ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
தமிழ் மொழிபெயர்ப்பும், உரை விளக்கம்
Dakshinamurthy Stotram - Tamil translation
with commentary/notes by
Natesa Gounder & Muthukumaraswamy
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. C.N. Muthukumaraswamy of Coimbatore for providing the e-version of this work
and permissions to include the work as part of Project Madurai collections
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
தமிழ் மொழிபெயர்ப்பும், உரை விளக்கம்
Source:
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
வடமொழி மூலம் : ஸ்ரீ சங்கர பகவத்பாதர்
தமிழ் மொழிபெயர்ப்பு : கோவை கவியரசு கு. நடேச கவுண்டர்
உரை விளக்கம்: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
மொழிபெயர்ப்பாசிரியனின் நோட்டுப் புத்தகத்திலிருந்து பெயர்த்தெழுதி உரை எழுதப்பட்டது.
--------------
உ
சிவமயம்
தர்ப்பணமும் சொப்பனமும்
பார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்
பகர்மாயை யாற்புறத்தே
பார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்
பயில்கனவு பொய்யா தல்போல்
ஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை யுணர்த்தி
உலகுய்ய யோகத் திருக்கும்
சீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (1)
கல்லாலின் புடையமர்ந்து அறமுரைக்கும் தென்முகக் கடவுளைப் போற்றித் துதிக்கும் பாமாலைகளில் ஒன்று பகவத்பாதர்களின் தட்சிணாமூர்த்தி அட்டகம் எனப்படும் தட்சிணாமூர்த்தி தோத்திரம்.. சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் இந்நூலில் பல உள்ளன எனினும்,, என்ன காரணமோ, நான் இத்தோத்திரத்தினை விரும்பிப் படிக்கின்றேன்.
காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை என்று உணர்த்த பகவத் பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை (திருஷ்டாந்தம்) முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர்; இரண்டாவது சொப்பன நகர். அதாவது, முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர்; மற்றையது, சொப்பனத்தில் காணப்படும் நகர்.
தர்ப்பணம் அதிஷ்டானம்; அதன் மீது பிரதிபிம்ப நகர் அதிட்டித்துள்லது; அதாவது, ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் (கண்ணாடி) ஆதாரம். பிரதி பிம்பம் ஆதேயம். ஆதாரமின்றி ஆதேயமில்லை.. பிரதி பிம்ப நகர் போலித் தோற்றமே. அது போன்றே காணப்படும் இப்பிரபஞ்சமும் மித்தையே. (இந்த எடுத்துக்காட்டை விளக்கவரும் பெரியோர்கள், பிரதிபிம்பத்தையே நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதிபிம்பத்துக்குக் காரணமான உண்மைப்பொருளை மறந்துவிடுமாறும் கூறுகின்றனர். ( focus only on the mirror and the reflected ciy)
எனக்கென்னவோ, ‘’குரங்கினை நினக்காமல் மருந்து சாப்பிடு’ என அறிவுறுக்கப்பட்டவன், மருந்துப் புட்டியைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கு நினைவுக்கு வருவதைப் போல, நிஜமான பொருள் இல்லாமல் கண்ணாடி எப்படி ஒன்றைப் பிரதி பலிக்கும் என்ற ஐயமும் உடன் தோன்றுகின்றது.
கண்ணாடி சத்துப் பொருளுக்குக் குறியீடு; அதில் பிரதிபலிக்கும் மாயத்தோற்றமாகிய நகர், மித்தையான, போலியான பிரபஞ்சத்துக்குக் குறியீடு. பிரதிபிம்பம் நீங்கினாலும் கண்ணாடி இருப்பதைப் போல பிரபஞ்சம் நீங்கினால் சத்து என்றும் இருக்கும். எப்படிக் கண்ணாடியாகிய ஆதாரமின்றிப் பிரதிபிம்பமான பொய் நகருக்கு இருப்பு இல்லையோ, அவ்வாறே, சத்தாகிய பிரமத்தின் சார்பின்றி, மித்தையான பிரபஞ்சத்துக்குச் சுதந்திரமான இருப்பு கிடையாது இவ்வாறு இந்த எடுத்துக் காட்டுச் சத்தான பிரமத்தின் ‘அத்வைதத்துவமான ஏகத்துவதை” (ஒரு பொருள். உள்ளது ஒருபொருளே; வேறு இல்லை) உணர்த்தும் என்பர். (Reflected objects aremithyA, having no existenceof their own. Sath only exist – advaiyathvam)
பிரதிபலிக்கப்படும் பொருளின்றிப் பிரதிபிம்பம் தோன்றுமா? சத்தான பிரமத்தின் மீது பொய்ப்பிரபஞ்சத்தை ஏற்றிக் காண்பவர் யார்? சத்துப் பொருள் ஒன்றே உலதெனில் அது தன்மீது பொய்பொருளை ஏற்றிக் கொண்டு தன்னைத்தானே மித்தையாகக் காணுகிறதா?
ஞானியர் வாக்கைப் பொய்ப்படுத்திப் பேசும் கீழ்மைக் குணம் எனக்கில்லை; ஆயினும் பெரியோரிடம் வினவாமல் விளக்கம் பெற முடியுமா?
தர்ப்பண எடுத்துக் காட்டு சைவசித்தாந்தத்திலும் உண்டு. சைவ சித்தாந்தத்தில் மாயை உள்பொருள் அதன் இருப்பு சிவசத்தியாகிய ஆதிசத்தி எனப்படும் திரோதான சத்தி.
ஆணவமலத்தால் அறிவு மறைப்புண்ட உயிருக்கு, ஆதிசத்தி மாயாகாரிய, மாயேயங்களாகிய உடல், கருவி, உலகு, அனுபவம் ஆகியவற்றைத் தந்துதவி, அதன் அறிவினை வளரச் செய்கின்றது. உயிர் அறிவுடைப் பொருளென்றாலும், அது வியஞ்சகம் அல்லது கருவியொன்றைப் பற்றியே அறியும்.
ஆணவ இருளில், சிவப்பிரகாசமாகிய சூரியன் வந்து விடியும் வரைக்கும் உயிருக்கு சிற்றொளி தந்து பொருள்களை அறியும் அறிவைத் தருவது மாயேயங்கள். “மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை” (சிவஞானபோதம் சூ 4.அதி 3 )
மாயை பொருளை அறியும் அறிவை உயிருக்குத் தந்தாலும் அது அறிவுடைய பொருளன்று. இதனை விளக்க மாயைக்கு உவமையாக எடுத்துக் காட்டாகத் தர்ப்பணம் கூறப்படுகிறது.
கண் காணும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் அது தன்னைத் தான் காணுமோ?. கண் தன்னைத்தான் காண வேண்டில் தர்ப்பணம் வேண்டும் தர்ப்பணத்தில் பிரதி பிம்பமாகத்தான் தன்னைத்தான் காணமுடியும்.
உயிர் அறிவுடைப் பொருள்தான். ஆயினும் தன் அறிவினால் தன்னைக் காண அதற்குத் தர்ப்பணமாகிய மாயாகருவிகள் வேண்டியுளது. தன்னைத் தான் காணமுடியாத கண்ணுக்குக் தர்ப்பணம் கண்ணைக் காணச் செய்து, தான் காணமாட்டாது இருப்பது போல உயிருக்குப் பொருள்களை அறியச் செய்து , தான் அறிவின்றி இருப்பது மாயா காரியம்.
இதனைச் சிவஞானபோத வெண்பா “சார்மாயை அனைத்துமாய் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் நீயல்லை” என்று கூறியது. இதன் பொருள்: நிலம் முதலிய காரியம் அனைத்துமாய் நின்னொடு (உயிரொடு) விரவி நின்று இப்பெத்த காலத்துக் கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கு அறிவை விளக்கி நிற்றல் மாத்திரையே யன்றி (மாயை) அறிவதன்று. ஆகலான் நீ அம்மாயை அல்லை. மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமும் அல்லை” என்பதாம்.
இந்த எடுத்துக் காட்டில்,
கண் – உயிர், கண்ணொளி – உயிர் அறிவு.
தர்ப்பணம் - மாயேயங்கள்.
. பிரதிபிம்பம்- மாயேயங்களில் சத்த பரிச ரூப ரச கந்தங்களாய ஐம்புலனைவும் அந்தக்கரணங்களின் அறிவும் .
சொப்பனநகர் (கனவில் தோன்றும் நகர்).
நனவில் காணப்படும் நகர் எனக்கு வெளியே, என் பொறி புலன்களால் அறிந்து அனுபவிக்கப்படுவதாக உள்ளது. சொப்பன நகர் எனக்குள்ளே உள்ளது; புறப் பொருள்களை நுகரும் என் கண் முதலிய கருவிகளால் அறியப்படாமல் எனக்குள்ளே உள்ளது. எனக்குள்ளே உள்ள நகரைச் சொப்பனத்தில் எனக்கு வெளியே உள்ளதைப் போலக் காண்கின்றேன். உண்மையில் இல்லாத ஒன்றை உண்மையில் உள்ளது போலக் கண்கின்றேன். எனக்குள் மித்தையாக, பொய்யாக இருக்கும் நகரை, கனவாகக் காண்கின்றபோது, அதை, எனக்கு வெளியில், உண்மையில் உள்ள பொருளாகக் கண்டு அனுபவிக்கின்றேன்.
இந்த அனுபவம் எனக்கு உறக்கம் இருக்கின்ற வரைதான் நிகழ்கின்றது. உறக்கம் நீங்கி விழிப்பு வந்ததும் அந்த கனவு நகரம் ஒழிந்துபோய் விடுகிறது.
கனவில், நான் என்னை, மகாராஜாவாக, எல்லாரையும் ஏவிப் பணிக்கொள்ளும் அதிகாரம் படைத்தவனாகக் காண்கின்றேன். விழிப்பு வந்ததும் , அரசனாக நான் அனுபவித்த அனைத்துச் சுகங்களும் காணாமற் போய்விடுகின்றன. ‘பொய்யாய்ப் பழங்கனவாய் போயிற்று’ என ஒரு உலக வசனமும் உண்டே.
எனவே, என் சொப்பன உலகுக்கு என் நித்திரையே ஆதாரம். என்னுடைய உறக்கமே எனக்குள் நிகழ்வதான பொய்யான கனவை, எனக்குப் புறத்தே உண்மையாக உள்ளது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றது.
வேதாந்த நூலில் இந்நித்திரை எதனைச் சுட்டுகின்றது?
உலக வாழ்க்கையாகிய சம்சார வாழ்க்கையில் உழன்று இன்பத்துன்பங்களை அனுபவிக்கும்போது, நாம் அனைவரும் ‘அவித்தை’ எனும் ‘அஞ்ஞான நித்திரையில்’ ஆழ்ந்து கிடக்கின்றோம்.
உறக்கம் நீங்கி விழிப்பு வரும்போது. உறக்கத்துடன் கனவும் நீங்கி விடுதல்போல ‘, பிரபோத ஞானமாகிய மெய்யுணர்வாகிய விழிப்பு வரும்பொழுது, ‘அஞ்ஞான நித்திரையுடன்’, சமுசார உலக வாழ்க்கையாகிய கனவு நிலையும் பொய்யென நீங்கி விடுகின்றது.
வேதாந்தத்தில் நனவு, கனவு இரண்டுமே பொய்; மித்தை. இரண்டையும் அனுபவிக்கும் ஆன்மாவே மெய். ஆத்மா அதிஷ்டானம்; அதன்மீது அதிட்டிக்கப்பட்டது, அஞ்ஞானமாகிய நித்திரை. அதனால் உருவாவது கனவுலகம். ஆத்ம அதிஷ்டானமாகிய அஞ்ஞானமே வேதாந்தத்தில் உறக்கம் எனப்படுகிறது.
கதோபநிஷதம் , ’உத்திஷ்ட! உத்திஷ்ட!!’ (எழுமின் விழிமின்) எனத் தட்டி எழுப்புவது, இந்த அஞ்ஞான, அவித்தியா நித்திரையில் உறங்கிக் கனவுலகத்தை நனவுலகமாக நம்பி வாழ்ந்து உழண்டு கொண்டிருக்க்கின்ற நம்மையே என்பர்.
இந்தக் கருத்தை ஒரு கதையின் வழியே வேதாந்திகள் விளக்குவர். அக்கதை:
அக்கதை.
ஜனக மகாராஜர் அரசவையில் வீற்றிருந்தார். அச்சமயத்தில் ஒற்றர் தலைவன் வெகு வேகமாக வந்து,” அரசே! பகையரசன் பெரும்படையுடன் நம் நாட்டின்மீது படையெடுத்து வருகின்றான்’ என்று பதைபதைப்புடன் கூறினான். இதை எதிர்பாராத ஜனகமகாராஜன் உடனே தன் படைகளைத் திரட்டிக்கொண்டு பகையரசனைப் போர்க்களத்தில் சந்தித்தான். பெரும்போர் மூண்டது. ஜனகனுடைய படை படுதோல்வியடைந்து, முழுதும் அழிந்தது. ஜனகன் மட்டும் உயிர் பிழைத்து அண்டை நாட்டுக்குத் தப்பியோடினான். அரசன் எனச் சொல்லிக் கொள்வதற்கு எந்த அடையாளமும் அவனிடமிருக் க வில்லை. பலநாட்கள் உணவில்லமல் பட்டினியாக இருந்ததால் உடல் மெலிந்து சோர்வடைந்திருந்தான். மானம் காக்கும் கோவணம் மட்டுமே ஆடையாக இருந்தது. போய்ச் சேர்ந்த இடமும் பட்டினிப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஓரிடத்தில் கஞ்சி வார்த்துக் கொண்டிருந்தார்கள். கஞ்சியைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண் டிருந் தார்கள். அந்த வரிசையில் ஜனகனும்போய் நின்றான். கஞ்சி வார்ப்போரிடம் இவன் போய்ச் சேர்ந்தபோது, கஞ்சி காலியாகிவிட்டிருந்தது. இவனுடைய பரிதாபமான நிலையைக் கண்ட கஞ்சிவார்ப்போர் அடிப்பத்தைச் சுரண்டி இவனுடைய கலயத்தில் வார்த்தனர். கொஞ்சம்போலக் கஞ்சிக் கசடிருந்த கலயத்தினை வாயருகில் கொண்டுபோகும்போது எங்கிருந்தோ பசியோடு பாய்ந்து வந்த காகம் கலயத்தைத் தட்டிவிட்டது. கலயம் கீழே விழுந்து உடைந்துபோனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. ஜனகன் ஐயோ என்று அலறினான்.
