறைவன் கண்விழித்துப் பார்த்தான். மன்மதன் பொசுங்கி விட்டான்.
இந்நிகழ்ச்சியினை, “நீர் முன்கொண்ட உயர்தவத்தை அழிக்க வந்த காமவேளை(க் காக்கும் கடவுளான) அவனுடைய தாதை (திருமால்) காண , விழித்துகந்த வெற்றியென்னே” என நம்பியாரூரரும் போற்றினார்.
இறைவி இமய அரசன் மகளாகிப் பார்வதி எனும் பெயருடன், இறைவனைக் கூடத் தவமியற்றினாள். இறைவன் அவளுடைய தவத்தின் வலிமையச் சோதித்து மணம் கொண்டு தன்னுடலின் ஒருபாகத்தை அளித்து மாதொரு பாகனானான்.
இதனை நம்பியாரூரர், ‘ குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு, குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினை நன்குணர்ந்து, விரும்பும்வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த” (திருக்கலயநல்லூர்,1) எனப் பாடியருளினார்.
ஐம்புலனையும் வென்ற பரம யோகியாக இருந்த பரமேசுவரன் அம்மை இருக்கும் இடம் சென்று அவளைக் கண்டு மணந்து கொண்டான் எனும் புராண நிகழ்ச்சிகள் இரண்டாலும் அறியப்படும் சிவனது மகிமையைப் புட்பதந்தர் பாடுகின்றார்.
பிடித்தசிலை தொடுத்தமலர்க் கணைவேளைப்
புரமெரித்தோய் பெருந்தீப் புல்லைப்
பொடித்தலென எரித்தனையைம் புலன்களைந்தோய்,
அதுகண்டும் பொன்வெற் பீன்றாள்
இடத்தினமை யிருத்தினனம் எழின்வயப்
பட்டெனத்தான் எண்ணு மாகில்
வடித்தடங்கண் மாதர்மிகு பேதையரென்
பதுவரத வாய்மை யாமே.
பொன்வெற்பு ஈன்றாள் – உமாதேவியார். வடி – மாவடுவின் பிளவு. பேதையர் – அறிவு குறைந்தவர். பெண்களுக்கு பேதையர் என்ற பெயரும் உண்டு.
“திரிபுரங்களை எரித்த பெரியோனே! வேண்டும் வரங்களை அளிக்கும் வரதனே! கரும்பு வில்லைப் பிடித்து மலரம்புகளைத் தொடுத்த காமவேளைக், காய்ந்த புல்லைப் பெருந்தீ சாம்பலாக்கியது போல எரித்தனை. (அது உன் ஐம்புலன் வென்ற வெற்றி). புலன்களை வென்றவனே!
புலன் நுகர்ச்சியைத் தூண்டவந்த காமவேள் புலனை வென்ற பெருமானின் பார்வையால் கரியாகக் கண்ட பின்னரும், இமவான் பெற்ற மலைமகள் ‘நம் எழிலைக் கண்டு அதன் வயப்பட்டுத்தான் பெருமான் தன் இடப்பாகத்தில் நம்மை இருத்திக் கொண்டான்’ என நினைக்குமாகில் , மாவடுவின் பிளவு போன்ற அழகிய கண்களை உடைய மாதர் மிக்க பேதையர் என்பது உண்மையே ஆகும்”
பார்வதி தேவியே இத்தகைய பேதைமை உடையவளானால், பெண்களைப் பேதையர் எனல் வாய்மையே ஆகும் அல்லவா.
புட்பதந்தர் கருத்துப்படி, பெருமான் தன் இடப்பாகத்தில் அம்மையை இருத்திக் கொண்டது அவள் அழகில் இச்சை வைத்து அன்று; அது அவள் கொண்ட தவத்துக்கு அளித்த பரிசாகும். கார்த்திகேயன் சிவனுக்கு மகனாக அவள் வழிப் பிறக்கவில்லை; பெரியோனின் கண்ணின் வழியாகவே அவதரித்தானென்பது அதற்குச் சான்றாகும்.
‘மாதர் மிகு பேஎதையர் என்பது வாய்மையாமே” என்னும் தொடரின் இறுதியில் உள்ள ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகவும் எதிர்மறைப் பொருளைத்தரும் வினா ஏகாரமாகவும் கொள்ளலாம். தேற்ற ஏகாரமெனில் மாதர் பேதையர் என உடன்பட்டதாகும். வினாவாகக் கொண்டால், வாய்மையாமே? அது வாய்மையன்று, மாதர் பேதையர் அல்லர் என்ற பொருளைத்தரும்
“பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்’ என்று ஔவையார் கொன்றைவேந்தனில் கூறுகின்றார். பேதைமை மாதர்க்கு ஒரு அழகே அன்றி உண்மை அன்று. பேதைமைபோலத் தோன்றினாலும் மாதர் வல்லமையும் உடையவர். அம்மையின் வல்லமையை அபிராம பட்டர்,
‘ககனமும் வானும் புவனமும் காணவிற் காமனங்கம்
தகனமுன் எய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாய தன்றோ வல்லீ! நீசெய்த வல்லபமே”
என்று புகழ்ந்தார்.
புட்பதந்தர் பேதைமை என்று கூற பட்டர் அதனை வல்லபம் என்று துதித்தார்.
“அபிராமவல்லியே! நீ இயற்றிய வலிமைச் செயல் (வல்லபம்) வானில் உள்ள உலகத்தவர்களும் தேவலோகத்தவர்களும் மண்ணுலகத் தவர்களும் தம் கண்களாற் காணும்படியாக் கரும்பு வில்லும் மலரம்பும் படையாக உடையவனான மன்மதனின் உடல் நெருப்பில் எரிந்து சாம்பலாகச் செய்த தவயோகியின் உடலிற் பாதிகொண்டதுமன்றி, அவருக்கு பன்னிரு தடக்கைகளும் ஆறு முகங்களும் பேரறிவும் கொண்ட மகனைப் பிறப்பித்த தல்லவா?
கார்த்திகேயன் பிறந்தது அம்மையின் வல்லபம் என்றார், பட்டர்.
-----------------
24. சென்றடையாத் திருவருளும் சிறப்ப ஆமே
பரமசிவன் பரமயோகி; மஹாஞானி; கடுந்துறவி. வேண்டுதல் வேண்டாமையற்ற நடுநிலையாளன்;புலனை வென்ற வீரன். தன் அடியார்களுக்கும் அந்த நிலையை அருளும் அருளாளன்.
பரமசிவன் கொண்ட சந்நியாசக் கோலத்தை வருணித்த புட்பதந்தர் அந்தக் கோலம் தியானித்தவர்களுக்குச் “ சென்றடையாச் செல்வத்தை அருளும்” என்று அதன் மகிமையைக் கூறினார்.
“வரதனே!, நீ காடுடைய சுடலையில் ஆடுகின்றாய்! மன்மதனைச் சினந்தழித்தாய்! பேய்கள் சூழ ஆடுகின்றாய்! சுடலைப் பொடியில் திளைக்கின்றாய்! செத்தார்தம் தலைமாலை, எலும்பினை அணியாக அணிகின்றாய்! பெருஞ் சினமுடையோன் எனும் பொருளத் தரும் ‘உக்கிரன்’ முதலான பெயர்களை உடையாய்!
“மயானத்தி லாடுதி,மன் மதகோப,
பேய்சூழ வாழ்தி, வெந்த
மயானத்தின் பொடியளைதி, வெண்டலைமா
லிகைவனைதி, மற்றுன் பேர்தாம்
தயாவற்ற உக்கிரனே முதலான
மங்களமற் றவைதாம் ஆக,
தியானித்தார்க் கவைவரத! சென்றடையாத்
திருவருளும் சிறப்ப வாமே.”
“சுகந்த வத்துக்கள், வாசனையுடன் கூடிய புட்பங்கள் , ஆபரண அலங்காரம், அழகிய தலையணை பக்கவணைகளொடு கூடிய சயனம், போசனப்பிரியம், அறுசுவை வேட்கை, மாமிசாகாரம், கள் சாராயம் கஞ்சா முதலிய இலகரி வத்துக்கள், தாம்பூலம், புகழ்ந்துரைக்கப்படும் சாமுத்திரிகம், சோதிடம், வைத்தியம், பொழுதுபோக்கான வீண் வார்த்தைகள், அதிசய விடயங்கள். பெருநகை விளைக்கும் விவகாரங்கள் , சங்கீதம் ஆகிய இவற்றில் விருப்பின்மை” இவை உட்துறவின் அடையாளங்கள். (பாம்பன் சுவாமிகள்)
‘அயாசிதம் யதாலாபம் போஜநாச்சாதநம் பவேத்/’ என்னும் நாரத பரிவ்ராஜகோபநிஷத்து கூறுமாறு, சந்நியாசி உண்டியும் உடையும் யாசிக்கா இலாபமாகக் கிடைப்பனவற்றையே கொள்ள வேண்டும்.
சிவன் பிறர் விரும்பாத, மங்கள மற்றவையாகக் கருதுவனற்றையே பூண்பனவாகவும் உடுப்பனவாகவும் வாழிடமாகவும் கொண்டுளான். வெளித்தோற்றத்தில் அவை அவ்வாறு தோன்றிடினும், உண்மையில் அவை சிவபராக்ரமத்தைக் குறிப்பனவே.
திருவாசகம் திருச்சாழலிலும் அந்த புராணம் தட்சகாண்டம் ததீசி உத்தரப் படலத்திலும் பேரூர்ப் புராணம் கௌரி திருமணப்படலத்திலும் இவை விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
மயானத்தில் ஆடுதி: ‘கோயில் சுடுகாடு’ என்றார் வாதவூரர். மயானம் அச்சமும் வெறுப்பும் தரத் தக்க இடம். தக்கன் ததீசி முனிவரை நோக்கி,
“முனிவரே! பரம்பொருளாகிய உங்கள் கடவுள் எலும்பையும் சிரமாலையையும் அணிவரோ/ தேவர்களுடைய வெந்த சாம்பலைப் பூசுவரோ? கங்காளத்தை ஏந்தித் திரிவரோ? களைந்த கேசத்தைத் தரிப்பரோ? பன்றிக் கோட்டையும் ஆமை ஓட்டையும் அணிவரோ? உயிர்களைச் சங்கரிப்பரோ? புலித்தோலைஉடுப்பரோ? யானைத் தோலைப் போர்ப்பரோ? அக்கினி, மழு, மான், முத்தலைச்சூலம் ஆகிய இவற்றை ஏந்துவரோ? எங்கும் பிச்சை யேற்பரோ? கூத்தாடுவரோ? பூதசேனை சூழத் திரிவரோ? பாம்புகளைப் பூண்பரோ? வெண்டலையைத் தலையில் அணிவரோ? நிருவாணியாவாரோ? பலவேறு உருவங்களைக் கொள்வாரோ? ரிஷபத்தில் ஏறுவாரோ? நஞ்சை உண்ணுவாரோ? சுடலையில் ஆடுவாரோ? ஒருபெண்ணைத் தலையில் சுமந்து ஒருபெண்ணைப் பக்கத்தி லிருத்துவாரோ? பிள்ளையையும் பெறுவாரோ? தாமத குணத்தைப் பொருந்துவாரோ? உங்கள் கடவுளாகிய சிவன் ஒரு நற்குணம் இல்லாதவர். “ என்று ஏசினான்.
ததீசி முனிவர் தக்கனை நோக்கி, “ எம்பெருமான் தனக்கு இங்கு நீ நிந்தைபோற் சில கூறினை; நிமலனுக்கு அவை வந்த வண்ணமோர் சிறிதும் உணர்ந்திலை; அறிவு மயங்கினை” என்று பழித்து , அவன் இழித்துக் கூறியவையெலாம் சிவபெருமானின் பரம்பொருள்தன்மையை உணர்த்தும் உண்மையை விளக்கினர்.
மயானத்தில் ஆடுதி –
பேரூழியின் முடிவில் உலகங்கள் அனைத்தும் அழிய அம்பிகையும் அவனுள் ஒடுங்கத் தான் ஒருவன் மட்டுமே தனியாக உள்ளான் இப்பொழுது அவன் இருப்பிடம் யாவும் அழிந்த இடமாகும். யாவும் அழிந்த இடம் சுடுகாடு; மயானம். எல்லாம் அழிந்தும் அவன் நிலையாக உள்ளான். இது அவன் பரத்துவதை நிலைநாட்டுவதாகும். “ தொல்லைக் கடவுள் அழிக்குங்காலை உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய இடமதன்றோ சுடலையதாகும்’
மத கோப-
மன்மதனைச் சினந்தவனே! இது பொறிவாயில் ஐந்தவித்த சிறப்பினை உணர்த்துவதாகும்.
பேய் சூழ வாழ்தி –
பேய் எனவும் பூதம் எனவும் பாரிடம் எனவும் திருமுறைகளில் கூறப்படுவன, வாயு உடம்புடன் கூடித் திரிந்து மக்களை வருத்தும் பேய் உருவம் அன்று. அவை, ஐம்பூதச் சேர்க்கையவாய உடலில் பிற பகுதிகள் மறைய வாயு ஒன்றே எஞ்சிக் கண்ணுக்குப் புலப்படாமல் அலைந்து திரியும் பாசவுடம்புகள். இங்குப் பேய் என்றது பாசம் நீங்கப் பெற்று ஒளியுடைய சுத்தமாயா உடம்புடைய ஆன்மாக்களை. இத்தகைய உடம்பினை உடையவர் இறைவனுக்குப் பணி செய்து உடனிருப்பதால் பேய்க் கணத்தர், பூதகணத்தர் என அவ்வடியவர் கூட்டம் கூறப்படுவர். ‘பூதம் சூழப் பொலியவருவார் புலியின் உரித் தோலார்’
வெந்த மயானத்தின் பொடி அளைதி-
சிவபெருமான் பூசியுள்ள வெண்ணீறு எதனைக் குறிக்கின்றது? அவன் பூசிக் கொள்வது திருவெண்ணீறு. அது ஆதி விபூதி என்றும் அநாதி விபூதி என்றும் இருவகைப்படும். பேரூழிக் காலத்தில் அனைத்தும் அழிந்து சாம்பலாகும். இறைவன் ஒருவனே நிற்பான். அச்சாம்பல் படிவதற்கு வேறு இடமில்லாததாலது சிவனின் திருமேனிமேல் படிந்தது. இச்சாம்பலே பின் தோற்றத்துக்குக் காரணமாய்ப் பேறூழியை ஆதியாகக் கொண்டது. ஆதலின் ஆதி விபூதியாயிற்று. இவ்வாறு, தான் தோற்றக் கேடு இன்றி அனைத்தும் ஒடுங்கவும் மீண்டும் தோன்றவும் காரணமாக நிற்பதை சிவனுடைய வெண்ணீற்றுப் பூச்சு உணர்த்தும். ஆதலின் அவன் எல்லா உயிர்களுக்கும் இயல்பாகவே ஈசனாக உள்ளான் என்பதை வெண்ணீற்றுப் பூச்சு தெரிவிக்கின்றது. ( திருவாசகம்சிவக்குடில் விளக்கம். தொகுதி4. பக்142-143)
வெண் தலைமாலிகை வனைதி –
திருச்சாழலிலே (திருவாசகம் 265) ஒருத்தி வினவுகின்றாள். “ நங்காய்! உங்கள் சிவன் நரம்பு ஓடு எழும்பு அணிந்து தோள்மேலே கங்காளம் தரித்தான். இது என்ன தவக்கோலம்? தீண்டினாலே தூய்மையை நீக்குவனவும், உடனே நீராடித் தூய்மை பெற வேண்டுவனவுமான தலையோடு, நரம்பு, எலும்பு,முழு எலும்புக்கூடு (கங்காளம்) இவற்றைத் தீண்டுவதுடன் அன்றி உடலில் தாங்கியும் நிற்கின்றான். இதுவும் ஒரு தவக்கோலமோ என எள்ளி வினவினாள்.
இதற்குத் தோழி கூறி மறுமொழி. :” திருமால் ஒருவன் வாழ்நாளில் நூறு நான்முகன்கள் தோண்றி வாழ்ந்து மறைவர். அவ்வழி நூறாவது நான்முகன் இறக்கும் காலத்தில் திருமாலுமிறப்பன். முன் இறந்த தொன்னூற்றொன்பது நான்முகன்களின் தலையோடுகளையும் எலும்புகளையும் அவர்களுடைய நரம்புகளாற் கட்டி மாலைகளாகத் தொடுத்து இறைவன் அணிவன். நூறாவது நான்முகன் அவனுடன் இறக்கும் திருமால் என்ற இருவர் முழு எலும்புக் கூடுகளையும் இறைவன் தன்னிரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன். இவை புராணங்களில் காணப்படும் வரலாறுகள்.
இது தவக் கோலமன்று. அயன்மால் முதலியோர் நிலையாமை யுடைய ஆன்ம வர்க்கங்கள் என்பதும், இறைவன் ஒருவனே நித்தியப் பொருள் என்பதும் உணர்த்தியது. சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்பது பொருள். மங்கலமும் புனிதமுமாகிய கங்கை இறைவன் திருமுடிமேல் உள்ளது. இறந்து சென்ற நான்முகன் திருமால் ஆகியோரின் என்புகளை மங்கலனாகிய சிவன் தரிப்பதால் , அப்புனிதனின் திருமேனி தீண்டப் பெற்று, அவ்வென்புக ளுக்குரிய அவ்விருவரின் தீவினைகளெல்லாம் நீங்கப் பெற்று புனருற்பவத்தில் மேலும் உயர்ந்த பதங்களில் தங்கி வீடுபேறடைவர்.
இவர்களுடைய எலும்புகளைத் தாங்குவது இவர்கள்மேல்கொண்ட இறைவனின் பேரருளாகும். (சிவக்குடில் விளக்கம் திருவாசகம்.265)
பேர்தான் தயாவற்ற உக்கிரன்:
தயா- கருணை. உக்கிரன் – பெருஞ்சினம் உடையோன். பெருஞ்சினமுடையோன் இறைவனாவானா? இறைவனின் எண்குணங்களில் தலைமைக் குணம் பேரருளுடைமை. அருளாளனாகிய அவனுக்கு ‘உக்கிரன்’ என்ற பெயர் பொருந்துமா?
சிவன் எதனைக் கோபிக்கின்றான்? உயிர்களுக்கு அறியாமையைச் செய்கின்ற ஆணவமலத்தையே சினக்கின்றான். மேலும், ‘உக்கிரன்’ என்ற பெயர் சிவனுக்குப் பேரொளியை உடையவன் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது.
சிவன் பேரொளியாதல், “ இருநிலனும் விசும்பும்விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பானின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானை (திருத்தாண்டகம், திருக்கோயில் 10) என அப்பர்சுவாமிகள் ஓதுதல் காண்க.
சிவமாகிய பேரொளியின் முன் ஏனை ஒளிப்பொருள்களான சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆதியன ஒளியிழப்பதை , “அவ்விடத்தில் சூரியனும் பிரகாசிக்கவில்லை,சந்திரனும் பிரகாசிக்கவில்லை, நட்சத்திரங்களும் பிரகாசிக்க வில்லை” எனச் சுருதி கூறிற்று. ( ‘ந தத்ர சூரிய சந்திர தாரகம்’ சுவேதாரக உபநிடதம்)
உலக மக்கள் அறியாமையால் மங்களமற்றபொருள் என இகழ்ந்த அவை உண்மையில் சிவனுடைய பேரருளையும் அளவற்ற ஆற்றலையும் உணர்த்தும் குறியீடுகள். அவற்றைச் சிவனுடன் கூட்டித் தியானிப் பவர்களுக்கு அவனுடைய கருணை கூடும் . சென்றடையாச் செல்வமாகிய சிவமாந்தன்மை வந்தடையும்.