“அரசே! அரசே!! ஏன் அலறினீர்கள்? சேவகன் வினவியபோதுதான், இதுவரைதான் அனுபவித்த அவமானங்களும் சிறுமைகளும் துயரங்களும் உறக்கத்தில் தான் கண்ட கனவு என்று ஜனகன் அறிந்தான். கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா? கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா? நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை? கண்ணில் தென்படுவோரிடமெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா? எது உண்மை?’ எனக் கேட்கத் தொடங்கி விட்டான். அரசனுக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அரசகாரியங்கள் எதுவும் முறையாக நடைபெறவில்லை. மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா? எது நிசம்?’ எனும் அரசனின் வினாவே பேச்சாக இருந்தது.
அச்சமயத்தில் அந்நகருக்கு அஷ்டவக்ரமுனி என்னும் பெரியார் வந்தார். அரசனுடைய நிலைமையைக் கேள்விப்பட்டார். அரசனைக் கண்டார். அரசன் வழக்கம்போல அது நிசமா அல்லது இது நிசமா என அஷ்டவக்ரமுனிவரிடமும் வினவினான்.
முனிவர், ‘அரசே! நீங்கள் பிச்சைக்காரனைப் போல, வறியவனாக, உணவின்றித் துன்பப்பட்ட காலத்தில், எது உண்மையாக இருந்தது? அப்பொழுது, இப்பொழுது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரச அதிகாரபோகங்கள் இருந்தனவா? எனக் கேட்டார். அரசன், அதற்கு, அப்பொழுது பிச்சையெடுக்கும் நிலைமைத் துன்பம் உண்மையாக இருந்தது; அரசபோகம் அப்பொழுது இல்லை எனப் பதிலுரைத்தான்.
இப்பொழுது எந்நிலை உண்மையாகவுள்ளது? எது பொய்யாக உள்ளது? என முனிவர் கேட்க அரசனாக இருக்கும் நிலைமை உண்மையாகவும், கனவிற் கண்ட துயரம் பொய்யாகவும் தெரிகிறது என அரசன் பதிலுரைத்தான். நனவு, கனவு இரண்டையும் கண்டது நீதானே, என முனிவர் கேட்க, அரசன் இரண்டையும் தானே கண்டதாகக் கூறினான்.
அதற்கு முனிவர் ‘நீ கனவில் கண்டதும் உண்மையல்ல, நனவில் நீ கண்டுகொண்டிருப்பதும் உண்மையல்ல; இரண்டும் பொய். இரண்டையும் கண்ட நீயே மெய்’ என என அறிவுறுத்தினார்.
அஞ்ஞான நித்திரை நீங்கி ஞானவிழிப்புப் பெற்றபோது ஆன்மாவுக்குள் முன் இருந்த பொய்யான(சொப்பன) மித்தியா உலகம் மறைந்து சத்துப் பொருளாகியாகிய ‘ஆன்மா’வாம் நானே உளன் வேறு பொருள் ஒன்றும் இல்லைஎன்ற ஞானம் பிறக்கின்றது. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன்
இந்த உண்மையை ஓர்ந்து (அராய்ந்து சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி) அறியுமாறு உபதேசிக்கும் குரு, பரமகுருவாம் தக்ஷிணாமூர்த்தி. இந்த உபதேசத்தை வாய் மொழியான சொற்களால் கூறாது, மௌனியாய் இருந்து காட்டிப் போதிக்கும் குருமூர்த்தி தக்ஷிணா மூத்திக்கு என் வணக்கம்
(தொடரும்) நனவு கனவு பற்றிச் சைவ நூற் சிந்தனைகளை அடுத்த பதிவிற் காண்போம்.
தர்ப்பணமும் சொப்பனமும் (தொடர்ச்சி)
சைவ சாத்திரங்களில் தர்ப்பணம் (முகம்பார்க்கும் கண்ணாடி) பற்றிய மேலும் சில செய்திகள்.
ஆன்மா என்னும் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் (நகரம்) பொய்யினைச், சத்தல்லாததை, மித்தையைக் காட்டுகின்றது என ஒரு சாரார் சொல்ல, சைவசாத்திரம், ஆன்மாவாகிய கண்ணாடி சத்தாகிய பரமான்மாவைக் காட்டும் எனக் கூறுகின்றது.
சீவான்மாவில் பரம ஆன்மா வெளிப்படுவன்.. அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு, கரணங்களெல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றனாகிய இறைவனே, அணுவும் ஓரண்டமாம் சிறுமை கொண்டு, ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு, “ உள்ளத்துள் ஓங்காரமாய்” நிற்கின்றான். மாயாகாரியமகிய இந்த வுடலினுள், “எள்ளிலே எண்ணெயும், நீர் வருமிடத்தில் நீரும் , ஞெகிழிக் கட்டையிலே நெருப்பும்போல நிற்கின்றான். ( “திலேஷுதைலம் ததீநீவசஸ்பிராபஸ் ஸ்ரோதஸ் வரணீஷுசாக்கி: ஏவமாமநி ஜயதே” சுவேதாச்வதரோபநிடதம்). அவ்வாறு நிற்கின்ற அவனை உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் வெளிப்பட்டுத் தோன்றுவான் (அப்பர், திருக்குறுந்தொகை)
முறுக வாங்கிக் கடைதல் எதைக் குறிக்கின்றது? ஆன்மாவினுள் இருக்கும் பரமவான்மாவை உள்ளமொன்றித் தியானிக்கும் ஒருமையுணர்வைக் குறிக்கின்றது. அதுவே அந்தர் யாகம் எனவும் அது முத்தி சாதனம் எனவும் பேசப்படுகின்றது.
தர்ப்பணத்தைப் பொடியிட்டு விளக்க விளக்க வந்திடும் அவ்வொளியேபோல்” அந்தரியாக வழிபாட்டால்,”அரன் உளத்தே வரவர வந்திடுவன்” என்கிறது சிவஞான சித்தியார்.
கண்ணாடியின்மீது படிந்துள்ள அழுக்கை நீக்க நீக்க ஒளி பிரகாசிப்பதைப் போல மனப்பசையாகிய அழுக்கு நீங்க நீங்க ஆன்மாவில் பரமான்மா தோன்றும் என்பது கருத்து.
குமரகுருபர சுவாமிகள் அருளியது, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா.
அதில், முருகப் பெருமானின் தசாங்கத்தில் ஆணையென்னும் உறுப்பைக் கூறுமிடத்து, “ சந்ததமும் ஆடி நிழலசைப்பான்போற் புவனம் நீக்கமின்றி ஆக்கி அசைத்தருளும் ஆணையும்” என்று அருளினார். ஆடி – தர்ப்பணம்; முகம் பார்க்கும் கண்ணாடி.
அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது பழமொழி. பிரபஞ்ச இயக்கம் சிவனால் நடைபெறுதலை இப்பழமொழி கூறுகின்றது. சிவன் இப்பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றான்? தன் சக்தி ஆகிய ஆணையால் இயக்குகிறான்.
கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தை இயக்க நினைப்பவன் அதன் பொருட்டுத் தான் அக்கண்ணாடியின் முன் இயங்குகின்றான். அதைப் போல, உலகங்களை விட்டு ஒருபோதும் நீங்காமல், ‘பின்னமற நின்ற பெருமான் ‘படைத்தல் முதலாகிய ஐந்தொழில்களையும் தன்னுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் இயற்ரி அசைத்தருளுகின்றான்.
உலக இயக்கம் அவனுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் நடைபெறுவதால் அவன் விகாரமுறுவதில்லை. இவ்வெடுத்துக் காட்டில் தர்ப்பணத்தில் தோன்றும் பிரபஞ்சமும் அதன் இயக்கமும் பொய்யல்ல; மித்தை யல்ல; உண்மையே.
தட்சிணாமூர்த்தி தோத்திரத்தில் தர்ப்பணம் பிரமம்’ அதில் தோன்றும் நகரமாகிய பிரதி பிம்பம் பொய்; மித்தை.
கந்தர் கலிவெண்பாவில் தர்ப்பணம் மாயை; அதில் தோன்றும் பிரபஞ்சம் உண்மை; அப்பிரபஞ்சத்தை விட்டுச் சிவம் பின்னமற அத்துவிதமாக உள்ளது; தன்னுடைய தாதான்மிய சத்தியின் அமிசமான திரோதானசத்தியை அசைத்துப் பிரபஞ்சத்தினைச் சிவம் இயக்குகின்றது.
இவ்வேறுபாட்டினை அறிக ’
கனவும் நனவும்
சைவசித்தாந்தம் கனவினையும் நனவினையும் அவத்தைகளீல் வைத்துப் பேசுகின்றது. அவத்தைகள் காரண அவத்தை, காரிய அவத்தை என்று இருவகைப்படும்.
காரண அவத்தை மூன்று வகைப்படும். அவையாவன
1.கேவலம். 2. சகலம்.3. சுத்தம்.
சீவான்மா அல்லது உயிர் அநாதியே ஆணவமலம் எனும் மலத்தால் அறிவு மறைப்புண்டு,இருளில் இருளாகக் கிடக்கும் நிலை.
காரிய அவத்தைகள்: ஐந்து. அவையாவன: 1.சாக்கிரம் அல்லது நனவு. 2.சொப்பனம் அல்லது கனவு. 3. சுழுத்தி. 4. துரியம். 5 துரியாதீதம். ஆணவமல மறைப்பால் பந்திக்கபட்ட உயிர் இந்த ஐந்தவத்தைப்படும் .
ஐந்தவத்தைப்படுதல் ஆன்மாவின் பொது இலக்கணம் இந்த ஐந்தும் மலத்தோடு தொடர்புடைமையால் சமல அவத்தைகள் எனப்படும். அவத்தைகளின் விரிவைச் சித்தாந்த நூல்களில் காண்க.
இங்கு நான் எடுத்துக் கொண்டது ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தில் பேசப்படும் கனவு நனவு அவத்தைகளைப் பற்றியே.
நனவில் ஆன்மா35 கருவிகளுடன் கூடிப் புருவமத்தியில் உள்ளது. அம்முப்பதைந்து கருவிகளாவன : ஞானேந்திரியங்கள் 5. கன்மேந்திரியங்கள் 5 அவற்றின் புலன்கள் 10 வாயுக்கள் 10 அந்தக்கரணங்கள் 4. இவற்றோடு கூடும் புருடன். தத்துவங்களுடன் கூடி உயிர் போகம் அனுபவிக்கும் நிலையில் புருடன் எனும் தத்துவமாகக் கொள்ளஃப்படுகின்றது.
கனவில் ஞானேந்திரியம், கன்மேந்திரியம் ஆகிய பத்துப் புறக்கருவிகள் செயல்படுவதில்லை. ஏனைய 25 கருவிகளுடன் ஆன்மாகண்டத்தில் நின்று சொப்பன அவத்தைப் படுகின்றது.
நனவில் தூலதேகத்தில் படும் அவத்தை போன்றதே, கனவில் சூக்கும தேகத்தில் ஆன்மா படுமவத்தை. இரண்டிலும் அவத்தைப் படுவதும் இன்பதுன்பங்களை அனுபவிப்பதும் உயிரே. உடல் வேறுபடுகின்றதன்றி, அவ்வுடலில் நின்று அவ்வுடல் கருவியாக இன்பத்துன்பங்களாகிய போகத்தைத் துய்ப்பது ஆன்மாவே. நனவனுபவம் எவ்வாறு மெய்யோ, அதுபோன்றே கனவனுபவமும் மெய்யே. கனவனுபவத்தைப் பொய்யென்று சைவசித்தாந்தம் கருதவில்லை.
இரண்டுஅவத்தைகளிலும் போகத்தினை வினைக்கேற்ப நியதிப் படி ஊட்டுபவன் இறைவனே.
“கனவின் பயனும் நனவின் பயனும் வினையின் பயனே” (134-135)என்பது சங்கற்ப நிராகரணம் எனும் சைவசாத்திரம்.
கனவில் ஆன்மாசூக்குமதேகத்தில் நின்று இன்ப துன்பங்களை நுகர்தலும் விழிப்பு நிலையில் தூலதேகத்தில் நின்று இன்ப துன்பங்களை நுகர்தலும் முன் செய்த வினைகளின் பயன்; அவற்றை ஆன்மா இருநிலைகளிலும் பிராரத்துவமாக நுகர்ந்து கழிக்கின்றது. எனவே, கனவின் அனுபவங்கள் பொய்யென்றும் சாக்கிர அனுபவங்கள் மட்டுமே உண்மைஎன்றும் வாதம் செயல் பொருந்தாது. இரண்டுமே உண்மைகள். கனவிலும் விழிப்பிலும் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் கருவிகளாகிய சூட்சும உடலும் தூலஉடலுமே வேறுபடுகின்றன; அனுபவிக்கும் ஆன்மா வேறுபடுவதில்லை.