பரமம் மங்கலமஸி- An ordinary man who is attached to such inauspicious things is blamed. But here His extraordinary character is expressed. Nothing is inauspicious to Isvra. The worshipper has nothing to do with this. However inauspicious these things appear to him to be, let him remember that Siva is ever auspicious to those who worship Him. It is only to the Jiva bound in separateness that some things are auspicious and other inauspicious. All such terms involve relativity. Around the Supreme all things are gathered in their natural order. (Arthur Avlon)
--------------------
25. அநுபூதி மருவும் இன்பம் உன்னையன்றி உண்டாமோ.
யோகம் என்ற சொல்லுக்குக் கூடுதல் என்பது பொருள். ‘யோக க்ஷேமம்’ அதாவது கூடி வாழ்ந்தால் இன்பம் என்பது உலக வழக்கு. எதனொடு கூடுதல் யோகம்? எந்த யோகம் நிலையான இன்ப அனுபவத்தினை அளிக்கும் என்பதனைப் புட்பதந்தர் இப்பாடலில் கூறுகின்றார்.
வாசியுற நிலைநிறுத்தி மனத்தினையுள்
மடக்கியுடல் புனல்கால் மன்னை
ஏசறுமின் பப்புனல்கண் நிறையவிசைப்
பருமமுத வேரி மூழ்கி
மாசறுயோ கியர்தம்முள் இரண்டறக்கண்
டநுபூதி மருவும் இன்பத்
தேசுறுமெய்ப் பொருளுன்னை யன்றியுமற்
றுண்டாமோ சிவபெம் மானே.
[வாசி – மூச்சு. புளகம்- இன்பத்தால் மயிர்க்கூசெறிதல். ஏசு அறும் – குற்றம் இல்லாத. பருமம் – உடல். அமுத ஏரி – அமுதம் நிறைந்த ஏரி. தேசு – அறிவு, ஒளி)
யோகம் அட்டாங்கயோகம், ஆதார யோகம், நிராதார யோகம் வாசியோகம் எனப் பலவகையாகக் கூறுவர். அனைத்திலும் மூச்சுப் பயிற்சிஉண்டு. வாசி என்பது மூச்சு.
பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும்.
அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏகுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தின் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளேஉள்ள சிறுதுவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலே ஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவமத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும்.
இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப்பயிற்சியே வாசியோகம் எனப்படும் என்பர்.
சிவத்தொடு ஐக்கியப்படும் ஆன்மலாபம் பெறும் நோக்கமிலாது மேற்கொளும் மூச்சுப்பயிற்சி உடற்பயிற்சி ஆகிய துன்பத் துழலும் அசட்டுயோகியர்களை. அருணை முனிவர், “அருள்பெறா அநாசார கருமயோகிகள்” என்று பழிக்கின்றார்.
வாசியுற நிலை நிறுத்தி-
பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று ..அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி. வாசியை ஆறு ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகமாகச் செய்வது வாசியோகம் அல்லது வாசிதவம்.
மனத்தினை உள்மடக்கி- மனத்தினைப் புலன்களின் வழிப் புறம்போகாமே தடுத்து, உள்நோக்கிச் செலுத்தி. இவ்வாறு உள்நோக்கிப் பயணம் செய்கின்ற சிவயோகியர்களின் உடல் மயிர்க்கூச்செறிந்து புளகம் அடைகின்றது; கண் ஆனந்த, இன்பக் கண்ணீர் நிறைகிறது; அனந்தாமிர்தக் கடலில் இவ்வாறு திளைக்கும் யோகியர்கள் தம்முள் இரண்டறக் கலந்து, இன்ப அனுபவத்தில் திளைக்கும் அனுபூதி , சிவமே! எம்பெருமானே!! அறிவானந்த வொளியாகிய உன்னுடன் கூடுதல் அற்று உண்டாகுமோ?(உண்டாகாது) எனப் புட்பதந்தர் கூறுகிறார்.
மூச்சை அடக்கி வருத்திச் செய்கின்ற யோகப்பயிற்சி சிவத்தை அறிந்து அதனோடு கூடும் சிவானுபூதியை பெற்றாலே அதன் பயனைப் பெற்றதாகும். சிவானுபூதியைப் பெறுதற்கன்றிச் செய்யப்படும் வாசியோகம் வெறும் உடலை வருத்துதலில் முடியும்.;
அருணகிரிநாதர் கூறுகின்றார்:” துருத்தி,அதாவது, தோலாலாய உலை ஊதுகருவி எனச் சொல்லும்படிப் பிராணவாயுவை உள்ளே நிறுத்தி அடக்கிச் சுற்றி வளைத்து அதனை உடலுக்குள்ளேயே நிறுத்தி இப்படி உடம்பை ஒருக்கில் , வருத்துவதால் என்ன பயனைப் பெறமுடியும்.சிவயோகம் என்கின்ற ஞானமுலையை இன்னதென அறிந்து அறுமுகச் சிவம் உபதேசித்த ‘சும்மா இரு சொல் அற்’ என்னும் உபதேசத்தை உங்கள் மனத்தில் இருத்துங்கள். முத்தியைக் கைமேற் பலனாகக் காண்பீர்கள்” ,
“துருத்தி யெனும்படிக் கும்பித்து வாயுவைச்சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே”
(கந்தர் அலங்காரம் 71)
இது யோகம் வேண்டா என்றதன்று. சிவானுபூதி பெறச் செய்யாத யோகத்தால் பயனில்லை என்றதாகும்
-------------
26. எஞ்சியுளது எது உன்னை யன்றி
செஞ்சுடர்நீ வெண்சுடர்நீ சேண்விசும்பு
நீபவனன் தீயு நீயே
விஞ்சுபுனல் நீபுவியு நீயியமா
னனுநீ,யிவ் விதத்தால் எட்டாம்
துஞ்சலறு வடிவுடையை என்றறிஞர்
துணிந்துரைப்பர், சிவனே மற்றும்
எஞ்சியுள தெதுவுன்னை யன்றியுமொன்
றுண்டெனயா மெண்ணி லோமே.
சிவ வியாபகம் முழுமையான வியாபகம். பசு, பாசம் என்னும் இருபொருள்களோடும் உள்ளும் புறமும் கலந்த வியாபகம். இதனை ஔபச்சிலேடிக வியாபகம் எனச் சாத்திர நூல்கள் கூறும். சிவவியாபகத்துக்கு அந்நியமாக ஒரு பொருளும் இல்லை . பதியை விட்டு நீங்காப் பொருள்கள் அனைத்தும் பாசம் பசு என்பவற்றில் அடங்கும். அவை அப்பதிக்குப் பிருதிவி, அப்பு, தேயு வாய், ஆகாயம், சந்திரன், சூரியன், சீவான்மா என்னும் அட்ட மூர்த்தங்களாயிருக்கும். இம்மூர்த்திகளில் மூர்த்திமானாச் சிவம் இருக்கும். சிவம் இவ்வாறு அட்ட மூர்த்திகளில் மூர்த்திமானாகக் கலந்து அவையே ஆக இருத்தலினால் இம்மூர்த்திகளின் பண்புகள் பிரகாசிக்கும்.
சிவன் மூர்த்திமானாக இருத்தலினால் சீவான்மாவின் அறிவு விளக்கம் பெறும். அருக்கனில் (சூரியன்) சோதியும், திருத்தகு மதியில் (சந்திரன்) தண்மையும் (குளிர்ச்சி), திண்திறல் தீயின் வெம்மையும் (சூடு) வானில் கலப்பும், மேதகு காலின் (காற்று) ஊக்கமும் (இயக்கம்) நீரின் இன்சுவையும், மண்ணின் திண்மையும் சிவம் தன் சத்தியினால் அம்மூர்த்தங்களொடு கலந்து கலப்பினால் அவையேயாக இருத்தலினால் அமைந்ததாம். இதனால் இவ்வுலகே சிவமாக இருத்தல் புலனாம்.
சிவம் இவ்வாறு உலகு, உயிர்களுடன் கலந்து அவைகளேயா யிருப்பதனால், பிரபஞ்ச வழிபாடு (Pantheisam), குலக்குறி வழிபாடு (Totemism), மிருக வழிபாடு (Animisam) முதலிய நாட்டார் வழிபாடுகள் அனைத்தும் சிவ வழிபாட்டில் அடங்கி வேத நெறியாதலை அறிதல் வேண்டும்.
இந்தப் பாடலில், புட்பதந்தர் சிவனை நோக்கிச், “ சிவனே நீ செஞ்சுடராகிய சூரியனாக இருக்கின்றாய்!, வெண்சுடராகிய முழுமதியாக இருக்கின்றாய்!, உயரத்தில் பரந்துள்ள ஆகாயமாக இருக்கின்றாய்!, நீராக இருக்கின்றாய்!, புவியாக இருக்கின்றாய்!, இயமானனாய் (ஆன்மா) இருக்கின்றாய்” என நீ இவ்வெட்டு உருவுடையையாய் இவற்றைவிட்டு நீங்காமல் உள்ளாய் என்று ஆராய்ந்து அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறுவர். ஐயனே!, இவையே அன்றி வேறு எதுவும் உன்னைவிட்டு எஞ்சித் தனியே இருக்கக் கூடும் என யாம் (சிவனடியாகள்) நினைக்கிலோம்.”
இந்தப் பாடலில் ‘அறிஞர்கள்’ என்றது இகழ்ச்சிக் குறிப்பு. அவர்கள் சிவனது வியாபகத்தை வரையறுத்து இவ்வெட்டனுள் அடக்கி , இவ்வளவுதான் எனத் துணிந்து கூறியது, அவர்களது அறியாமையைச் சுட்டும் என்பது குறிப்பு. இவற்றிற்கு மேலும் சிவத்தினது வியாபகம் உண்டு, இங்குக் கூறப்பட்ட எட்டு உருவங்களுக்கு மேலும் பொருள் உண்டேல் அதுவும் அகண்டாகார வியாபக சிவத்துள் அடங்கும் என்பது கருத்து.