கனவில் அனுபவித்தது மெய்யே யாயினும் அதனை நனவில், அனுபவித்தது அனுபவித்தபடியே நினைவுபடுத்திச் சொல்ல முடியாது. ஏனெனில் நனவிலுள்ள கருவிகளாகிய புறக்கருவிகள் பத்தும் கனவு அவத்தையில் இல்லை.
“நனவினும் கனவினும் நம்பா வுன்னை
மனவினும் வழிபடல் மறவே னம்மான்”
எனத் துதிக்கிறார். இருவுடலிலும் மனம் உள்ளது; எனவே,கனவில் செய்யும் வழிபாடு பொய்யன்று மெய்யே.
‘கனவிலும் உனக்குத் துரோகம் நினையேன்’ என்று சொல்லும் வழக்கு உளது. கனவில் செய்யும் தீங்கும் உண்மையில் வினையே. அடியார்கள் வரலாற்றிலும் இறைவன் அவர்களுக்குக் கனவில் உணர்த்திய மெய்ம்மைகள் உண்டு.
சித்தத்தில் அலை போலத் தோன்றி மறைகின்ற எண்ணங்கள் கனவு போலத் தோன்றும். ஆனால் கனவனுபவத்தைச் சிறிது மயங்கியேனும் வெளியில் சொல்ல இயலும். சித்த சலனம் அத்தகைய தன்று; சித்த சலனம் கனவன்று.
-------------
வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்
வேற்றுமை யிலாத தாகி
பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்க ளான வுலகைச்
சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்
சிருட்டித்த தேவ தேவே
சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி !! (2)
இந்த இரண்டாவது பாடலில் பகவத் பாதர் ‘தத்வமஸி’ எனும் மகாவாக்கியத்தின் ‘தத்’ பதத்தினைப்பற்றிப் பேசுகின்றார். தத் பதத்தின் பொருள் பிரமம் என்பது. அது, அந்தப் பிரமமே ‘ஜகத் காரணம்’; பிரபஞ்ச தோற்றத்திற்கு முதற் காரணமும் நிமித்த காரணமுமாம் எனக் கூறுகின்றார். (அபின்ன நிமித்த , உபாதான காரணம்)
றி
அத்துடன், ‘சற்காரிய வாதம்’ எனும் கோட்பாட்டினையும் நிறுவ முனைகிறார்.
சத் என்றால் உள்ளது; காரியம் என்றால் தோன்றும். உள்ளதே தோன்றும்; இல்லது வாராது என்பது இக்கோட்பாடு. காரண உருவத்தில் மறைந்திருப்பதுதான் காரிய வடிவத்தில் வெளிப்படும். மண்ணில் குடம் சத்தி வடிவமாக மறைந்துள்ளது; காரிய வடிவத்தில் வெளிப்படுகின்றது. பொன்னில் ஆபரணங்கள் சக்தி சூக்குமமாக மறைந்துள்ளன்; காரிய வடிவில் வெளிப்படுகின்றன.
இதனை, பகவத் பாதர்கள் “வித்துக்குள் முளைபோல் படிப்புக்கு முன் வேற்றுமை யிலாததாகி” என்று உரைத்தார்.
'சிறுமீனின் கண்ணைகாட்டிலும் சிறிய முட்டையில் அரசன் தன் நாற்படை பரிவாரங்களுடன் வந்து தங்க நிழல் தரும் பெரிய ஆலமரம் உள்ளது’ என்பது (தெள்ளிய ஆலின் ) தமிழ்ப்பாட்டியின் வாக்கு இந்தச் சிறிய விதைக்குள் தன்னைப் பிற மரங்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளாமலும் வேர்,கிளை கொப்பு விழுதுகள் போன்ற உறுப்புகள் காணப்படாமலும் சத்தியாக ஆலமரம் மறைந்துள்ளது.
றி
இதனை வடமொழியில் ‘நிர்விகல்ப ரூபம்’, அவ்வியக்தம் (un manifested, undifferentiated form ) என்பர்.
அதாவது, காணப்படும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அது ‘ஜகத் காரணமாக’ சூக்கும சத்தியாகப் பிரமத்தில் இருந்தது அதனால் பிரமம் பிரபஞ்சத்திற்கு வித்து. எனவே, இவ்வுலகம் பிரமத்தினால் படைக்கப்பட்டதன்று. பிரபஞ்சம் படைக்கப்பட்ட தன்று. ஏற்கெனவே உள்ளது.
ஏற்கெனவே உள்ள சூக்குமப் பிரபஞ்சம் நம்முடைய கண்ணுக்குக் காட்சிப் படவில்லை. எனவே காட்சிப்பட்ட பிரபஞ்சத்தினை இறைவன் படைப்பு எனக் கருதுகிறோம்.
பிரமமே முதற்காரணம். The world was there In potential form, in Brahman, the kAranam, material cause.)
பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரமவித்தில்,பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின., பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்
இந்த பொருட்பன்மையும் வேறுபாடுகளும் எப்படித் தோன்றின?
பகவத் பாதர் கூறுகிறார்-, ‘மாய கல்பித தேச கால” ,அதாவது, பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால் பேதங்க ளான வுலகை”
அறிவு மயக்கத்தைச் செய்யும் மாயையால் உண்டானது தேச காலம். அந்த மாயா சத்தியும் பிரமத்தினுள்ளதே.
மாயா சத்தி விட்சேபசதியினை உடையது. விட்சேபசத்தி viṭcēpa-catti, n. < vi-kṣēpa + šakti. 1. Elasticity; ஒடுங்கிவிரியுஞ் சத்தி. (W.) 2. The Energy of Māyā, as the cause of the five subtle elements; சூக்கும பஞ்சபூதங்களுக்குக் காரணமான மாயா சத்தி. (நானாசீ. 150.) .மாயையின் விட்சேபத்தினால் காலதேச விகற்பங்கள் தோன்றும். காலதேச பரிச்சேதங்களோடு காணும்போது பிரமம் வேறுபாடுகளை யுடைய பன்மையான துவிதமாகக் காட்சிப்படும். ஏகமாகிய பிரமம் அநேகமாகிய ஜகத்தாகத் தோன்றும்.
பகவத் பாதரவர்கள் சத்காரிய வாதத்தின்படி வித்தாகிய பிரமமே தன்னுடைய மாய சத்தியினல் தன்னுள் சூக்கும சத்தாக இருந்த பிரபஞ்சமாக விரிந்தது என்று கூறியதைக் கண்டோம். அதற்கு அவர் பயன்படுத்தியசொல் ‘விரிஜ்ரிம்பயாதி’ (‘vrijripayathi’). தன்னிச்சையால்தானே மலர்தல் என்பது கருத்து.
தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு.
மாயவாதி தன்னிடமிருந்தே புதியபுதிய பொருள்களைத் தோற்றுவிக்கின்றான். கையை நீட்டி விரித்துக் காட்டுகின்றான். ஒன்றுமில்லாத உள்ளங்கையில், மூடித்திறந்தவுடனே தொப்பியொன்று காணப்படுகின்றது. தொப்பியத் தூக்கினால் புறா இருக்கிறது. தொப்பியால் புறாவை மூடித் திறந்தால் வேறொரு பொருள் காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் தனது மாயாசத்தியினால் தன்னிடமிருந்தே தோற்றுவிக்கின்றான்.
சித்தயோகி சங்கற்பத்தால், தன் நினைவால் உலகைப் படைப்பதற்கு உதாரணம் விசுவாமித்திர முனிவர் திரிசங்கு என்பானுக்குச் சுவர்க்கம் படைத்துக் கொடுத்தது போலாம். எந்தவொரு மூலப்பொருளும் இன்றி மாயவாதியும் சித்த யோகியரும் புதிய பொருள்களைத் தங்கள் சங்கற்பத்தால் அல்லது நினைவால் படைத்தலைப் போலப் பிரமமும் தன் விருப்பத்தால் சங்கற்பத்தால் பிரபஞ்சத்தைத் தோற்றுவ்விக்கின்றான்,, என்கிறார், பகவத் பாதர். கிறித்துவர்கள் God creaed the world out of nothing என்பர் அது போன்றதே இதுவும்.
அதாவது, பிரமம் உலகைப் புதிதாகப் படைக்கவில்லை; தன்னிடம் சூக்குமசத்தியாக இருந்தனைச் சங்கற்பத்தால் மலரச் செய்தார்.பிரபஞ்சம் சொப்பன நகர் என் முதற் பாடலில் கூறினார். இங்கு மாயாவியின் படைப்பைக் கூறினார். மாயாவியின் படைப்புக் கண்கட்டு வித்தை என்பர் அவன் படைத்த உலகம் வேறும் தோற்றமே யன்றி உண்மையில் இல்லை. அதனைப் போன்றதே காணப்படும் இந்த பிரபஞ்சமும் சொப்பனப் பிரபஞ்சமே இதனால் பிரமமே பிரப்ஞ்சத் தோற்றத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் ஆம் எனப் பகவத்பாதர் கூறினார்.
கனவில் தோன்றும் பிரபஞ்சத்திற்குக் கனாக் காண்பவனே முதற்காரணம். அவனே தன்னுள் இருந்ததனை வெளிப்படுத்துவதனால் நிமித்த காரணமுமாவன்.. தன்னுள் இருந்த உலகை வெளிப்படுத்துதற்குக் கருவியாக இருந்தது அவனுடைய நினைவு அல்லது இச்சை. எங்ஙனம் கனாக் காண்பவனின் முயற்சியின்றிக் கனவு தோன்றுகின்றதோ அவ்வாறே எச்செயலுமின்றிப் பிரமம் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றது. அதாவது, பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதில் பிரமத்துக்கு விருப்போ, வெறுப்போ எவ்வுணர்ச்சியோ செயலோ இல்லை. கனவு காண வேண்டும் என்ற விருப்பமோ எண்ணமோ இல்லாதவனுக்குக் கனவு இயல்பாகத் தோன்றுவது போல.
Why did Īśvara create the creation? Many people are frustrated by this question. The answer is, because that is Īśvara’s nature. Like even heat and light are the defining attributes of fire, so also creation, sustenance and resolution are of Īśvara; that is His nature. Svāmī Dayānanda Sarasvati நெருப்பின் குணம் சூடும் ஒளியும் போல ஈசுவரனின் பிரபஞ்சத்தோற்றமும் காப்பும் ஒடுக்கமும். இது இயற்கை. இதில் அவனுடைய விருப்பு, இச்சை, செயல் எதுவும் இல்லை
வேதாந்தத்தில் படைப்பும் இல்லை; இறுதியும் இல்லை. எனவே நடுவும் இல்லை. ஒரு மையப்புள்ளியிலிருந்து கோலம் விரிவதும் சுருங்குவதும் போல. நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது? அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது
இந்தப் பிரபஞ்சத்தில் சேதனப் பிரபஞ்சமான ஆன்மாக்கள் உழன்று வருந்திக் கொண்டுள்ளனவே. தோற்றமும் இருப்பும் இறுதியும் ஒரு சுழற்சியாக இயங்கிக் கொண்டே இருக்குமென்னில் பிறப்பிறப்பினில் உழன்று துன்புறும் ஆன்மாக்களுக்கு விடிவே இல்லையா எனில் , தன்னைச் சேதனம், அறிவுடைப் பொருள்; நான் அதிஷ்டானம்; என் மேல் இந்தப் பொய்ப் பிரபஞ்சம் அதிட்டித்துள்ளது. அறிவாகிய என்னை இந்த சொப்பனம் போன்ற பிரபஞ்சம் பந்திக்காது என்றறிந்தால் இந்த மாயாவிகார சுழற்சியிலிருந்து உய்யலாம்.
இங்கு கூறப்பட்டசெய்திகளைச் சைவசித்தாந்தம் எப்படி நோக்குகின்றது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.;
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தின் இரண்டாம் பாடலுக்கு உரை காணும் பெரியோர், இப்பாடல் தத்துவமசி மகாவாக்கியதின் ‘தத்’ பதத்தைப் பேசுகின்றது என்றும் ‘தத்’ பதம் பிரமத்தைக் குறிக்கின்றதென்றும், பிரமமே பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்றும் பிரபஞ்சத்தில் காணப்படும் வேற்றுமைகளால் பிரமம் விகாரப்படுவதில்லை என்றும் கூறினர்.
பிரமம் பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்று கூறப்பெறுதலில் இரண்டு நிலைகளைக் கூறுகின்றனர்.
அவற்றில் முதலாவது, பிரமமே பிரபஞ்சத்திற்கு ‘ அபின்ன நிமித்தோபாதான காரணம்’(abinna nimitta upadana karaNam). அதாவது பிரபஞ்சத் தோற்றத்துக்குப் பிரமமே நிமித்த காரணமும் (intelligent cause) உபாதான காரணமும் (material cause) என்பர். சித்து முதற்காரணம் ஆகுமோ, சித்து பரிணாமம் அடையுமோ, அது எப்படிச் சடமாகிய பிரபஞ்சம் ஆகும் என்று கேட்டால், எப்படிச் சித்தாகிய சிலந்திப் பூச்சி தன்னிடமிருந்து வலையை உண்டாக்குகின்றதோ அதைப் போலச் சித்தாகிய பிரமத்தினின்றும் சடமாகிய பிரபஞ்சம் தோன்றும் என்பர். (spider and spider web)
இதற்குச் சான்றாக, “ ஊர்ணநாபி (சிலந்திப் பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ,பூமியில் எப்படிப் பல ஓஷதிகள் உண்டாகின்றனவோ மனிதன் மீது எப்படித் தலைமயிர், உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய க்ஷ்ரத்தினின்றும் (அழிவில்லாதது) யாவும் உண்டாகின்றன’ என்னும் முண்டகோபநிஷத வாக்கியத்தைக் காட்டுவர்.
வேதம் பொய் சொல்லுவதில்லை. வியாக்கியானம் செய்வோரெ தமக்கு வசதியாகப் பொருள் கொள்கின்றனர்.
தலை மயிர், உடல்மயிர், சிலந்தியின் வலை இழை என்பன சடமாக இருத்தலினாலேயே அவை சித்திருந்து வந்தனவல்ல; சித்து பரிணமியாது என்பது பெறப்படும்.
வேதம் கூறும் ஊர்ண நாபி உவமானத்துக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கம் அறியத் தக்கது. ஊர்ண நாபியின் உடம்பே உபாதான காரணம், ஊர்ணநாபியின் உயிரே நிமித்த காரணம். அவ்வாறே பிரபஞ்சத் தோற்றத்திற்குச் சிவம் நிமித்த காரணம்,சிவசத்தி துணைக்காரணம் (instrumental cause); மாயை யாகிய சடப்பொருள் உபாதான காரணம், அந்த உபாதான காரணத்தின் இருப்பிடம் சிவமே; சிவத்தின் பரிக்கிரக சத்தி, அதாவது வேண்டும் போது பயன் கொள்ளுகின்ற சடசத்தியே மாயை. நிமித்த காரணமாகிய சிவம் தன்னிடத்தில் கிடக்கும் மாயை எனும் முதற்பொருளுடன் தன் சத்தியாகிய ஆணையால் கூடிப் பிரபஞ்சத்தை படைக்கின்றது. என்பது சைவக் கொள்கை. “மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க” என்பது மணி வாசகம்.
சிவம், நிமித்த காரணமாகப் பிரபஞ்சத்துடன் தன் சக்தியினால் பிரிப்பின்றி அபின்னமாகக் கலந்து நின்றே படைத்துக் காத்து ஒடுக்கி இயக்குகின்றான் என்பது சைவக் கொள்கை.
வித்துக்குள் முளைபோல் என்பதைப் பற்றிய விளக்கம்.
சற்காரிய வாதத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறிய ‘ வித்துக்குள் முளைபோல்’ என்ற உவமை சைவ சாத்திரத்திலும் கூறப்படுகின்றது. ஆனால் இரண்டினுக்கும் இடையில் பெருத்த வேற்றுமை உண்டு.
பிரம முதல் வாதிகள் ,வித்தின் இடத்தில் பிரமத்தையும் பிரமத்தின் உள் சூக்கும சித்தாக இருக்கும் சேதன அசேதன பிரபஞ்சங்களைவித்துக்குள் உள்ள முளையாகவும் கூறுவர். பிfரபஞ்சத்தில்காணப்படும் ஏற்ற தாழ்வுகள், வேறு பாடுகளுக்குக் மாயையாகிய மித்தையினின்றும் தோன்றிய கால தேசங்களைக் காரணமாகக் கூறுவர். சித்தாந்தம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
சிவஞானபோதம் வெண்பா,
“ வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் வித்தகமாம்”
என்று கூறிற்று. இதனால் முதல்வன் உலகிற்கு நிமித்தகாரணன்; முதற்காரணன் அல்லன்; உலகிற்கு முதற் காரணமாகிய மாயைக்கு முதல்வன் தாரகமாக நிற்பதால், உலகம் அவனிடத்திலிருந்து தோன்றி அவனிடத்தில் ஒடுங்கும்எனக் கூறலும் அமையும் என்பது பெறப்பட்டது.
இவ்வெண்பாவின்படி, வித்துப் போல் மாயை, அதனில் அடங்கிச் சூக்குமமாய் நின்ற வித்துப் போல உலகம்; வித்துக்கு ஆதாரம் நிலம்; மண். மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும். வித்துக்கு ஆதாரம் மண் . மாயைக்கு ஆதாரம் சிவசத்தி. நிலத்திலுள்ள மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும்; தானே முளையாது. மண் குளிர்வதைப் போல முதல்வனின் திருவருள் சங்கல்பித்த வழியே பிரபஞ்சம் தோன்றும் என இதனால் உணர்த்தப்பட்டது.
உலகத்துப் படைப்புக்களில் காணப்படும் வேற்றுமைக்குக் காரணம் அவற்றின் வினைப் பயனே என்பதை, “அவர்வினையால் வித்தகமாம்” எனும் தொடரால் உணர்த்தினார். சிவசத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக உடல் முதலியன தோன்றும். என்பது இதனாற் பெறப்பட்டது.
நிலம் குளிர்ந்த வழியல்லது அதன்கண் கிடந்த வித்து முளையைத் தோற்றுவிக்காது. அதைப் போலவே சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவனின் சத்தியில் ஒடுங்கித் திருவருள் சங்கற்பித்த வழியே தோன்றிவதாகும்.
சைவசித்தாந்தம் வலியுறுத்தும் சற்காரியத்தின்படி,
1. வித்து- மாயை. முளை- உலகம். மண்- இறைவன்.மண்குளிர்தல் – திருவருட் சங்கற்பம். மாயையுள் ஒடுங்கிய பிரபஞ்சம். வித்து இல்வழி நிலத்தினின்றும் அங்குரம் தோன்றாது. அதுபோல மாயை இல்வழி பிரமத்தினின்றும் உலகம் தோன்றாது இது பிரம்மப் பரிணாம வாதிகளை மறுத்தது.
2. மாயை உள்பொருளே. அநிர்வசனமோ மித்தையோ அன்று. பிரபஞ்சத்திற்கு முதற்காரணம்; மாயை நித்தப் பொருள்; மாயை, சடம்; மாயை முதல்வனுக்கு, வேண்டும்போது பயன்படும் பரிக்கிரக சத்தி; மாயை முதல்வனின் வியாபகத்தில் வியாப்பியம்; மாயை உள்பொருள், மெய்ப்பொருள்; மாயை அருவப்பொருள். இக்காரணங்களால் மாயை அநிர்வசனம் என்பார் கருத்து மறுக்கப்பட்டது.
3. வித்தும் முளையும் நிலனும் போல் என மாயையும் மாயாகாரிய மாகிய உலகையும் முதல்வனையும் வேறு கூறினமையால், “பிரபஞ்சத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் முதல்வன் ஒருவனே” என்னும் சிவாத்துவிதர் கொள்கையும், வாசுதேவனாகிய முதல்வனே பிரபஞ்சத்தின் சடமும்சித்துமாகவும் உள்ளான் எனும் பாஞ்சராத்திரிகள் மதமும் மறுக்கப்பட்டது. ..
உலகைச் சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச் சிருட்டித்த தேவ தேவே
பிரமம் எந்தவொரு மூலப்பொருளும் முயற்சியும் இன்றி நினைவால் பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்வதற்கு மாயாவியின் மாயவித்தை, யோகியின் செயல் ஆகியவற்றை இப்பாடல் கூறுகின்றது.. இதுபற்றிய பொருள் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளேன்.
சைவசித்தாந்தமும் இறைவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு உதாரணமாக மாயாவியைக் கூறுகின்றது. ஆனால் இரண்டற்கும் இடையில் வேறுபாடு மிகுதியும் உண்டு.
மந்திரவாதி தன்னிலிருந்து முன்னில்லாத பொருள்களைத் தோற்றுவிக்கும்போது தன்னை மறைத்துக் கொள்வதில்லை. அதேபோல் யோகியும் தன் சக்தியால் உலகத்தைப் படைக்கும் போது அவன் மறைந்து விடுவதில்லை. மாயாவாதி தன்னிடமிருந்து முன்னில்லாத பொருளைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் பொருள்களும் காட்சிப்படுகின்றன. அவ்வாறே, யோகி புதியதொரு உலகைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் உலகமும் காட்சிப்படுகிறது. அவர்கள் தோற்றுவிக்கும் பொருள்களில் அவர்கள் கலந்துவிடுவதில்லை.
பிரமம் எந்த நிலையிலும் காட்சிப் பொருளாவதில்லை. எனவே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மாயாவாதியும் யோகியும் பொருத்தமான எடுத்துக் காட்டாவதில்லை.
சிவ வியாபகத்தில் சேதன அசேதன பிரபஞ்சம் முழுவதும் வியாப்பியமாக அடங்கியுள்ள சிவ வியாபகத்தை ஔபச்சிலேடிக வியாபகம் என்பர். அதாவது, தன்னுள் வியாப்பியமாக அடங்கியுள்ள பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாகிய வியாபகம். சிவன் அனைத்திற்கும் ஆதார அந்தர வத்து; அதனால், எதனையும் புறத்தேயிருந்து படைப்பதில்லை. அனைத்திலும் கலந்திருந்தே படைக்கின்றான். “மருவி எப்போருளும் வளர்ப்போன் காண்க” என்றார், மணிவாசகர். அறிவுடைய பொருள்கள், அறிவிலாப்பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து நின்று அவற்றைப் படைத்துக் காத்து,.சேதனப் பொருள்களின் அறிவையும், அசேதனப் பொருள்களின் இயல்புகளையும் வளர்ப்பவன். இறைவன் எல்லாப்பொருள்களிலும் கலந்து நின்று அவற்றை இயக்குவதால்தான் அவை இயக்கமும் வளர்ச்சியும் பெறுகின்றன. கூடவே கலந்திருந்து இவ்வாறு செயல் புரிபவனை ஆன்மாக்கள் தம் பாச அறிவினால் அறிய முடியாத நுட்பமானவன் இறைவன்
இறைவன் உயிர் உலகுகளுடன் கலந்து நின்றே, தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது ஐந்தொழில் செய்வதை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள்,
“ – தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்திற் சாராது சார்வதுபோல்”
என்றுரைத்தார்.
இந்திர சாலம் புரிபவன், மாயவித்தை காட்டும்போது தனித்து நின்றானென்றால், வித்தையைக் காண்பவருக்கு, அவன் காட்டுவது அனைத்தும் பொய்,மாயம், கண்கட்டு வித்தை என்பது புரிந்துவிடும். ஆனால் அவ்வித்தையில் அவனும் கலந்து விடுவானேயாகில் காண்பன அனைத்தும் உண்மையே எனக் காண்பவர் கருதுவர். அத்தகைய மாயாவியின் செயலே இறைவன் செயலும்.
சில மாதங்களுக்கு முன், கோவையில் pro zone என்னும் ‘மாலில்’ ஒரு மேஜிக் நிபுணராகிய இளைஞர், அரை மணி நேரம் ஆகாயத்தில் பறந்து திரிந்து வித்தை காட்டினார். கீழே மக்கள் கூட்டத்தில் நின்ற அவர், ஆகாயத்தில் பறந்தபோது, காணவில்லை. எனவே, அக்காட்சியைக் கண்டவர்கள் அவ்ரே,ஆகாயத்தில் உண்மையாகப் பறந்தார் என நம்பினர். அவரே தாம் செய்தது கண்கட்டு வித்தை என்று பின்னர் கூறினார். இதுபோன்றதே இறைவன் செயலும்.
-----------------
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி தோத்திரம்
எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட் களிலும்
இயைந்தே விளங்கலுறுமோ
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியஉப தேசம் அருள்மோ
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகு மோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! (3)
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அட்டகத்தின் இம் மூன்றாம்பாடல்,’தத்வமசி’ மகாவாக்கியத்தின் மூன்றாவதாகிய ‘அசி’ பதத்தை விளக்குகின்றதென்பர்.
சைவசித்தாந்தம் பொருள்களை உள்பொருள், பொய்ப்பொருள் , இல்பொருள் என மூவகையாகக் கூறும்.
உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர். அவ்வுள் பொருளை ‘அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பு’ என்று சைவசாத்திரம் கூறும்.
சைவ சித்தாந்தம் பதியாகிய சிவம் பசுவாகிய ஆன்மாக்கள் உலகமாகிய பாசம் எனும் முப்பொருள்களையும் உள்பொருள்கள் என்றே, அதாவது, சத்துப் பொருள் என்றே கூறும்.
இவற்றுள் ஜீவான்மாக்களாகிய உயிர்கள் அவை செய்த வினைக்கேற்ப இத் தாவரசங்கமத்தில் எல்லாப் பிறப்பிலும் பிறந்திறந்து உழலும்; தேகவேறுபாடு அடைவதாலும் சித்தாகிய சேதனமாதலாலும் ‘சதசத்து’ எனப்படும்.
பிரபஞ்சம் காரண காரியமாகிய தோற்றக் கேடுகள் உடைமையாலும் அசேதனமாதலாலும் சேதனனால் காரியப்படுவதாலும் அசத்து என்று கூறப்படும்.
எனவே, தோற்றக் கேடுகள், காரண காரிய மாற்றங்களை யுடைய நித்தியப் பொருளே சித்தாந்தப்படி ‘பொய்ப்பொருள்கள்”
முயற்கொம்பு, ஆகாயத் தாமரை போன்றவையே இல்பொருள்கள் .இல்பொருள்கள் என்றும் இல்லாத பொருள்களே.
எனவே, காணப்படும் இப்பிரபஞ்சம் தர்ப்பண நகர் போன்றோ, சொப்பன நகர் போன்றோ மித்தையன்று; உள்பொருளே.
இப்பாடலில் நித்திய சத்தாகிய மெய்ப்பொருளாம் சிவப்பிரமம் ஏனைய சதசத்து, அசத்து ஆகிய பொருள்களுக்கு இருப்பும் இயக்கமும் அளிக்கும் அத்துவிதத்தைப் பேசுகின்றது.
மெய்ப்பொருள் என்றது, வேதாந்தத்தின்படி பிரமம். சைவம் இம்மெய்ப்பொருளைச் சிவம் என்று கூறுகின்ற்து. சிவம் ஔபச்சிலேடிக வியாபகம்;(உள்ளும் புறமுமாகிய வியாபகம். அதனில் அடங்கிய வியாப்பியம் சதசத்தாகிய ஜீவான்மாக்கள்; அதனில் வியாத்தி பாசமாகிய அசத்து.