The ancients (it is here suggested) were unable, as we too are, to conceive the Formless and so conceived of and described SivA with form as limited intelligence must do. But, here eight forms only are given. But there is no form which is not His. Brahman is not the forms which are but finite creatures of his infinite power (sakthi) but is in them as their inmost (PratyagathmA) and Witness (Sakshi) , that as is knower. It is That, the object of which (as sankarasayas) is all the forms of knowledge (sarve pratyayah visaye bhavanti yasya) which is the Knower in all cognitions and the Seer in them all as the power of consciousness in itself (Citccakti –svarupa –matrah) . Objects(Rupa) and ideas of Objects (Nama) are the constituents of our differentiated knowledge which is underlain by the undifferenced Blissful consciousness which is true Being or SivA Himself.
---------------
27. நாத ஒலி தன்னால் சாற்றுவது நினையேதான்
அகரமுதல் வெவ்வேறா மூன்றெழுத்தா
லோங்காரம் அடைந்தோர்க் காக்கும்
பகவவொரு மும்மூன்றா மறைவிருத்தி
புவனமுயர் பண்பார் தேவர்,
தகவினுனைப் பரவும்முழு வோம்விகற்ப
மறுதுரிய தாமம் பாடிச்
சகலமுமாம் நினையேதான் சாற்றுவது
நாதவொலி தன்னான் மன்னோ.
‘உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றா மெய்யா” என்றார் மணிவாசகர். ‘நான் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் பிரணவ வடிவமாக நிலை பெற்ற உண்மைப் பொருளே’ என்பது இத்தொடரின் பொருள்.
உயிர்கள் வினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகர்தல் வேண்டும். அதனால் அனுபவம் ஏற்பட்டு ஆணவமலத்தின் பிணிப்புச் சிறிது சிறிதாக நீங்கும்; ஞானம் வளரும். வினைகள் மனம்மொழிஉடல்களால் செய்யப்படுவன.
மொழியாலும் உடலாலும் வினைகள் செய்வதற்கு முன் அவை பற்றிய சிந்தனைகள் உள்ளத்தில் முகிழ்க்க வேண்டும். உள்ளத்தை, மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்று நான்காகப் பிரித்து அவற்றை அந்தக்கரணங்கள் என்று வழங்குவர்.
அந்தக்கரணங்கள் மாயேயமாகிய சடப்பொருள்கள். அவற்றுடன் சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் இயக்கம் உளதாகும்.
உயிர்கள் மலத்தால் கட்டுண்டவை . ஆதலின் தாமே செயல்படா. இறைவன் அவற்றை இயங்கச் செய்வன். இறைவன் உயிரில் பிரணவ வடிவமாக நின்று இதனைச் செய்கிறான்.
ஓங்காரம் என்னும் பிரணவத்தில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவற்றைக் கலைகள் என்பர். அவ்வைந்து கலைகளாவன: அகரம் உகரம் மகரம் விந்து நாதம் என்பன . (சி.சு. க. சிவக்குடில் விளக்கம், திருவாசகம் பேருரை)
இவற்றுள் அகரம் அகங்காரத்தைச் இயக்கும். உகரம் புத்தியை இயக்கும். மகரம் மனத்தை இயக்கும். விந்து சித்தத்தை இயக்கும். நாதம் புருடதத்துவத்தை இயக்கும். பிரணவத்தின் கலைகளான எழுத்துக்களும் சடமாதலின் அவற்றை அதிதேவதைகளாகிய சத்திகள் இயக்குகின்றன. அதிதேவதைகளும் ஆன்ம வருக்கத்தின . ஆகலின் இறைவன் அவற்றை அதிட்டித்து நின்று இயக்குதல் வேண்டும் அவ்வாறு சிவபரம்பொருள் அதிதேவதைகளை அதிட்டித்து கலைகளை இயக்கி அறிவூட்டுவதை, சிவஞானபோதம் நூற்பா 4, அதிகரணம் 1, உதாரண வெண்பாக்கள் 3, 4 கூறுகின்றன. (மேலும் விளக்கத்திற்குச் சிவஞான மாபாடியம் காண்க)
அகர உகர மகர விந்து நாதம் என்னும் பஞ்ச கலைகளையும் தொகையாக (சமஷ்டி)க் கொண்டு சமஷ்டி பஞ்சாக்கரம் என்பர். ஐந்தாக விரிந்த நிலையை வியஷ்டி பஞ்சாக்கரம் என்பர்.
இறைவன் இந்த பஞ்ச கலைகளுடனும் கூடி நின்று உயிர்களுக்கு அறிவூட்டி இயக்கி வினை செய்ய வைப்பதைத் திருசெந்தூர்க் கந்தர் கலிவெண்பா,
“ஓதிய வைந்து, ஓங்கரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய், ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே” (59) என்க் கூறிற்று. “வேதத்தில் சொல்லப்பட்ட பிரணவத்தின் ‘அகார உகார மகார விந்து நாதம்’ என்னும் பஞ்ச கலைகளிலும் நீங்காது பொருந்திய முதல்வன் வடிவங்களை யெல்லாம் கொண்டு நின்றவனே” என்பது இதன் பொருள்.
இவை ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும் . நமசிவாய என்பது தூலபஞ்சாக்கரம்
இவற்றுள்.
நாதம் – சி. சிவம். சதாசிவன் அதிதேவதை
விந்து – வ. அருள் சத்தி. மகேசன் அதிதேவதை
மகாரம்- ம. மலம். உருத்திரன் அதிதேவதை
உகாரம்- ந. திரோதானம். திருமால் அதிதேவதை.
அகாரம் – ய . ஆன்மா பிரமன் அதிதேவதை
சைவ சித்தாந்தம் ஓம் எனும் பிரணவத்தைச் சமஷ்டி பஞ்சாட்சரமாகக் கொள்ளா ஏகான்மவாதம் அல்லது பிரமான்மவாதம் மூன்றெழுத்தாகவே கொள்கின்றது. சைவசித்தாந்தம் கூறும் பிரேரேக காண்டம் எனும் சுத்ததத்துவங்களாகிய சிவதத்துவங்கள் அவர்கள் கோட்பாட்டில் இல்லை.
மாண்டூக்கோபநிடதம் 8ஆம் நூற்பா, “அந்த ஆத்மாவே ஓரெழுத்தாகவும், தனித்தனி எழுத்தாகவும் இருக்கின்ற ஓங்காரம் ஆகும். அகாரம், உகாரம், மகாரம் என்பன ஓங்காரத்தின் எழுத்துக்கள் “ எனக்கூறுகின்றது.
அகரமுதல் மூன்றெழுத்து – அ,உ, ம: இவை ஓங்காரத்தின் வியட்டிநிலை. ஓம் என நாதத்தோடு பிரியாது நிற்பது சமட்டிநிலை.
ஓங்காரத்தின் வியஷ்டி நிலையைப் புட்பதந்தர் இப்பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.
அகரத்தால் – இருக்கு, சத்துவகுணம், சுவர்க்கம், பிரம்மாவையும்;
உகரத்தால்- ஸாமம், இராஜசம், பூலோகம், அரியையும்;
மகரத்தால்- யஜுர், தாமசம், பாதாளம், உருத்திரனையும்
மறை- இருக்கு, சாமம், யஜுர் ஆகிய வேதங்கள்.
விருத்தி – சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய குணங்கள்.
புவனம்- சுவர்க்கம், மத்தியம், பாதாலம்.
படைப்பாதி பயில் பகவர்- பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்
முழுவோம் – சமஷ்டி நிலையிலுள்ள ஓங்காரம்.
உணர்த்தும் பிரணவமாகிய ஓங்காரத்தை இவ்வாறு விகற்பமாக பிரம்மா விஷ்ணு உருத்திரன் ஆகியோரை அகர உகர மகரங்களுக்குத் தேவதையாகக் கூறினாலும், விகற்ப மற்ற துரியமாகிய நாலாம் (சதுர்த்தம்) நிலையில் இவை அனைத்துமான நாதமாகிய உன்னையே கூறுகின்றன.
அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம:
சி’வோஅத்3வைதஏவமோங்கார
ஆத்மைவஸம்விஸ’த்யாத்மநாத்
மானம்யஏவம்வேத3 யஏவம்வேத3 || ( மாண்டூக்கியம்)
“மேலே கூறிப் போந்த மாத்திரையளவுகள் இலனாய், வாக்கு வியவகரத்திற் கெட்டாதவனாய், பிரபஞ்சத்தினை ஒடுக்கிக் கொள்வோனாய் அத்துவைதனாய், நான்காவது பொருளாய் (பரம) ஆன்மாவாயுள்ள சிவன் ஓங்காரமே ஆகின்றனன். இன்னவா றறிபவன் (பரம) ஆன்மாவின் (அனுகிரகத்தி) னாலே( பரம) ஆன்மாவை அடைகின்றனன்.”இது சைவசித்தாந்திகள் கூறுகின்ற மொழிபெயர்ப்பு. ஏகான்ம வாதிகள் வேறு விதமாக மொழி பெயர்ப்பர்.
நான்காவது பொருள் அல்லது ‘சதுர்த்தன்’ யார்? “அத்வைதம் சதுர்த்தம் ப்ர்ஹ்மவிஷ்ணுருத்ராதீதம், ஏகமாசாஸ்யம் பகவந்தம் சிவம்” பிரமனும் விஷ்ணுவும் உருத்திரனுமே மூவரென்றும் , இவர்கட்கு அதீதமாயுள்ள சிவனே சதுர்த்தப் பொருளென்னும் நான்காந் தெய்வம் “
--------------
28. சிவனே! நின் திருப்பெயர் எட்டு
சிவவுனது திருப்பெயரில் திகழ்பவ,ருத்
திர,சருவ திகழ்ஈ சான,
பவமறுக்கும் பசுபதி,யுக் கிர,பீம
மகானெனவே பகரும் எட்டாம்
இவைகளைமற் றெவைகளினும் மேலாக
எடுத்துமறை ஏத்தும்;யானும்
தவலறுமன் பொடுநமவென் பதுகூட்டிச்
சொலிப்பணிதல் தவிரே னையா.
பவ:, ருத்ர:,ஸர்வ:,ஈசான:, பசுபதி:,உக்ர:,பீம:, மஹாந்: என்பன எட்டும் இறைவனது திருநாமங்கள். இவற்றை ஏனைய திருப்பெயர்களினும் சிறந்தனவாக வேதம் புகழும். அவற்றோடு “தேவ:” என்பதையும் கூட்டி, நான்காம் வேற்றுமையுருபையும், “நம” என்பதையும் கூட்டி , பவாய தேவாய நம என்பது முதலாக ஒதுவது மரபு. யானும் அவ்வாறு ஒதி வணங்குவேன் என்றார்.
சிவபூசையில் சிவனுடைய சிறப்பான எட்டு நாமங்களைக் கூறி எட்டுமலர்களால் (அஷ்டபுஷ்பம்) அருச்சித்தல் இன்றியமையா உறுப்பாகும். அவை சிவனுடைய குணத்தையும் செயலையும் விளக்குவன.
1.பவர்: - எக்காலத்தும் எவ்விடத்தும் உண்மையினால் இப்பெயர் போந்தது. ‘பூ’ (Bhu) எனும் அடிச்சொல்லுக்குச் சத்து (உள்ளது) என்பது பொருள். எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் ‘சத்து’ சிவம் என்பது பெறப்பட்டது.
2. சர்வர்- ‘சிரு’ எனும் அடிச்சொல்லிலிருந்து பிறந்தது இப்பெயர். இம்சித்தல் எனப் பொருள் இது அனைத்தையும் சங்கரிக்கும் கருத்தா சிவபெருமானே என உணர்த்துகின்றது.
3. ஈசானர்- பரம ஐசுவரியம் உடையவர் ஈசானர். “எவர் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆணையினால் ஆள்கின்றாரோ” அவர் ஈசானர் (அதர்வசிரசு. திருமுறைகள் ‘செல்வர்’ எனும் சொல்லால் குறிக்கும்.’செல்வன்கழலேத்தும் செல்வம் செல்வமே’
4. பசுபதி- பாச சம்பந்தத்தினால் உயிர்கள் பசுக்கள் எனப்படுகின்றன. இதனால் பசு எனும் சேதனத்துக்கும் பாசம் எனும் அசேதனத்துக்கும் நாயகர் சிவபெருமான் என அறியப்படுகிறது. அதனால் பசுபதி எனப்படுகின்றார்.
5. உருத்திரர்- சம்சார ரோகத்தைத் திராவகஞ் செய்தலின் உருத்திரர். ‘துன்பத்தைப் போக்குபவர்’ என்பது கருத்து. ‘இடும்பைநோய் என்பதோட்டும் இயல்பின் உருத்திரன்’ (காஞ்சிப்புராணம் பரசிராமேச்சிரப் 44). சைவப்பகைவர் சிலர். ‘உருத்திரன்’ எனும் பெயர், ‘ரோதனம்’ (அழுதல் செய்தவன்) என்னும் காரணத்தால் வந்தது என்பர். அப்பெயர் அக்கினி தேவனைக் குறிக்கும் என்றே உணர்வுடையோர் பகுத்துணர்ந்து கொள்வர். “செந்தழல் என்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர், வந்தது புகல்வன் கேட்டி” எனத் ததீசி முனிவர் .
பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலாக் கனல்பால் வைத்துச்
செற்றவர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
உற்றுழி அதுகொடா டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையும் கூறும்”
(கந்த. ததீசி47,48)
எனக் கூறுதலால் அறியலாகும்.
6. உக்கிரர் - சூரிய சந்திரர் ஆகிய பேரொளிகளால் அடக்கப்படாத பேரொளியாளராதலின் உக்கிரர் எனும் நாமம் சிவபெருமானுக்காயிற்று. “அவ்விடத்திற் சூரியனும் பிரகாசிக்கவில்லை, சந்திரனும் பிரகாசிக்கவில்ல”"(சுவே.6.14)
“காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனி மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பா னின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”
(அப்பர். திருத்தண்டகம். தில்லை 10)
7. பீமர் – சேதனம் அனைத்துக்கும் பயத்தை விளைக்கும் காரணராயும் அவைகட்கு நியாமகராயும் (நியமிப்பவர்) இருத்தலின் பீமர் எனுந் திருநாமம் சிவபெருமானுக் கெய்திற்று. “இவர்க்குப் பயந்தே வாயு வீசுகின்றது” (தைத். 2.8). “ இயங்கு கின்ற இரவிதிங்கள் மற்றும்நல் தேவரெலாம், பயங்களாலே பற்றி நின்பால் சித்தந் தெளிகின்றிலர்” (திருஞானசம்பந்தர். திருவலிவலம்.3)
8. மகாதேவர் – மகத்துவமாய்ப் பிரகாசித்தலினால் மகாதேவர். ‘எவ்வியல்புகளையும் விடுத்து மகத்தாகிய பரமான்ம ஞான யோகைசுவரியத்தின் பொருட்டுப் பூசிக்கப்படுகின்றமையின் மகாதேவர் எனப்படுவர்” (அதர்வசிரசு)
சிவப்பிரமம் சகுணமே; மாயாவாதிகளும் ஏகான்ம வாதியரும் கூறுவது போல நிர்குணமன்று.
To these precious names do I too offer my salutation.
Verse 26 says that Siva or Mahadeva in His eight forms, as water, fire, the sacrficer, air, moon, ether and sun. The eithat names are different aspects of the one Great Deva and based on Sruti o revelation.
-------------
29. எல்லாம் ஆனானே! ஒன்றும் அல்லானே ! வணக்கம்
போற்றிமிக நணியானே! போற்றிநெடுஞ்
சேயானே !பெருந்தீ யாடீ!
போற்றிமிக நுண்ணியனே! போற்றிமிகப்
பருமையனே! காம கோபா!
போற்றிமிகத் தொன்மையனே! போற்றிமிகப்
புதியானே! முக்கட் செல்வா!
போற்றியெலாம் ஆனானே! போற்றியொன்றும்
அல்லானே! போற்றி!! போற்றி!!
இப்பாடல் சிவனைப் போற்றித் துதிக்கின்றது.
எனக்கு மிக அருகில் இருப்பவனே! உனக்கு வணக்கம். எனக்கு மிகத்தூரத்தில் இருப்பவனே! உனக்கு வணக்கம். ‘நமோ அக்ரே வதாய ச தூரே வதய ச’ என்பது ஸ்ரீருத்திரம். (எதிரிகளை முன்னின்று கொல்பவரும் எட்டியிருந்து கொல்பவராம் ஆகிய உமக்கு நமஸ்காரம்). “மெய்யடியவர்கட்கு அண்மையனே ; என்றுஞ் சேயவனே பிறர்க்கு” (திருவாசகம். நீத்தல் விண்ணப்பம் 22), “வேண்டுவார் வேண்டி லார்க்கே பெரிதுஞ் சேயார் அதிகை வீரட்டனாரே” ( திருமுறை 4.25-1). வேண்டுவாருக்கு அண்ணியார், வேண்டிலார்க்கே சேயார் எனப்பொருள் கொள்க.
சிவபெருமான், அட்டமூர்த்தங்களில் ஒன்றான ஆன்மாவை மூர்த்தியாகக் கொண்டு மூர்த்திமானாக இருப்பவன். தன் உயிரை உடலாகக் கொண்டு இருக்கும் சிவனைக் காட்டிலும் ஆன்மாவுக்கு அருகிலிருப்பவர் ஒருவரும் இலர். மெய்யடியார் அவன் அருகில் இருப்பதை அறிவர் . மெய்யடிய ரல்லாத பிறர் அவன் அருகில் இருப்பதை அறியார். எனவே, ‘ சேயானே’ என்றார்.
சிவபெருமான் ஆரழல்போற் செம்மேனி எம்மான். அந்நிறத்தின் காரணமாக மணிவாசகர் ‘ தீமேனியான்’ (திருக்கோதும்பி,20) என்றார். செந்நிற மேனி குறித்தே புட்பதந்தரும் ‘தீயாடி’ , தீயில் குளித்தவனே என்றார். சிவனடியார் அந்தர் யாக பூசையில் இத்தீமேனியையே உள்ளத்தில் இருத்தி வழிபடுகின்றனர். இந்த நெருப்பு அஞ்ஞான இருளினை ஓட்டுவதாகும்.
சிவபரம்பொருள் அண்டமெல்லாம் அணுக்கள் எனும்படியாக மிகப் பருமையன்; அதேசமயம் அணுக்கள் எல்லாம் அண்டம் எனும் படியாக மிக நுண்ணியனுமாம் . “அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டும் அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டும்’ என்பது திருவிசைப்பா. “அணோஅணீயாந் மஹதோ மஹீயாநாம்” என்பது வேதம். இவ்வாறு சிவன் நுண்ணியனாகவும் பெரியவனாகவும் இருத்தலைப் புட்பதந்தர், “ போற்றி மிக நுண்ணியனே, போற்றி மிகப் பருமையனே” எனத் துதித்தார்.
இறைவனைக் ‘காமகோபன்’ என்றார். காமனைச் சினந்தவர். காமம் என்பது பொதுவாக ஐம்புலன் நுகர்ச்சியைக் குறிக்கும். சிவன் பரமயோகி; மாயோகி. ஐம்புல நுகர்ச்சி அற்றவன். புலனை வென்றவன். எனவே அவனைக் காம கோபன் என்றார்.
சிவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள்; பின்னைப் புதுமைக்கும் புதுமையன்.
முக்கண்ணன் சிவன்.சூரியன் சந்திரன் நெருப்பு ஆகிய மூன்று சுடர்களுக்கும் ஒளியும் ஆற்றலும் நல்கும் கண்கள். சூரியன் ஒளியும் வெப்பமும் பயிர்களை வளர்க்கும் ஆற்றல்; திங்களின் ஓலி அமுதமாய்ப் பயிர்களுக்கு உள்ளீடு தருவது. நெருப்பு அழிக்கும் தன்மையது எனவெ முத்தொழிலையும் முக்கண் குறிக்கும் என்ப. நெற்ரி விழி மன்மதனைக் காய்ந்தமையால் ஞானமுமாகும்.