பாடலில்’ ‘எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களினும் இயைந்தே விளங்க லுறுமோ’ என்னுந் தொடர் வியாபக மெய்ப்பொருளான சிவம், தன்னுள் அடங்கியிருக்கும் வியாப்பியப் பொருள்களான சேதன அசேதனங்களுக்கு இருப்பினையும், முறையே அறிவு, இயக்கங்களையும் தந்துதவுவதை உணர்த்துகின்றது.
ஒளி- இதன் பொருள் பிரகாசம் என்பது. சேதனமாகிய உயிர்களில் இம்மெய்ப்பொருள் கலந்து,ஆன்மப் பிரகாசம் என்னும் அறிவை விளக்குகின்றது. இப்பிரகாசமேஆன்ம அறிவு அல்லது தற்போதம் எனப்படுகிறது. ஒளி- பிரகாசம் – விளங்கித் தோன்றுதல்.
அசத்துப் பொருள்களுடன் சிவமாகிய மெய்ப்பொருள் இயைந்து அவற்றிற்கு அவற்றின் இயல்பையும் இயக்கத்தையும் தருவதை மணிவாசகர், திருவண்டப்பகுதியில்,
“ நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியிற் றன்மை வைத்தோன் திண்டிறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும்
அனத்தனைத் தவ்வயின் அடைத்தோன்”
கூறுதல் காண்க.
சிலர் இப்பாடலின் முதல் அடி ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தைக் கூறுகின்றதென்பர் ( In this third verse , Sankaacharya brings out mahavakyartha, of the Upanishad;the mahavakya being Tat thvam Asi.The word Tat indicates ParamAtma; the word Thvam indicates jivatma. And the word asi indicates aikiyam. And therefore maha vakiya is jivatma Pramathma aikiyam)
ஐக்கியம் அத்துவிதமாகாது. ஐக்கியம் நீரும் நீரும் சேர்வது போலவும், பாலும் நீரும் கலப்பது போலவும் ஒத்தபொருள்கள் இரண்டு கலப்பதாகும்.
ஆற்று நீரும் கடல் நீரும் தம்மில் சேர்ந்தாற் போலவும், கடாகாயமும் மகாகாயமும் சேர்ந்தாற்போலவும் ஐக்கியமெனின், அது ஐக்கியமன்று; சேர்ந்தவை ஒருபொருளேயாகலின் ஐக்கியமன்று. ஒன்றாதலை ‘எகம்’ எனப்படுமே யன்றி அத்துவித மெனப்படாது. ஜீவான்மாவும் பரமான்மாவும் நீரும் நீரும் கலந்தது போன்ற ஐக்கியம் எனில் முத்தியில் ஆன்மா என்ற பொருளே இல்லை என்றாகும். அப்பொழுது முத்தியடைந்தது எது/
எனவே, இப்பாடலின் ““எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களிலும் இயைந்தே விளங்கலுறுமோ” என்ற முதலடியில் உள்ள ‘இயைந்தே விளங்கலுறுமோ” என்ற பதம் ஆன்மவொளியும் (ஆன்ம அறிவு) கண்ணொளியும் ஆகிய இருவேறு ஒளிகளும் தம்முள் அத்துவிதமாக நின்று அறிவதே பொருள் என விளக்கியது. காணும் ஆற்றலுடைய கண்ணுக்கு, ஆன்ம அறிவும் உடன் நின்று பொருள்களை அறிவித்தலைப் போல ஜீவான்மாவுக்கு அறிவிச்சை செயல்கள் பரமான்மா பிரிவின்றி உடன் நின்றால்தன் இகழும். எனவே,இவ்விருவகை ஆன்மாக்களும் உடன் நிற்றலையே ‘இயைந்து’ என்ற பதம் உணர்த்திற்று. உடனிற்றல் அத்துவிதம்; உடனிற்றல் ஐக்கியமன்று. ஐக்கியம் அத்துவிதம் ஆகாது.
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியஉப தேசம் அருள்மோ
இந்த வரி, பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது குருவே சிவம்; சிவமே குரு. சிவமே தக்ஷிணாமூர்த்தியாகிய ஆதி குரு. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே.
“சதாசிவ சமாரம்பாம் சங்கராச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசாரிய பரியந்தம் வந்தே குரு பரம்பராம்”
“சதாசிவ சமாரம்பாம் மெய்கண்டாச்சாரிய மத்யமாம்
அஸ்மத்.ஆசாரிய பரியந்தம் வந்தே குரு பரம்பராம்”
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அட்டகத்தின் மூன்றாம்பாடல் தென்முகக் கடவுள் உபதேசித்த முதல் மகாவாக்கியம் இன்னதென்று கூறி அதன் சிறப்பையும் இயம்புகின்றது.
“அது நீ” என்றதே அந்த மகாவாக்கியம். அம் மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. ‘அது நீ’ என்பது ‘தத் துவம் அசி’ என்னும் வடமொழி மகாவாக்கியத்தின் தமிழாக்கம்.
வேதத்தில் எண்ணற்ற மகாவாக்கியங்கள் உண்டு. அவற்றில் நான்கே மிகச் சிறப்புடையனவாக எடுத்தாளப்படுகின்றன. அவையாவன:1. தத் துவம் அசி. (அது நீ ஆகின்றாய்) 2.பிரஞ்ஞானம் ப்ரஹ்ம (அறிவே பிரம்மம்) 3. அஹம் ப்ரம்மாஸ்மி.(நான் பிரம்மம்) 4. அயமாத்மா ப்ரஹ்ம (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்பனவாம். இவை அனைத்தும் சீவபிரம்ம ஐக்கியத்தை உணர்த்துகின்றன என்பர்.
முதல் வாக்கியம் குரு உபதேசிப்பது இரண்டாவது வாக்கியம் பிரஹ்ம இலக்கணம் உணர்த்துவது. மூன்றாவது வாக்கியம் மாணாக்கன் சிந்தித்துப் பயிலுவது. நான்காம் வாக்கியம் இந்த ஆத்மாவே பிரஹ்மம் என அநுபவித்துத் தெளிவதை உணர்த்துவது.
‘தத்துவம் அசி” மகாவாக்கியத்திற்கு நான்கு விதமான பொருள் கூறுவர். அவையாவன:
1. அதுபோல நீ ஆகிறாய்
2. அதன் தருமமாக (பண்பு குணம், இயல்பு)நீ ஆகிறாய்.
3. அது நீ ஆனாய்
4. அது நீ ஆகின்றாய்
முதலிரண்டும் முத்தியில் சகுணம் உணர்த்துவன ஆகையால் வேதாந்தி ஏற்றுக் கொள்வதில்லை.
மூன்றாவது பொருள், இறந்த காலத்தைச் சுட்டுகின்றது. முன்பு பிரமமாக இருந்த நீ அந்தப் பிரமமானாய் என்ற பொருளைத் தருகிறது. முன்பு பிரமமாக இருந்த ஜீவனுக்குச் செய்யும் இந்த உபதேசம் பயனற்றது. ஆதலால் இதையும் வேதாந்தி ஏற்றுக் கொள்வதில்லை.
நான்காவதாகிய ‘அது நீ ஆகின்றாய்’ என்ற பொருளே வேதாந்திக்கு உடன்பாடு. .
தான் பிரமமென்று இன்னும் உணராதவனை , ‘நீ பிரமமாவாய்’ என எதிர் காலத்தில் சொல்ல வேண்டியதற்கு மாறாக ‘அது நீ ஆகின்றாய்’ என நிகழ் காலத்தில் கூறுவது எவ்வாறு பொருந்தும் எனும் ஐயம் எழக்கூடும்.
எதிர்காலத்தில் உறுதியாகவும் தெளிவாகவும் நிகழவிருப்பதை, எதிர்கால வினைச்சொல்லால் சொல்லாமல் நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் கூறுவதால் அந்த உறுதியும் தெளிவும் சிறப்பாகத் தோன்றும் என்பது தமிழ் இலக்கணம்
“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்குங்காலை”
(தொல்.சொல். 247)
ஒருவன் தவறி ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்துவிட்டான். அவன் கஷ்டப்பட்டு நீந்திக் கரைக்கு அண்மையில் வந்துவிட்டான். இன்னும் கரை சேரவில்லை. அவனைக் கரையில் இருப்பவன் உற்சாகப்படுத்த, ‘கரைக்கு வந்தாயிற்று, வந்தாயிற்று வா வா’ என்று கூவுகிறான்.
அதுபோலப் பிரமமாகத் தக்கவனைப் பிரமமாகின்றாய் என நிகழ்காலத்தில் கூறுவது பொருந்தும் என வேதாந்திகள் கூறுவர்.
சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது. பெரும்பெயரெனினும் மகாவாக்கியமெனினும் ஒரு வார்த்தை யெனினும் ஒக்கும் என்பது சிவஞானமாபாடியம். திருப்பெருந்துறையில் குருவாய் வந்த பெருமான் மணிவாசகருக்கு அளித்த உபதேசம் இந்த மகா வாக்கியத்தின் பொருள் போலும். அது, “மன்ன! என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்” என்ற அவர் (திருவாசகம் செத்திலாப்பத்து 2) கூற்றிலிருந்து ஊகிக்க இயலுகின்றது.
இச்சிறப்புப் பாயிரத்தில் உள்ள ‘பெரும்பெயர்க் கடவுள்’ எனும் பதத்திற்குப் பெரும்பெயரால், அதாவது, மகாவாக்கியத்தால் எடுத்தோதப்படும் முதற்கடவுள் என்று பொருள் உரைக்கப்படுகிறது. பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கித் தான் வியாபகமாக நிற்றலின் முதற்கடவுள் பெரும்பெயர்க்கடவுள் என்று அதன் பொருளும் விளங்கியது. பெரும்பொருள் என்பது பற்றியே வேதமும் அம்முதற் பொருளைப் பிரமம் எனவும் கூறிற்று.
இந்த மகாவாக்கியம் ‘அது’அல்லது ‘தத்’ என உணர்த்தியது சிவப்பிரமமாகிய ஞேயம் என்பது சைவசித்தாந்திகள் கருத்து. ‘தத்’, அல்லது அது என்றது, ஞேயத்தைக் குறிக்கவில்லை, ஞானத்தையே சுட்டிற்று என்பது வேதாந்திகள் கொள்கை. குணியின்றி குணம் தனித்து நிற்கும் என்பது அவர்களது கொள்கை; குணம் குணியைவிட்டத் தனித்து இயலாது என்பது சைவசித்தாந்தக் கொள்கை
வேதாந்திகள் கருத்து: பரப்பிரமப்பொருள் அவிச்சை வயப்பட்டு ஞாதா(அறிபவன்) எனவும், ஞேயம் (அறியப்படும் பொருள்) எனவும், பகுக்கப்பட்டு நிற்கும். சாத்திரங்களிற் கூறப்படும் நித்தியாநித்ய விவேகம்முதலான சாதன சதுட்டயங்களால் அவிச்சையாகிய அஞ்ஞானம் நீங்கியபொழுது, அறிபவன், அறியப்படும்பொருள், (ஞாதிரு, ஞேயம், ஞானம் என்னும் பாகுபாடு சிறிதும் இல்லாமல், பிரமப்பொருள், தனித்து ஞானமாக மட்டுமே நிற்குமென்பர்.
மகாவாக்கியத்தால் உணர்த்தப்படும் பொருள் ஞேயம் என்று சைவசித்தாந்தம் கொள்ள, அது ஞானம் என வேதாந்தம் கொள்ளும்.
அறிவு எனப்படுவது எது? அறிவாவது ஒன்றனை விடயிப்பதேயாம் (அநுபவிப்பது). . விடயித்தல் இன்றியும் அறிவு உண்டு என்பது புத்தர் கொள்கை. இதனை ஆலய விஞ்ஞானம் என்பர். இவ்வாறே வேதாந்திகளும் கூறுவர். உயிர் உடலோடு கலந்து இருக்கும்போது போதம் அல்லது அறிவு இருப்பது தெரிகின்றது. உடல் நீங்கியபோதும் அவ்வறிவு உண்டு என்பர்.உடலாகிய ஊடகம் ‘மீடியம்’ வழியே அறிவுடைமை தெரிகின்றது. அவ்வூடகம் இன்றியும் அறிவுண்டு என்பது அவர்கள் கொள்கை. அவ்வறிவு எவ்வியல்பிறு என்பதற்கு விடையில்லை. அத்தகைய அறிவுண்டு என்று கூறுவது ஆகாயத்தாமரை உண்டென்பதினை ஒக்கும் என்பர் சைவசித்தாந்திகள்
(How can I appreciate the pure consciousness without association with any object (physical body)? I am able to appreciate consciousness with body. Once the body is removed, pure formless existence consciousness survives, the sastras say. How can I appreciate that pure existence –consciousness? The sastra says :you will never be able to appreciate the existence – consciousness because you yourselves are the pure existence- consciousness., it being the very subject itself , it is never available for objectification. And therefore, Tat, pure existence is you; the very subject itself. Swami Parmathmananda)
சைவசித்தாந்தம் உயிர்கள் பல; அவை உள்பொருளே எனக்கூறும். உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை; உயிர் சேதனம்; அறிவுடைப் பொருள்
சைவசித்தாந்தம் உயிர்களைப்பற்றியும் உயிரறிவைப் பற்றியும் கூறுவன:”(உடல், உடலிலுள்ள கருவிகள் முதலியவற்றின் வேறாய்) ஆன்மா (உயிர்) உண்டு. அஃது அறிதற் குணமுடையது. ஆன்மாத் தோற்றக் கேடின்றி நித்தமாய், வியாபகமாய், நிற்கும். அறிவாவது ஒன்றனை விடயிப்பதே அன்றிப் பிறிதன்று. குணங்கள் அவ்வக் குணிகளின் வேறன்மையான், ஆன்மாவின் குணமாகிய ஞானமும் அவ்வாறே நித்தமும் வியாபகமும் ஆதல் பெறப்பட்டது. அதாவது, ஆன்மா நித்தியம்; அதனால் அதனைவிட்டுத் தனித்தியலாத ஞானமும் நித்தியம் என்பது பெறப்பட்டது.,
நான்கு மகாவாக்கியங்கள்
1. தத் துவம் அஸி – ‘அது நீ ஆகின்றனை’ என்று பொருள். குரு உபதேசிக்கக் கேட்டல்
2. ப்ரக்ஞானம் பிரமம் – ‘அது’ என்றது ‘பெரியஞானமே சொரூபமாகவுள்ள பிரமம்’ எனு பொருள். குரு உபதேசித்த வக்கியத்தை மனனம், செய்தல், சிந்தித்தல்.
3. அயம் ஆத்மா பிரமம் – ‘அயம்’ – இந்த; ஆத்மா- இந்த ஆத்ம ; பிரமம்- பெரியது. இந்த என்ற சுட்டு (உயிராகிய சீவான்மாவையும் பிரஹ்மம் என்றது, சீவான்மாவுக்கு அந்தரியாமியாகவுள்ள பரமான்மாவே) அந்தப் பிரமம் எனும் பொருளைப் பயக்கும் வாக்கியப் பொருளை நிதித்தியாசனம் செய்தல்; தெளிதல்.
4. அஹம் ப்ரமாஸ்மி – ‘நான் அந்தப் பிரமமாக இருக்கிறேன் என்பது பொருள் தெளிந்த பொருளுடன் சமாதி, நிட்டை கூடுதல்’
இந்த மகாவாக்கியங்கள் நான்கும் தனித்தனியே நிற்பன அல்ல; ஒன்றையொன்று தொடர்ந்து பொருள்கொள நிற்பன. அரும்பு, பூ, காய், கனி எனும் தொடர்ச்சி போல. இந்தநான்கு மகாவாக்கியங்களின் சுருக்கம், திரட்சி ‘சோஹம்; என்பதாம். சிவம்+அஹம்= சிவோஹம்- சோஹம்
‘சோஹம்’ – அது நான் என்னும் பொருளுடையது. ‘சிவோஹம்’ என்பதே சோஹம் எனப்பட்டது.
சைவசித்தாந்தம், ஆன்மா, சிவபரம்பொருளொடு அனாதியாகவே அத்துவித சம்பந்தம் உள்ளது என்ற கொள்கையுடையது. ‘தத் த்வம் அசி’ எனும் மகாவாக்கியமும் சிவோஹம் எனும் வாக்கியமும் சீவான்மாவாகிய நீ சுவானுபூதி ஞானத்தால் சிவபரம்பொருளின் தன்மையை அடைவாய் எனும் அருத்தத்தைத் தருவனவாகும்.
சிவோஹம் எனும் மகாவாக்கியம் ஆகமத்திலுள்ளது என்று அறியப்படுகிறது
பாம்புக் கடிக்கு விடம் தீர்க்கும் மாந்தரீகர்கள் கருடோகம் பாவனை செய்து, தங்கள் ஆன்மாவைக் கருடனாக மாற்றிக் கொள்கிறார்கள் பாம்புக்குப் பகை கருடன். கருடோகம் பாவனை செய்யும் அம்மாந்தரீகன் கருடத் தன்மை அடைந்து விஷ முறிவு செய்கின்றான். அவனுடைய ஆன்மாவே கருடத் தன்மை அடைகின்றது. அவனே கருடனாக மாறிவிடுவதில்லை.
அதுபோலவே, பாசம் நீங்கித், தன்னைப் பரசிவமாக ஒன்றியிருந்து அத்துவித பாவனை செய்யும் ஆன்மாவும் சிவத்தன்மை அடையும். இந்த அத்துவித உபாசனையே சிவோஹம் அல்லது சோகம் பாவனை எனப்படுகிறது.
“பாசத்தோடு கூடிப் பாசமயமாகவும், தத்துவங்களோடு கூடித் தத்துவ மயனாகவும் இருக்கும் ஆன்மா பதியோடு கூடி அப்பதி மயமாகவும் ஆகும். ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. அது எவ்வெம் மந்திரத் தெய்வத்துடன் கூடினும் அத்தெய்வமயமாகவும் இருக்கும் என்பது இதனால் உறுதியாகின்றது.
கருடோகம் பாவனையால் ஆன்மாவைக் கருடனாக்கிக் கொண்ட மாந்தரீகன் அடுத்தவன் உடலில் உள்ள விடத் துன்பத்தை நீக்குகின்றான். அதுபோலவே, பாசம் நீங்கிச் சிவோகம் பாவனையால் சிவமாகவே நின்ற தூய ஆன்மா, குருவாக, ஞானாசாரியனாக, பாசவேதனைப்படுவோனது வேதனையைக் களைகின்றான்.
இந்த உண்மையினை,
“ விடநகுல மேவினுமெய்ப் பாவகனின் மீளுங்
கடனிலிருள் போவதெவன் கண்” (திருவருட்பயன் அருளுருநிலை ).
“கருட னுருவங் கருது மளவில்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவி னுருவங் குறித்த வப்போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே “ (திருமந்திரம்)
எனச் சைவ சாத்திரங்களூம் இயம்பின.
இவ்வாறு சிவமாந் தன்மை பெற்றார் இனிப் பிறவி அடையார் என்னும் உண்மையினையே த்க்ஷிணாமூர்த்தி குருவாய் உணர்த்தினார். இக்கருத்தையே,
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகு மோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !
எனும் வரிகள் உணர்த்தின.
---------------
பலதுளைக ளுடையகுட முற்றதீ பத்தினொளி
பரவ லெனஐம் பொறிவழிச்
செலுமொளிய ஃதெது?நான் அறிந்தே னெனச்சொலத்
திகழு மொளியெது எதனையிவ்
வுலகமுழுதும் பற்றி யிகலுறும் அவ்வான்ம
சித்தாகி ஞானி கள்தொழும்
திகழுமுயர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி !! (4)
இப்பாடல் சிவபரம்பொருளின் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் இரண்டினையும் சுட்டுகின்றது.
முதலில் உவமையைப் பார்ப்போம். ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது. இரவின் கருமையில், அவ்வொளிக்கிரணங்கள் படர்ந்த இடங்களில் இதுவரைக் காணப்பெறாத பொருள்கள் காட்சிப் படுகின்றன.
இனி இந்த உவமையால் உணர்த்தப்படும் பொருளுக்கு வருவோம்
குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள்.அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன :சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது
இவ்வைந்து கதிரொளிகளைத் தரும் விளக்கு எது?பொருளைத் தன் பிரகாசத்தினால் காட்டுவது விளக்கு. அதுதான் சோதி, சுடர். அச்சுடருக்குப் பெயராகிய விளக்கு, அச்சுடர் இருக்கும் தகழிக்கும் ஆயது. இடத்திலிருக்கும் பொருளின் பெயர் இடத்துக்கும் ஆயது இடவாகு பெயர். மாயா இயந்திர தநு விளக்கு என்றது அத்தகையதாகும். பொறிகளாகிய தொளைகளின் வாயிலாக ஐம்புல அறிவு தரும் ஒளி எது?
ஏகதேச அறிவுடையதாய், வியஞ்சகம் (துணைக்கருவி) இன்றி, அறியவியலாததாய், அறிவிக்க அறிவதாய், மறந்து மறந்து அறிவதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் அறிவதாய், சித்தசித்தாய் உள்ள சீவான்மாவா? அன்று. இத்தகைய சீவான்மாவுக்கு அறிவொளி அளிக்கின்ற பேரொளி யொன்று அச்சீவான்மாவினுக்குள் பிரகாசித்துக் கொண்டுள்ளதென்பது சைவசித்தாந்தம்
தைத்திரியாருண்ய சாகை நாராயணம், இதயத்தினை இதயகமலம் என்றும் அதன்மத்தியில் அக்கினி சிகை யாகிய ஒளி உளது என்றும் ஓதும். “ நீவார தானியத்தின் (காட்டுநெல்) நுனை போன்ற நுண்ணிதும் பொன்னிறத்ததுமாகிய ஒளியொன்றுண்டு; அவ்வொளிச் சிகையின் மத்தியில் பரமான்மா விருக்கின்றனன்” என்று கூறும்.
ஜீவான்மா மூர்த்தி; அதில் பரமான்மா மூர்த்திமான். அண்டம் முழுவதையும் தன்னுள்ளும் புறத்தும் அடக்கி வியாபித்திருப்பவன் பரமான்மா. அவனே மிக நுண்ணியனாய் இதயகமலத்துள் இருக்கும் சீவான்மாவிலும் உள்ளான். அப்பொழுது அவன் அந்தரான்மா எனப்படுவான். அந்தரான்மாவும் பரமான்மாவும் வேறல்லர்; ஒருவரே
பரமான்மாவாகிய இறைவன் அந்தரான்மாவாகச் சீவான்மாவைத் தன் மூர்த்தமாகக் கொண்டு மூர்த்திமானாக விளங்கி என்ன செய்கிறான்?
கண் காணும் ஆற்றல் உடையதுதான்.அது ஒருபொருளைக் காணும்போது, அதனுடன் ஆன்ம அறிவும் கண்ணொளி வேறு தான்வேறு என்றில்லாமல் அதனோடு ஒன்றி உடனாய் நின்றால்தான், கண் அப்பொருளைக் காணவியலும் ஆன்ம அறிவு உடனாய் நில்லாதபோது கண் அப்பொருளைக் காணவியலாது.
“ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை நுகரும்” (மேற்கோள்).”இவ்வான்மாக்கள் அவனை யின்றி அமைந்து ஒன்றையும் வ்டயியா வாகலான் (ஏது)சிவஞானபோதம் சூ11. முதலதிகரணம்
ஏகதேச அறிவுடையதாய், வியஞ்சகம் (துணைக்கருவி) இன்றி, அறியவியலாததாய், அறிவிக்க அறிவதாய், சார்ந்ததன் வண்ணமாய் அறிவதாய், சித்தசித்தாய் உள்ள சீவான்மாவின் மீதுள்ள கருணையினால் பரமான்மாவாகிய சிவம் அநாதியாகவே உள் நின்று அதன் அறிவிச்சை செயல்களை ஊக்குவிக்கின்றது.
அந்தரான்மாவாகிய சிவம் உயிருக்குயிராய், அறிவுக்கு அறிவாய் நின்று சீவான்மாவின் அறிவை விளக்குகின்றது. அவ்வறிவின் துணையால் ஆன்மபோதம் ஐம்பொறிகளின் வாயிலாக சத்த பரிச ரூப ரச கந்தம் எனும் புலன்களை அறிகின்றது. ஜீவான்மா, பொறிகளின் வாயிலாக அறியும் அறிவு, சிவம் அந்தரான்மாவாக இருந்து அறிந்து, அறிவிக்கும் உபகாரமேயாகும். ஆன்மா அவனை இன்றி எதையும் அறியாததாகும்.
அந்தரான்மாவாகிய சிவத்தின் செயலைச் சிவஞான சித்தியார்,
“அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
உன்னிய வெல்லாம் உண்ணின் றுணர்த்துவ னாத லானும்” என்றுரைக்கின்றது.
கண்ணொளியும் ஞாயிற்றினொளியும் பொதுமையில் ஒத்து நின்றாலும் ஞாயிற்றினொளி கண்ணொளியிற் கலந்தும், காணப்பெறும் பொருள்களின் மேற் படர்ந்தும் அறிவித்தலைப் போல, முதல்வனின் அருள் ஆன்ம அறிவிற் கலந்தும் பொருள்களோடு கூடியும் கண்டும் காட்டியும் உதவுகின்றது. இதனை முதல்வனின் கண்டு காட்டும் உபகாரம் என்பர்.
இந்த வாய்மையைச் சிவஞான சித்தியார்,
“பொறிபுலன் கரணமெல்லாம் புருடனா லறிந்தான் மாவை
அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்தும் எங்குஞ்
செறிதரு சிவன்ற னாலே அறிந்திடும் சிவனை காணா
அறிதருஞ் சிவனே எல்லாம் அறிந்தறி வித்து நிற்பன்” (231)
“ஒருவனே (சிவன்)உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன்”
எனக் கூறுதல் காண்க.
“பலதுளைக ளுடையகுட முற்றதீ பத்தினொளி
பரவ லெனஐம் பொறிவழிச் செலுமொளிய ஃதெது?”
அதுவே சுயஞ்சோதி, பரஞ்சோதி, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி,’காரொளிய திருமாலும் கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம் சீரொளிய தழற் பிழம்பாய் நின்றவொளி”’, ‘சிந்தை தன்னை மயக்கந் தீர்க்கும் ஞானவொளி’, அண்டத்துக் கப்பால் நின்ற பேரொளி. (அப்பர், தில்லைத் திருத்தாண்டகம் 10)
இந்தப் பேரொளி பிரகாசமான நுண்ணொளியாய் இதய மத்தியில் உள்ளது.
அந்தரியாமியாய் அப்பரமான்மாவிற் குடம்பாயுள்ள சீவான்மாவுக்குமிருக்கை இருதயத்தானமே. (பாம்பன் சுவாமிகள்)
எனவே,குடத்தினிள்ள தீபவொளி, ஐந்து தொளகளின் வாயிலாக வெளியே பரவுதல் ஐம்பொறி வாயிலாக உடம்பினுள் உள்ள (சீவ) ஆன்மாவே அறிகின்றதென்று கூறுதல் பிழை என்பது சைவசித்தாந்தம்.