சிவம் மிக நுண்ணியன்; அதி சூக்குமப் பொருள் பதி. எனவே எல்லாவற்றிலும் கலந்துள்ளான். அப்படிக் கலந்து அதுவதுவாகி இருந்தாலும் அவையல்லனுமாகி உள்ளான். “யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே” என்பது மணிவாசகம். இறைவன் எல்லாப் பொருள்களாகவும் அவற்றைக் கடந்து அவையல்லாதவனாகவும் உள்ளான் அவனுக்கு என் வணக்கம்.
----------
30. முக்குணமில் சிவனுக்கு வணக்கம்
ஞாலமெலாம் படைக்குமிரா சதகுணஞ்சேர்
பவனுக்கு நமோஓ நமவஞ்
ஞாலமெலாந் துடைக்குமிகு தமோகுணஞ்சேர்
அரனுக்கு நமோஓ நமவஞ்
ஞாலவுயிர்க் கின்பளிக்குஞ் சத்துவஞ்சேர்
மிருடனுக்கு நமோஓ நமவஞ்
ஞாலமடங் காமகத்தாய் முக்குணமில்
சிவனுக்கு நமோஓ நமவே!
உலகம் அனைத்தையும் படைக்கும் இராசத குணம் சேர்ந்த ‘பவனு’க்கு வணக்கம். உலகத்தினை ஒடுக்கித் துன்பந் துடைக்கும் தமோகுணமுடைய அரனுக்கு வணக்கம். உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இன்பமளிக்கும் சத்துவ குணமுடைய மிருடனுக்கு வணக்கம்.
பவம் என்றால் பிறப்பு. ‘பவ’ மாகிய பிறப்பை அளித்தலினால் அவன் பவன். ‘நமோ பவாய ச’ என்கின்றது ஸ்ரீருத்ரம் உலகின் உற்பத்திக்குக் காரணமாக உள்ளவருக்கு வணக்கம் என்பது பொருள். சிவம் சம்பு பட்சத்தில் பவனாக (பிரமனாக)ப் பிரபஞ்சத்தைப் படைக்கின்றான். இச்செயலைச் செய்யும்போது இராசத குணம் சேர்ந்தவனாக இருக்கின்றான். செயல் படுதலாகிய தொழிலுக்குரிய குணம் இராசதம்.
படைத்த பிரபஞ்சத்தைத் துடைக்கும்போது (ஒடுக்கும்போது) தாமதகுண முடைய அரனாக, உருத்திரனாக உள்ளான். ‘ருத்ராய ச’ என்கிறது, ஸ்ரீ ருத்ரம். உலகை அழ வைக்கும் துன்பத்தைப் போக்குபவர் என்பது இதன் பொருள். உயிர்களின் வினையை அரித்தொழிப்பதனால் அவன் அரன் எனப்படுகின்றான்.
உலகுக்கு இன்பளிக்கும்போது சத்துவகுணமுடையோனாக உள்ளான். அப்பொழுது ‘மிருடன்’ என்று பெயர். ‘தயா நோ ம்ருட ஜீவஸே’ என்கின்றது ஸ்ரீருத்ரம்.
இவ்வாறு சிவம் முத்தொழில் செய்கின்றபோது, ‘பவன்’ ஆக இராசத குணத்தினனாகவும், ஒடுக்கும்போது தாமத குண அரனாகவும், இன்பதைச் செய்யும்போது சத்துவகுணனாகிய மிருடனாகவும் உள்ளான் என்றமையால் அவன் மாயையின் காரியமாகிய முக்குண வயப்பட்டவன் என்று கருதிவிடல் ஆகாது.
அண்டங்களெல்லாம் கடந்த பெரியபொருளாக (மகத்), முக்குணங்களும் இல்லாதவன் சிவன். அவன் மலரஹிதன்; எனவே குணரஹிதன்; நிர்குணன். அச்சிவனுக்கு வணக்கம்.
இவ்வாறு புட்பதந்தர் கூறியதால் சிவம் தன்னிலையில் (சொரூப நிலையில்) மாயாகாரிய முக்குணமில்லாததது. படைத்தல் முதலிய தொழில் செய்யும்போது அத்தொழிலுக்குரிய குணத்துடன் கூடுகின்றது. ஆயினும் அக்குணத்தால் விகாரப்படுதல் இல்லை.
புட்பதந்தரின் இப்பாடலுடன் கீழ்வரும் திருமந்திரப் பாடலையும் ஒப்பு நோக்கி மகிழலாம்
“நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.” (408)
‘தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருளுக்கு உரியரா யினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங் களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெரு மானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.’ இது அம்மந்திரத்தின் பொருள்.
குறிப்புரை :
கோது - குற்றம்; தீமை. குலம் - நன்மை. இராசதமும், தாமதமும், ``கோது`` எனப்பட்டன. சாத்துவிகம், ``குலம்`` எனப் பட்டது. ``முக்குணத்தால் உலகை ஆக்குகின்றனர்`` என்ற குறிப்பால் `குணாதீதனாகிய சிவன் முதல்வனாதலன்றிக் குணவயப்பட்ட ஏனையோர் முதல்வராமாறு இல்லை'
ம்ருடன் - சுகப்படச் செய்கின்றவன். சிவன் - பேரொளிப்பகவன். மகத்- பேரொளி. பக்தியின் மிகுதியால் “நமோநம” என்ரு அடுக்கிக் கூறினார்.
------------
31. அச்சம் அகற்றும் பத்தி
செறிகவலை வசமான அடியேன்புன்
மனமெங்கே? சிவனே! யாரும்
அறிவரிதாய்க் குணங்குறியின் எல்லைகடந்
தவிருநின்சீர் அருமை எங்கே?
அறிவனிஃ தெனினும்வர தா,பத்தி
எனதச்சம் அகற்றி யுன்றாள்
நறியமலர்க் கினியமொழி மலர்தூவும்
பேருறுதி நல்கிற் றச்சோ.
‘எனது மனம் கவலை எனும் இருள் சூழ்ந்தால் எவரிடம் முறை யிடுவேன்?’எனும் பல்லவிகொண்ட பாபநாசம் சிவன் அவர்களுடைய கீர்த்தனை ஒன்று உண்டு.
கவலையுடைய மனம் ஆன்மாவை அழித்துவிடும்; பாவத்தில் அமிழ்த்திவிடும். வாழ்நாள் முழுதும் அச்சத்திலேயே கழிக்கும்படி செய்துவிடும். அச்சம் கீழ்களது ஆசாரம் என்றார் திருவள்ளுவர். மாயாமலம் ஆன்மாவுக்கு விளைவிக்கும் குணம், அச்சம். (அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசாசூனியம் மாற்சரியம் பயம் ஆய ஏழ்குணனும் மாயைக்கு அருளினை’ – இருபா இருபஃது 4) ஆன்மாவின் அறிவினைச் செயல்படாது மறைப்பது ஆணவமலம் என்னும் சகசக் குற்றம், அது மாயாகாரியங்களாகிய அந்தக்கரணங்களோடு கூடுகின்றபோது அஞ்ஞானம் அச்சம் முதலிய இருளாகிய கவலை தோன்றுகின்றது.
இருள் நீங்க ஒளி இன்றியமையாதது. அந்த ஒளி சிவஞானம். சிவஞானம் சிவன் அருளும் ஞானம்.
புட்பதந்தர் இந்தப்பாடலிலே கவலையின் வசப்பட்டுச் சிவனைச் சிந்திக்க வாய்ப்பில்லாத மனத்தின் இழிவினையும் கவலையெனும் இருள் குடிகொண்ட மனத்தினால் நினைத்தும் பார்க்க முடியாத சிவத்தின் உயர்வையும் எண்ணிக் கலங்குகிறார்.
“சிவனே!கவலை வசமான இழிந்த என் மனமெங்கே! தேவர் முதலிய யாராலும் அறிதற்கு அரிதாய்க் குணம் குறி எல்லை கடந்து பிரகாசிக்கும் உன் உயர்வின் பெருமை எங்கே? இரண்டற்கும் இடையே உள்ள நீண்ட வெளியை அடியேன் அறிவேன்”
என்று இவ்வாறு கூறியவர் இந்த இடைவெளியைக் களையும் வழியையும் தாம் அறிந்துள்ளதாகக் கூறுகின்றார்.
சிவன் அறிதற்கு அருமையானவன் ஒழிய அறிய முடியாதவன் அல்லன். ஆகாயத் தாமரை முயற்கொம்பு போன்ற இல்பொருள்களே அறிய முடியாதவை. சிவம் உள்பொருள் ; யாவராலும் அறியக் கூடிய பொருளே. அவனை அறிதற்குரிய கருவியினாலேலே அவனை அறிய இயலும். அக்கருவியையும் அவனே அருளுவான். அவனருளாலே அவன்தாள் பணிந்து என்பது மணிவாசகம்.
சிவனை நெருங்கும் வழி யாது? அவனைக் காட்டும் கருவி யாது? அதுதான் அவன்மேல் வைக்கும் அன்பு அல்லது பத்தி.
“வரதா! என் மனத்தின் இழிவையும் உன் சீர்மையின் பெருமையையும் யான் அறிவேன். எனினும், உன்மேல் யான் கொண்ட அன்பு (பத்தி) எனது அச்சத்தை அகற்றியது. உன் திருவடிகளின் மீது நறிய இச் சொன்மலர்களைத் தூவி வழிபட்டுய்யும் பெரிய உறுதியை அளித்தது” .
இவ்வாறு கவலையை ஒழித்து உய்யும் வழியைத் தம்மேல் இட்டுப் புட்பதந்தர் உரைக்கின்றார். கவலையை நீக்கி வேட்டவரம் அருள்பவனாதலின் ‘வரத’ என்றழைத்தார்.
அவிரும் – ஒளிரும். அறிவனிஃது- இதனையறிவேன். வரதா – கேட்ட வரமனைத்தையும் அருள்பவனே.
இறைவன்மேல் நம்பிக்கையும் பத்தியும் இன்மையுமே மனக்கவலைக்குக் காரணம்.
“அச்சம் இலர் பாவம் இலர் கேடுமிலர் அடியார்”
“துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்”
“மூனம்நீர் செய்பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னநீ ரிடும்பையில் மூழ்குறீர் எழும்மினோ”
---- திருஞானசம்பந்தர்
“மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபுரிந்து” – அருணகிரிநாதர்.
----------
32. சொலற்கரிய புகழ்
நீலகிரி யளவுமசி நெடுங்கடற்பாத்
திரத்திளக்கிக் கற்ப தாருக்
கோலெழுது கோலாக ஓலம்போழ்
குவலயமாக் கொண்டெந் நாளும்
சாலமுயன் றகிலகலைச் செல்விவரைந்
தாலுமுன்றன் தகைமைக் கெல்லை
பாலவிழி யுடைப்பரம காணவரி
தெனல்புகழின் பால தாமோ
மசி – எழுதும் மை. ஓலம்போழ் – பனையோலை, ஏடு. பாலவிழி – நெற்றிக்கண்.
நெற்றி விழியுடைப் பரமனே! உன்னுடைய புகழைப் பாடுவதற்கு என்னைப் போன்றை குறை அறிவுடையோரால் இயலுமோ?
சொல்லின் கிழத்தியாகிய கலைமகள் கார்மேகங்கள் தவழும் நீலகிரியொத்த மசியினைக் கருங்கடலாகிய குப்பியில் இளக்கிக் கலந்து, கற்பக தாருவினை எழுதுகோலாகவும், நிலவுலகினையே எழுதப் பெறும் பனைமடலாகவும் நெடுங்காலம் கடிது முயன்றாலும் உன் புகழினை எழுதி மாளாது. என்றால் உன் பெருமைக்கு எல்லை இல்லை.; காண அரிய புகழை உடையை எனக் கூறுதல் உன்னைப் புகழ்ந்தது ஆகுமோ.
------------------
33.
பூவெயிற னாமனொரு கந்தருவர் பூமான்
மேவுபிறை சூடியடி மென்மலர் பிழைத்த
பாவமற வொண்டிறல் படைக்க,மு னிசைத்த
தாவிலமு தானசிவ மகிமையிது தானே
புட்பதந்தன் எனும் பெயருடைய கந்தருவர் தலைவர் பிறையினச் சிரசின் மீதணிந்த பெருமானாகிய சிவபெருமானின் திருவடிமலருக் கிழைத்த பாவம் நீங்க, அருளாற்றல் மீளப் பெற அப்பெருமான் முன் இசைத்த குறைவிலா அமுதமான சிவமகிமை இந்நூலே.
பூவெயிறன் – புஷ்பதந்தர். பூமான் – தலைவ்ன்
-----------
34.
தேவர்கள்தம் பெருமானைச்செல்லாத
செந்நெறிக்கே செலுத்து வானை
யாவர்கரங் குவித்தன்பாய்ப் புட்பதந்தன்
இசைத்ததுதி மாலை யாலே
ஆவலொடு தோத்திரிப்பார் அவர்சிவனுக்
கணுக்கராய் அமரர் போற்ற
மேவரிய நலநுகர்ந்து சிவகதியும்
மிகவெளிதாய் மேவு வாரே.
- செந்நெறி - வீட்டுலகநெறி. சிவனுக்கணுக்கராய் – சிவசாமீப பதம் பெற்றவர்களாய். சிவகதி – வீடுபேறு.
தேவர்களுக் கெல்லம் தேவனகிய மகாதேவனை, செல்லுதற்கு அருமையான வீட்டுலக நெறியில் ஆன்மாக்களைச் செலுத்துவானை யாரொருவர் கரங்குவித்துப் பத்தியுடன் புட்பதந்தன் இசைத்த இத் துதிமாலையாலே தோத்திரிப்பாரோ அவர் சிவனுக்கு அணுக்கராகி, தொழப்படும் தேவர்கள் தம்மாலும் தொழப்பட்டு, இம்மையில் பல நலங்களும் நுகர்ந்து பின் சிவகதியாகிய வீடுபேறும் மிக எளிதாகப் பெறுவாரே.
----------
35.
திருவாளன் புட்பதந்தன் வாய்மலரிற்
செனித்ததுதி மாலைத் தேனைப்
பெருமானுக் கினியதனைப் பவமறுக்கு
அருமருந்தைப் பேணி யோதின்
உருவாரக் கைக்கொள்ளின் ஓதநினைந்
திடினொருவர் உமையாள் பாக
மருவாதி அந்தமிலா மகதேவன்
திருவுளத்தை மகிழ்வித் தாரே.
திருவாளன் புட்பதந்தன் திருவாய் மலரில் பிறந்த இந்தத் துதிமாலையை, இனிய தேனை, சிவபெருமானுக்கு விருப்பமானதை பிறப்பறுக்கும் அரிய மருந்தினை, போற்றி ஓதினால், இவ்வேட்டினைக் கையில் தாங்கியிருந்தால் , இப்பாடல்களை ஓத விருப்பமுற்று நினைந்தால் அத்தகையவர் உமாதேவியாரைப் பாகத்திலே கொண்டவரும் ஆதியும் அந்தமுமில்லாத மகாதேவரின் உள்ளத்தை மகிழ்வித்தவராவார்.
-------------
36.
போயபிற வியிலுன்னைப் புரகரயான்
போற்றாத புன்மை யேனிஃ
தாயபிற வியினாலே அறிந்தேன்மற்
றிப்பிறப்பிற் சீவன் முத்தி
மேயதனால் உனைப்போற்ற மேலைவரு
பிறவியிலேன் விளையு மிந்தத்
தீயவப ராதமிரண் டனையுமுளம்
பொறுத்தருள்க தேவ தேவே.
கழிந்த பிறவிகளில், முப்புரங்களை அழித்தோனே! உன்னை வழிபடாத புன்மையைஉடையேன்; அதனை இந்தப் பிறவியிலே செய்த பாவத்தாலே அறிந்தேன். ஆயினும் இப்பிறப்பில் உன்னருளைப் பெற்றுச் சீவன் முத்தன் ஆயினேன். எனவே, எனக்கு இனிப் பிறவியில்லை. கடந்த பிறவியில் உன்னைப் போற்றாத அபராதமும் இனிப் பிறவியின்மையால் உன்னைப் போற்றும் வாய்ப்பின்மையாகிய அபராதமும் ஆகிய இரண்டனையும் பொறுத்தருள்க, தேவ தேவனே!
சிவமஹிம்ந ஸ்தோத்திரம் முற்றும்.
----------
..śiva mahimna stōtram.. (as per ISO transliteration scheme)
mahimnaḥ pāraṁ tē paramaviduṣō yadyasadr̥śī
stutirbrahmādīnāmapi tadavasannāstvayi giraḥ
athā’vācyaḥ sarvaḥ svamatipariṇāmāvadhi gr̥ṇan
mamāpyēṣa stōtrē hara nirapavādaḥ parikaraḥ 1
atītaḥ paṁthānaṁ tava ca mahimā vāṅmanasayōḥ
atadvyāvr̥ttyā yaṁ cakitamabhidhattē śrutirapi
sa kasya stōtravyaḥ katividhaguṇaḥ kasya viṣayaḥ
padē tvarvācīnē patati na manaḥ kasya na vacaḥ 2
madhusphītā vācaḥ paramamamr̥taṁ nirmitavataḥ
tava brahman kiṁ vāgapi suragurōrvismayapadam
mama tvētāṁ vāṇīṁ guṇakathanapuṇyēna bhavataḥ
punāmītyarthē’smin puramathana buddhirvyavasitā 3
tavaiśvaryaṁ yattajjagadudayarakṣāpralayakr̥t
trayīvastu vyastaṁ tisruṣu guṇabhinnāsu tanuṣu .
abhavyānāmasmin varada ramaṇīyāmaramaṇīṁ
vihantuṁ vyākrōśīṁ vidadhata ihaikē jaḍadhiyaḥ 4
kimīhaḥ kiṁkāyaḥ sa khalu kimupāyastribhuvanaṁ
kimādhārō dhātā sr̥jati kimupādāna iti ca
atarkyaiśvaryē tvayyanavasara duḥsthō hatadhiyaḥ
kutarkō’yaṁ kāṁścit mukharayati mōhāya jagataḥ 5
ajanmānō lōkāḥ kimavayavavantō’pi jagatāṁ
adhiṣṭhātāraṁ kiṁ bhavavidhiranādr̥tya bhavati
anīśō vā kuryād bhuvanajananē kaḥ parikarō
yatō mandāstvāṁ pratyamaravara saṁśērata imē... 6
trayī sāṅkhyaṁ yōgaḥ paśupatimataṁ vaiṣṇavamiti
prabhinnē prasthānē paramidamadaḥ pathyamiti ca
rucīnāṁ vaicitryādr̥jukuṭila nānāpathajuṣāṁ
nr̥ṇāmēkō gamyastvamasi payasāmarṇava iva. 7
mahōkṣaḥ khaṭvāṅgaṁ paraśurajinaṁ bhasma phaṇinaḥ
kapālaṁ cētīyattava varada tantrōpakaraṇam .