“There is only one athma which is named as jivathma and paramathma. When you focus upon athmafrom chith aspect, you use the word jivathma; when you focus upon ‘sat’ (Existence) aspect you use the word ‘paramanma’.; bur both are one and the same.satchith atma only. Remove the adjectives.”
இவ்வாறு கூறுவதன் பொருத்தம் ஆராய்தற்குரியது.
“நான் அறிந்தே னெனச்சொலத்திகழு மொளியெது”
தக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தின் நான்காம் பாடலில் இத்தொடரில் அமைந்துள்ள ‘நான்’ என்னும் தன்மை ஒருமைச் சொல் வேதாந்தத்தின் ஆன்ம தத்துவத்தை விளக்குவ தென்பர். வேதாந்தத்தில் ‘ஆன்மா’ என்பது தூய அறிவு; ஞானத்தைக் குறிக்கும் என்பர் சீவான்மா, பரமான்மா என இருவேறு ஆன்மாக்கள் இல்லை. அடைமொழிகளான சீவன் , பரம் எனும் இரண்டையும் களைந்து விட்டு ஆன்மா என்ற ஒன்றையே கொள்ள வேண்டும் என்றும் சீவன் என்பது உடலில் உள்ள சித்தெனும் அறிவு என்றும் பரமென்றது என்றும் நிலையான தோற்றக் கேடுகள் இல்லாத சத்தைக் குறிக்கும் என்றும் கூறுவர். ஆன்மா என்ற பதம் சத்துச்சித்து எனும் ஆன்மதத்துவத்தினைக் குறிக்கும் என்று கூறுவர்.
ஐந்து துளைகளையுடைய குடத்தினுள் வைக்கப்பெற்ற தீபத்தின் ஒளி ஐந்து துளைகளின் வழியே வெளியில் படர்ந்து பொருள்களைப் பிரகாசிக்கச் செய்கின்றதைப்போல், ஐம்பொறிகளின் வாயிலாக உடலின்கண் உள்ள (ஆன்ம) அறிவானது பிரபஞ்சத்தைப் பிரகாசிக்கச் செய்து அதனை அறிகின்றது என்பர். (பிரகாசித்தல் – விளங்கித் தோன்றுதல்
ஐந்து துளைகளையுடைய கடத்தினுள்ள விளக்கு அத்துளைகளின் வழியே வெளியில் உள்ள பதார்த்தங்களை விளக்குவதோடு உள்ளிருக்கும் பதார்த்தங்களையும் விளக்குகின்றது. அது போலத் தூலசரீரத்தினுள் இருக்கின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் பஞ்சேந்திரியங்களின் வாயிலாக வெளியிலிருக்கும் விடயங்களையும் அறிந்து நிற்கின்ற ஆன்மா, சரீரத்தினுள் “அறிவாக’ப் (consciousness) பிரகாசித்துக் கொண்டிருக்கிறது ) (ஞானேந்திரியங்களைப் போல மனமாதிய அந்தக் கரணங்களும் ஆன்ம அறிவு விளங்கித் தோன்றுதற்குக் கருவியேயாம்.)
இக்கூற்றின்படி எல்லா சரீரத்திலும் ஒரே அறிவுதான் (consciousness) பிரகாசிக்கின்றது. எல்லா சரீரத்திலும் ஒரே அறிவுதான் (consciousness) பிரகாசிக்கின்றதெனின் எல்லாருடைய அறிவும் ஒருதன்மைத்தாகத்தானே இருக்கவேண்டும்; பிறர் மனத்திலுள்ளதை நான் அறிய வேண்டுமே! யதார்த்தத்தில் அவ்வாறி இல்லையே எனின்,
இப்பதிலைப் பாருங்கள்
“You cannot distinguish between your Consciousness and my Consciousness. They appear to be identical. That is why Consciousness is called mahadeep ( ). One Consciousness is simultaneously present in every pot, simultaneously illumining every mind (omnipresent). There is a common question that if my Consciousness is the same as your Consciousness, then why don‟t I know your thoughts? First of all, thank God for having this natural law. It is God‟s blessings that we do not know other‟s thoughts. It is difficult to deal with even one‟s own thoughts. What to speak about dealing with other‟s thoughts?
இது கடவுள் விதித்த இயற்கை நியதியாம்!
இன்னொரு விளக்கம்:
“நான் கர்த்தா, நான் மனுஷன், நான் ஜீவன் , நான் அகர்த்தா, நான் அசங்கன் ( அசங்கன் acaṅkaṉ, n. < a-saṅga. One who is free from attachment; பற்றற்றவன். இந்தவான்மாவென்றுமேயசங்கனாவன் (விவேகசூடா. 114). நான் ஆநந்த வியாபகப் பிரமம்’ என்பவற்றிலுள்ள ‘நான் நான்’ எனும் சாமாநிய அம்சம் அஞ்ஞானி, ஞானி ஆகிய இருவரிடத்தும் ஞானம் அஞ்ஞானம் எனும் எனுமிரண்டு காலத்திலும் காணப்படுகின்றமையால் ----” , நான் அறிந்தே னெனச்சொலத்திகழு மொளியெது” என்றார்.
And when that person realizes that ‘I know myself”,
This whole universe shines after Him alone,
Who shines in the consciousness as the knower.
மேற்காணும் கருத்துக்களுடன் சைவ சித்தாந்தம் பலவிடங்களில் வேறுபடுகின்றது.
பரமான்மா எனும் பிரமம் ஔபச்சிலேடிக வியாபகம்; அவ்விரிந்த வியாபகத்தினுள் சேதன அசேதனப் பிரபஞ்சங்கள் யாவும் அடங்கியுள்ளன. எனவே ‘நான் அறிந்தேன்’ எனப்பிரபஞ்சத்தைச் சுட்டியும், என்னை நான் அறிந்தேன் எனத் தன்னையும் அறிய வேண்டுவதில்லை; பிரமம் தானிருந்தவாறே இருந்து தன் வியாபத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் அறியும்.
இவ்வாறு அறிய வேண்டிய நிலையில் உள்ளது எதுவெனில் அறிவை மறைக்கின்ற ஆணவமலசம்பந்த முடைய ஆன்மாவே.
அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தில் அநாதியாகவே, செம்பில் களிம்புபோல் கலப்புண்டு அணுவெனக் கிடக்கும் ஆன்மாவுக்கு இறைவன் தன் அருளினால் மாயாகாரிய கருவிகளால் அறிவூட்டுகின்றான். கலாதத்துவத்தினைக் கூட்டி ஆன்மாவின்கிரியாசத்தியை எழுப்புகிறான். அது ஆணவமலசத்தியைச் சிறிதகற்றுகின்றது. அப்பொழுது வித்தியாதத்துவத்தால்எழுப்பப்படும் ஆன்மாவின் சத்தியே இவ்வறிவாகும்.
இவ்வறிவு ஆன்மபோதம் என்றும் தற்போதம் என்றும் ஜீவபோதம் என்றும் வழங்கப்படும். இவ்வறிவு இறைவனின் அருளால் தோன்றுவது. இறைவனின் அருளை மறந்த ஆன்மா ‘நானே அறிகிறேன்’ எனத், தன்னையே கருத்தாவாக நினைக்கும். இவ்வாறு தன்னை அகங்கரிப்பதும் மலத்தினாலாம்
மாயா காரியங்கள் அனைத்தும் சடம் என அறிந்து அவற்றைவிட்டு நீங்கிய ஆன்மாவுக்கு, இவ்வாறு தெளிந்து அனாத்துமப் பொருள்களை விட்டு நீங்கிய’ நானே’ அறிவுடைப் பொருள் என்ற மயக்க உணர்வு தோன்றும். அப்பொழுது ஆன்மாவுக்குத் தானே அறிவு, தானே கருத்தா , எனக்குமேல் ஓரறிவோ கருத்தாவோ இல்லை எனும் அகங்காரம் தோன்றும்.
அப்பொழுது, புண்ணியமுடைய ஆன்மாவுக்குச் சிவம் குருவாக வந்து,’கண்ணொளி சூரியனுடைய ஒளியுடன் கூடியே பொருள்களைக் காண்கிறது; தான்மட்டும் தனியே நின்று பொருள்களைக் காண்பதில்லை;காண இயலாது. அதுபோல ஆன்மா திருவருளுடன் கூடியே பொருள்களைக் காண்கிறது. திருவருள் காட்டக் காணுமே யொழிய ஆன்மா எதனையும் தானே அறியவும் செய்யவும் இயலாது என அறியும்.
ஆன்மா அறிவுடைப் பொருளே; அது அறிவிக்க அறியும் பொருள். இறைவன் அறிவுடைய சித்துக்கே அறிவிப்பதன்றிச் சடத்துக்கு அறிவியான்.
கண்ணொளியுள்ள கண்ணுக்கே சூரிய ஒளி காணத் துணை செய்யும். ஞாயிறின் உதவியை நினையாது கண்டது கண்ணே எனக் கூறுவது போலத் திருவருள் அறிவிக்க அறியும் ஆன்மா, அதுவே அறிவதாக அறிவது பிழை. இது சைவசித்தாந்தம்.
அறிவே (consciousness) ஆன்ம சொரூபம் எனும் கூற்று ஏற்புடையதா?
எது அறிவு? அறிவாவது ஒன்றை விடயிப்பதே யன்றிப் பிறிதன்று. அவ்வாறு விடயிப்பதாகிய அறிவு ஒரு சமயத்தில் நிகழ்தலும் ஒருசமயத்தில் நிகழாதொழிவதும் கண்கூடு. அந்த அறிவு காலத்தாலும் இடத்தாலும் ஏகதேசமாய், குறையறிவாய் நிகழ்வதும் உண்டு. அந்த அறிவு செயற்கையான் (அபரோக்ஷ ஞானம்) நிகழ்வதும் உண்டு. இவ்வாறு அறிவு குறைபாடு உடையது, சர்வஞ்ஞனான, வியாபக ஞானமுடைய பிரமமாக இருக்க முடியாது. இக்குறைபாடுகளையுடைய ஆன்மா பரமான்மாவன்று; சீவான்மாவே.
அறிவாவது ஒன்றை விடயித்தல் என இலக்கணம் கூறல் பொருந்தாது என்றும், விடயித்தல் (அறியும் அனுபவம்)இன்றியும் (ஆலயவிஞ்ஞானம்) அறிவு உண்டென பவுத்தரும் கூறுகின்றனரே எனச் சமாதானம் கூறுவர். அவ்வறிவு எவ்வியல்பிற்று? அனுபவித்தற்கு வாராத அறிவு ஆகாயத்தாமரை போலப் பயனற்றதாகும்.
அறிவு என்பது ஆன்மாவின் குணம். ஆன்மா குணி; அறிவு அதன் குணம். குணி இன்றிக் குணமில்லை. எனவே, ஆன்மாவின் குணமாகிய ஞானம் அல்லது அறிவும் குணியாகிய ஆன்மாவிட்டுத் தனித்து நில்லாது. ஆன்மா என்பதற்குப் பொருள் வியாபகம் என்பதாம். எனவே ஆன்ம அறிவும் வியாபக மானது. வியாபக அறிவு ஏகதேசமானது எப்படி? பிராந்தி ஞானம், அத்தியாசவாதம் என்பதைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை.
-----------------
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் - 5
உடலுடலில் உலவுவளி ஐம்பொறிகள் கரணங்கள்
ஒன்றுமே இல்லா தபாழ்
கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலி னாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டு கொல்லோ
திடமுதவு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி!! 5
முதல் நான்கு பாடல்களில் சங்கரபகவத்பாதரவர்கள் வேதாந்தத்தின் மையக் கருத்துக்களைச் சுருக்கித் தந்தருளினார். பிரபஞ்சத்தின் மாயத்தோற்றம், சத்து சித்து இரண்டும் சேர்ந்து ஆன்மா சத சித்தாக இருத்தல், தத்துவமஸி மகாவாக்கியத்தின் பொருள், அறிவே ஆன்மா, அறிவுக்கு வேறாக ஆன்மா இன்மை, சத் சிதான்மா கருத்துப்பொருள்(subject; ) பருப்பொருளன்று (object), எப்படிக் கனவனுபவம் நனவு போல என்னுள் படைக்கப்பட்டதோ அவ்வாறே காணப்படும் பிரபஞ்சமும் ‘நான்’ எனும் சத் சித் ஆன்மாவால் தோன்றின; சுழுத்தியில் எந்த அனுபவமும் இல்லை, அதுபோல, என் அகத்தில் படைக்கப் பட்ட மித்தையாகிய பிரபஞ்சமும் ‘நான்’ ஆகிய என்னுள் ஒடுங்கியது ஆகியன இப்பாடல்களில் வெளிப்பட்டன.
ஐந்தாவது பாடலில் இம்மெய்யறிவு இலாத மக்களைப் பற்றிப் பகவத்பாதர்கள் கூறுகிறார். இவர்களை அறிவற்ற மடையர்கள் என்றும் ‘பிராந்தர்கள்’ என்றும் கூறுகின்றார்.பிராந்தர் எனும் சொல்வழக்கு இன்று மலையாள மொழியிலும் வழங்கப்படுகிறது. அச்சொல்லுக்கு அறிவு கலங்கியவர்கள், மதிமயங்கியவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள் என்பது பொருள். அவர்கள் ஆத்ம அனாத்மா இவற்றினிடையே வேற்றுமை அறியாதவர்கள்; அனாத்மாவான தேகம் முதலியவற்றையே ஆத்துமா எனப் புத்தி கலங்கி அறிபவர்கள். ஆன்மா என ஒன்று இல்லவேயில்லை; ஆன்மா சூனியம் எனும் மடையர்கள்.