surāstāṁ tāmr̥ddhiṁ dadhati tu bhavadbhūpraṇihitāṁ
na hi svātmārāmaṁ viṣayamr̥gatr̥ṣṇā bhramayati. 8
dhruvaṁ kaścit sarvaṁ sakalamaparastvadhruvamidaṁ
parō dhrauvyā’dhrauvyē jagati gadati vyastaviṣayē
samastē’pyētasmin puramathana tairvismita iva
stuvan jihrēmi tvāṁ na khalu nanu dhr̥ṣṭā mukharatā. 9
tavaiśvaryaṁ yatnād yadupari viriñcirhariradhaḥ
paricchētuṁ yātāvanilamanalaskandhavapuṣaḥ
tatō bhaktiśraddhā-bharaguru-gr̥ṇadbhyāṁ giriśa yat
svayaṁ tasthē tābhyāṁ tava kimanuvr̥ttirna phalati. 10
ayatnādāsādya tribhuvanamavairavyatikaraṁ
daśāsyō yadbāhūnabhr̥ta-raṇakaṇḍū-paravaśān
śiraḥpadmaśrēṇī-racitacaraṇāmbhōruha-balēḥ
sthirāyāstvadbhaktēstripurahara visphūrjitamidam. 11
amuṣya tvatsēvā-samadhigatasāraṁ bhujavanaṁ
balāt kailāsē’pi tvadadhivasatau vikramayataḥ
alabhyāpātālē’pyalasacalitāṁguṣṭhaśirasi
pratiṣṭhā tvayyāsīd dhruvamupacitō muhyati khalaḥ 12
yadr̥ddhiṁ sutrāmṇō varada paramōccairapi satīṁ
adhaścakrē bāṇaḥ parijanavidhēyatribhuvanaḥ
na taccitraṁ tasmin varivasitari tvaccaraṇayōḥ
na kasyāpyunnatyai bhavati śirasastvayyavanatiḥ 13
akāṇḍa-brahmāṇḍa-kṣayacakita-dēvāsurakr̥pā
vidhēyasyā’’sīd yastrinayana viṣaṁ saṁhr̥tavataḥ
sa kalmāṣaḥ kaṇṭhē tava na kurutē na śriyamahō
vikārō’pi ślāghyō bhuvana-bhaya-bhaṅga-vyasaninaḥ 14
asiddhārthā naiva kvacidapi sadēvāsuranarē
nivartantē nityaṁ jagati jayinō yasya viśikhāḥ
sa paśyannīśa tvāmitarasurasādhāraṇamabhūt
smaraḥ smartavyātmā na hi vaśiṣu pathyaḥ paribhavaḥ 15
mahī pādāghātād vrajati sahasā saṁśayapadaṁ
padaṁ viṣṇōrbhrāmyad bhuja-parigha-rugṇa-graha-gaṇam
muhurdyaurdausthyaṁ yātyanibhr̥ta-jaṭā-tāḍita-taṭā
jagadrakṣāyai tvaṁ naṭasi nanu vāmaiva vibhutā. 16
viyadvyāpī tārā-gaṇa-guṇita-phēnōdgama-ruciḥ
pravāhō vārāṁ yaḥ pr̥ṣatalaghudr̥ṣṭaḥ śirasi tē
jagaddvīpākāraṁ jaladhivalayaṁ tēna kr̥tamiti
anēnaivōnnēyaṁ dhr̥tamahima divyaṁ tava vapuḥ 17
rathaḥ kṣōṇī yantā śatadhr̥tiragēndrō dhanurathō
rathāṅgē candrārkau ratha-caraṇa-pāṇiḥ śara iti
didhakṣōstē kō’yaṁ tripuratr̥ṇamāḍambara vidhiḥ
vidhēyaiḥ krīḍantyō na khalu paratantrāḥ prabhudhiyaḥ 18
haristē sahasraṁ kamala balimādhāya padayōḥ
yadēkōnē tasmin nijamudaharannētrakamalam
gatō bhaktyudrēkaḥ pariṇatimasau cakravapuṣaḥ
trayāṇāṁ rakṣāyai tripurahara jāgarti jagatām. 19
kratau suptē jāgrat tvamasi phalayōgē kratumatāṁ
kva karma pradhvastaṁ phalati puruṣārādhanamr̥tē
atastvāṁ samprēkṣya kratuṣu phaladāna-pratibhuvaṁ
śrutau śraddhāṁ badhvā dr̥ḍhaparikaraḥ karmasu janaḥ 20
kriyādakṣō dakṣaḥ kratupatiradhīśastanubhr̥tāṁ
r̥ṣīṇāmārtvijyaṁ śaraṇada sadasyāḥ sura-gaṇāḥ
kratubhraṁśastvattaḥ kratuphala-vidhāna-vyasaninaḥ
dhruvaṁ kartuṁ śraddhā vidhuramabhicārāya hi makhāḥ 21
prajānāthaṁ nātha prasabhamabhikaṁ svāṁ duhitaraṁ
gataṁ rōhid bhūtāṁ riramayiṣumr̥ṣyasya vapuṣā
dhanuṣpāṇēryātaṁ divamapi sapatrākr̥tamamuṁ
trasantaṁ tē’dyāpi tyajati na mr̥gavyādharabhasaḥ 22
svalāvaṇyāśaṁsā dhr̥tadhanuṣamahnāya tr̥ṇavat
puraḥ pluṣṭaṁ dr̥ṣṭvā puramathana puṣpāyudhamapi
yadi straiṇaṁ dēvī yamanirata-dēhārdha-ghaṭanāt
avaiti tvāmaddhā bata varada mugdhā yuvatayaḥ 23
śmaśānēṣvākrīḍā smarahara piśācāḥ sahacarāḥ
citā-bhasmālēpaḥ sragapi nr̥karōṭī-parikaraḥ
amaṅgalyaṁ śīlaṁ tava bhavatu nāmaivamakhilaṁ
tathāpi smartr̥̄ṇāṁ varada paramaṁ maṅgalamasi 24
manaḥ pratyak cittē savidhamavidhāyātta-marutaḥ
prahr̥ṣyadrōmāṇaḥ pramada-salilōtsaṅgati-dr̥śaḥ
yadālōkyāhlādaṁ hrada iva nimajyāmr̥tamayē
dadhatyantastattvaṁ kimapi yaminastat kila bhavān 25
tvamarkastvaṁ sōmastvamasi pavanastvaṁ hutavahaḥ
tvamāpastvaṁ vyōma tvamu dharaṇirātmā tvamiti ca
paricchinnāmēvaṁ tvayi pariṇatā bibhrati giraṁ
na vidmastattattvaṁ vayamiha tu yat tvaṁ na bhavasi 26
trayīṁ tisrō vr̥ttīstribhuvanamathō trīnapi surān
akārādyairvarṇaistribhirabhidadhat tīrṇavikr̥ti
turīyaṁ tē dhāma dhvanibhiravarundhānamaṇubhiḥ
samasta-vyastaṁ tvāṁ śaraṇada gr̥ṇātyōmiti padam 27
bhavaḥ śarvō rudraḥ paśupatirathōgraḥ sahamahān
tathā bhīmēśānāviti yadabhidhānāṣṭakamidam
amuṣmin pratyēkaṁ pravicarati dēva śrutirapi
priyāyāsmaidhāmnē praṇihita-namasyō’smi bhavatē 28
namō nēdiṣṭhāya priyadava daviṣṭhāya ca namaḥ
namaḥ kṣōdiṣṭhāya smarahara mahiṣṭhāya ca namaḥ
namō varṣiṣṭhāya trinayana yaviṣṭhāya ca namaḥ
namaḥ sarvasmai tē tadidamatisarvāya ca namaḥ 29
bahula-rajasē viśvōtpattau bhavāya namō namaḥ
prabala-tamasē tat saṁhārē harāya namō namaḥ
jana-sukhakr̥tē sattvōdriktau mr̥ḍāya namō namaḥ
pramahasi padē nistraiguṇyē śivāya namō namaḥ 30
kr̥śa-pariṇati-cētaḥ klēśavaśyaṁ kva cēdaṁ
kva ca tava guṇa-sīmōllaṅghinī śaśvadr̥ddhiḥ
iti cakitamamandīkr̥tya māṁ bhaktirādhād
varada caraṇayōstē vākya-puṣpōpahāram 31
asita-giri-samaṁ syāt kajjalaṁ sindhu-pātrē
sura-taruvara-śākhā lēkhanī patramurvī
likhati yadi gr̥hītvā śāradā sarvakālaṁ
tadapi tava guṇānāmīśa pāraṁ na yāti 32
asura-sura-munīndrairarcitasyēndu-maulēḥ
grathita-guṇamahimnō nirguṇasyēśvarasya
sakala-gaṇa-variṣṭhaḥ puṣpadantābhidhānaḥ
ruciramalaghuvr̥ttaiḥ stōtramētaccakāra 33
aharaharanavadyaṁ dhūrjaṭēḥ stōtramētat
paṭhati paramabhaktyā śuddha-cittaḥ pumān yaḥ
sa bhavati śivalōkē rudratulyastathā’tra
pracuratara-dhanāyuḥ putravān kīrtimāṁśca 34
mahēśānnāparō dēvō mahimnō nāparā stutiḥ .
aghōrānnāparō mantrō nāsti tattvaṁ gurōḥ param ..
dīkṣā dānaṁ tapastīrthaṁ jñānaṁ yōgādikāḥ kriyāḥ .
mahimnastava pāṭhasya kalāṁ nārhanti ṣōḍaśīm ..
kusumadaśana-nāmā sarva-gandharva-rājaḥ
śaśidharavara-maulērdēvadēvasya dāsaḥ .
sa khalu nija-mahimnō bhraṣṭa ēvāsya rōṣāt
stavanamidamakārṣīd divya-divyaṁ mahimnaḥ ..
suragurumabhipūjya svarga-mōkṣaika-hētuṁ
paṭhati yadi manuṣyaḥ prāñjalirnānya-cētāḥ .
vrajati śiva-samīpaṁ kinnaraiḥ stūyamānaḥ
stavanamidamamōghaṁ puṣpadantapraṇītam ..
śrī puṣpadanta-mukha-paṁkaja-nirgatēna
stōtrēṇa kilbiṣa-harēṇa hara-priyēṇa .
kaṇṭhasthitēna paṭhitēna samāhitēna
suprīṇitō bhavati bhūtapatirmahēśaḥ ..
---------------
This file was last updated on 24 Sept. 2020.
Feel free to send the corrections to the webmaster.