இவர்களிற் சிலர் சத்த பரிச ரூப ரச கந்த புலனறிவுகள் தேகத்தில் தோன்றுவதால், தேகத்தையே ஆன்மா எனக் கருதுபவர்கள். வேறு சிலர் சிந்தித்தல் தெளிதல் போன்ற அறிவு மனம் முதலிய அந்தக் கரணங்களில் தோன்றுவதால் அந்தக்கரணங்களே ஆன்மாஎன்பர். இவர்கள் அந்தக்கரண ஆன்மவாதியர் எனப்படுவர். மற்றும் சிலர் உடலியக்கத்துக்குப் பிராணவாயுவே காரணமாதலால் பிராணவாயுவே ஆன்மா என்பர். இவர்கள் பிராணவான்ம வாதியர் எனப்படுவர். இன்னுஞ் சிலர் உடல் மேலும் உள்ளும் தேடிப் பார்த்துவிட்டோம்; ஆன்மாவெனும் ஒருபொருள் புலப்படவில்லை; எனவே ஆன்மாவென ஒன்றில்லை என்பர். இவர்கள் சூன்ய ஆன்ம வாதிகள்
இந்த பிராந்தர்கள் யார்? உடலையும் உடலினுள் உலவுகின்ற வாயுவினையும் ஐம்பொறிகளையும் அந்தக்கரணங்களையும் அறிவுடைய ஆன்மா எனும் கொள்கையுடையவர்கள். இவர்களில் சாருவாகர் எனும் மதவாதியர்களும் அடங்குவர். ஆன்மா,சூனியம் என்போர் சாருவாகர்கள். உடலே ஆன்மா என்பவர்கள் உலகாயதர் எனப்படுவோர். முன்னையோர் பிராந்தரெனின் இவர்கள் மடையர்கள். நுண்ணிய , கூர்த்த அறிவிலாத மடையர்களான இவர்கள் உடலையே ஆன்மா எனக் கருதுவோர்.
இவர்கள் அறியாமையிலும் தாம் பிடித்ததையே சாதிப்பதிலும் வாதிப்பதிலும் மூழ்கியவர்கள் இவர்களைப் படைத்த கடவுளாலன்றி யாராலும் திருத்தவியலாது. எனவே,
“கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலி னாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டு கொல்லோ”
என்றார்.
திருத்த முடியாத இயல்புடையோருக்கு எடுத்துக்காட்டாகப் பகவத்பாதரவர்கள் நால்வரைக் குறிப்பிடுகின்றார். அந்நால்வர்.”ஸ்திரி, பாலர், அந்தகர், ஜடம்” பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள். உணர்ச்சி வயப்பட்டவர்களுக்கு அறிவு செயல்படாது; அவர்கள் உணர்ச்சி வயத்தில் சிக்கியிருக்கும்போது அறிவுணர்த்தல் பயன்படாது. பாலர் அறிவுக் குறைவுடையோர்; குறைவறிவுடையோருக்கு அவர்கள் கொள்ளும் அளவுக்குத் தானுணர்த்த முடியும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு மேற்படிப்புப் பாடங்களைப் போதிக்க வியலுமா? அந்தகர் என்போர் விழியிலாதவர்கள். யானையின் கால், காது, வால், வயிறு போன்ற உறுப்புக்களைத் தடவிப் பார்த்து யானையின் உருவம் இத்தகையது எனக் கூறிய அந்தகர்களின் கதை போன்றதுதான் இந்த அறிவுக் குருடர்களின் நிலை. ஜடம் என்றது அறிவற்ற கல், மரம் போன்ற அஃறிணைப் பொருள்கள்போன்வர்கள். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்; அறிவில் ஜடமாக இருப்பவர்கள்.
இங்கு ஆன்மா அல்ல என விலக்கப்பட்டன சைவசித்தாந்தத்துக்கும் உடன்பாடே.
சிவஞான போதம் மூன்றாம் நூற்பாவும் நான்காம் நூற்பாவும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தில் கூறப்பட்ட கருத்தினை ஆராய்கின்றன.
“உளது இல தென்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்
மாய இயந்திர தனுவினுள் ஆன்மா’
உடம்பாகிய , ‘மாயையின் காரியமாகிய இயந்திர தனுவுள் ஆன்மா என்பதொன்றுண்டு.
எவ்வாறு அறியப்படுகின்றதென்றால், ஆன்மா இதுவல்ல இதுவல்ல என்று கழித்தது எது, ஆன்மா சூனியம் எனக்கொள்ளத் தீர்மானித்து நிற்பது எது? அது தீர்மானிப்பவனின் அறிவல்லவா? அந்த அறிவே ஆன்மா.அந்த அறிவும் சூனியம் என்றால் என்னைப்பெற்ற தாய் மலடி என்பதற்கு ஒப்பாகும். இது சூனிய ஆன்ம வாதிகளை மறுத்தது.
இவ்வாறு பல்வேறு ஏதுக்களால் ஆன்மாவென்னும் அறிவுப் பொருள் மாயா இயந்திர தனுவாகிய உடலில் உளது என நிறுவிய சைவசித்தாந்தம், சங்கரர் கூறாத ஏது ஒன்றனையும் கூறி அந்த ஏதுவினால், அந்த ஆன்மா எது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
“உணர்த்த உணர்தலின்” என்ற ஏதுவினால் உடலில்,- முன்பு உணர்வு இல்லாத ஆன்மா ஒன்று இருக்கிறது, அது உடலில் உள்ள ஞானேந்திரிங்களாகிய கருவிகளால் உணர்த்த உணருகின்றது என்பது பெறப்பட்டது.
எனவே உடலில் ஆன்மா எனக்கிடப்பது இருந்தாங்கு அறியும் பேரறிவாகிய பிரமம் அன்று என்பது பெறப்பட்டது. பிரமமாகிய சைதன்னியமே ஆன்மா என்பது விஞ்ஞான வாதிகள் எனப்படும் வேதாந்திகளின் கொள்கை.
உடலில் உள்ள ஆன்மா சீவான்மா. அது கருவிகளோடு கூடியபோதும் தன்னியல்பின உணராதது. இந்த ஆன்மா குரவன் ஒருவனால் வேதாகமங்களின்வழி , உபதேசமொழியைப் பெற்றுத் தன்னையும் தன்னை உடையானையும் அறியும் அறிவினதாம். எனவே, அறிந்தவாறே அறிந்து நிற்கும் பேரறிவகிய பிரமப் பொருளாகிய முதல்வன் அல்லன். இது வேதாந்திகளுக்கும் சைவசித்தாந்திகளுக்கும் இடையே ஆன்மாவைப் பற்றிய முக்கியமான வேறுபாடாகும்.
------------------
அராநுகர் கலாதர திவாகரர் சமானமுற
அருமாயை யுள்மறைந்தே
உராவுகர ணாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்த னித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்
சிராமலைய குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிண மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி!! 6
5ஆவது பாடலில் ஆச்சாரியர் மடமையர் என்றுகருதத் தக்க சில தத்துவ வாதியர்களைக் கூறினார். அவர்கள் தேக ஆன்மவாதியர், அந்தக்கரண ஆன்மவாதியர், பிராணஆன்மவாதியர், புத்தியான்மவாதியர், சூன்ய ஆன்மவாதியர். இவர்களுடைய கொள்கைகளைக் கூறவோ மறுக்கவோ செய்யாமல் மடவோர் என்று மட்டும் கூறினார்.
ஆறாவது பாடலில் சூன்ய ஆன்மவாதியை மட்டும் மறுக்கின்றார். சூன்ய ஆன்மவாதம் என்பது பவுத்த மதத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தவொரு பிரிவு. இவர்கள் மத்தியாத்மிக வாத பவுத்தர்கள் எனப்படுவர். இதன் ஆச்சாரியர் நாகார்ஜுனர் என்பவர். இவர் சங்கரபகவத் பாதருக்கு முன்னமேயே வாழ்ந்தவர். இவர் தம்முடைய திறமையான வாதத்தால் தேக ஆன்மவாதம்,பிராண ஆன்மவாதம், இந்திரிய ஆன்ம வாதம்,க்ஷ்ணிக விஞ்ஞானவாதம் முதலியவற்றைத் தம்முடைய கோட்பாடாகிய சூனியவாதத்தால் வென்றழித்தார்.
பகவத் பாதரவர்கள் இந்த ஆறாவது பாடலில் சூனிய வாதக் கொள்கையை மட்டும் கூறி அதனைப் பூர்வபட்சம் செய்கின்றார். இதனைப் பூர்வபட்சம் செய்வதனால் பிறகோட்பாடுகளையும் வென்றாராயிற்று. இவ்வாறு செய்வதனைப் பிரதம மல்லநியாயம் என்பர். மல்லன் ஒருவன், தான் மற்போட்டியில் முதன்மையானவன் என்ற பெருமையைஅடைய விரும்புகின்றான். அவன் நாட்டிலுள்ள மல்லர்கள் எல்லாருடனும் மற்போரிட்டு வெல்ல வேண்டியதில்லை; எந்த மல்லன் பிறமல்லர்களை வென்ற புகழ் உடையவனாக இருக்கிறானோ அவனுடன் போட்டியிட்டு வென்றாலே போதும் அவன் பிறமல்லர்களையும் வென்றதற்கு அதுவே அடையாளமாகும். எனவே, பகவத் பாதரவர்கள் மற்றவர்கள் கோட்பாட்டை மறுக்காமல் , சூனிய வாதிகளின் கோட்பாட்டை மட்டும் கூறி மறுக்கின்றார்.இதனை வென்றதனால் பிற கோட்பாடுகளையும் வென்றாராகின்றார்.
சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை
இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்கமேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும்.
இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்.
ஆழ்ந்த உறக்கத்தில் எந்த அனுபவமும் இல்லை. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எந்த விடயங்களையும் விடயிப்பதில்லை. நனவிலும் கனவிலும் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக்கரணங்களாகிய கருவிகள் உள்ளன. இவற்றால் எனக்கு உலகம் அனுபவப் பொருளாகின்றது.
ஆழ்ந்த உறக்கத்தில் இவையெல்லாம் எனக்குக் கருவியாவதில்லை. அதனால் உலகமும் எனக்கு விடயமாவதில்லை. சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் ‘நானும்’ இல்லை; என்னால் அனுபவிக்கத் தக்க உலகமும் இல்லை காண்போன் காணப்படும் பொருள் காட்சி எனும் எதுவும் இல்லை. ஆத்மாவும் இல்லை; அனாத்மாவும் இல்லை. ஒன்றும் இல்லாத சூனியமே உள்ளது. நனவிலும் கனவிலும்காண்பான் , காட்சி, காணப்படும் பொருள் ஆகிய திரிபுடி ஒன்றும் இல்லாத சூனியத்திலிருந்தே தோன்றுகின்றன. இதுவே சூனியவாதியின் அனுபவப் பிரமாணமானமுடிவு.
சங்கர பகவத் பாதரவர்கள் ஆழ்ந்த உறக்கம் எனும் அவத்தை சூனியமோ பாழோ வெறுமையோ அன்று; அங்கு ‘சத்து’ எனும் ஒரு பொருளே உளது. அது இடம் காலம் முதலிய குணங்கள் இல்லாத அகண்டாகாரம். அதனால் அது எந்தவொரு விவகார வியாபாரமும் இல்லாதது.
குணம் குறி காலம் இடம் ஆகிய பண்புகள் உடைய கண்டப் பொருளே விவகரிக்கும். அகண்டப்பொருள் எவ்விதத்திலும் செயல்படாது. ஆகாய வெளி புலன்களால் அனுபவிக்கப்படுவதில்லை. அதனால் பொதுவாக நாம் ஆகாயத்தை ஒன்றும் இல்லாத சூனியம் எனக் கருதுகின்றோம். ஆனால் ஆகாயவெளி என்பது இல்பொருளல்ல; உள்பொருளே.
சத்துப் பொருளும் இத்தகையதே. சுழுத்தியாகிய உறக்கத்தில் அகண்டாகார சத்து விவகாரத்துக்குட்படாதால் அனுபவப் பொருளாதல் இல்லை. உறக்கத்தில் காண்போன் காட்சி காணப்படும் பொருள், ஞாதுரு, ஞானம், ஞேயம் எனும் திரிபுடி இல்லை.
நனவிலும் கனவிலும் ஞானேந்திரியம் முதலிய கருவிகள் செயல்படுகின்றன. சுழுத்தியில் செயல்படாக் கருவிகளே உள்ளன. உறக்கத்தில் அவை தொழிற்படுவ தில்லை. எனவே எந்த அனுபவமும் இல்லை. உறங்கிக் கொண்டி ருக்கும்போது,நான் உறங்கிக் கொண்டிருக்கின்றேன் எனும் அறிவில்லை. கனவு காணும்போது நான் கனவு கண்டுகொண்டிருக்கின்றேனெனும் அறிவும் இல்லை. அப்படியென்றால் அவ்வுறக்கத்தில் ‘சத்து’ எனும் மெய்ப்பொருள் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? உறங்கி விழித்து, நனவு நிலைக்கு வந்தபின், ‘நினைவின்றி நன்றாக உறங்கினேன்; இன்பமாக இருந்தது’ என்று கூறக் காண்கிறோம். உறக்கத்தில் ஒன்றையும் விடயிக்காத அனுபவத்தையும் அதனால் பெற்ற இன்பத்தையும் எதுவொன்று நனவில் கூறுகின்றதோ அதுவே சத்து;மெய்ப்பொருள் ; ஆன்மா. எனவே, சுழுத்தியாகிய உறக்கத்தினை ஒன்றுமே இல்லாத பாழ் என்று கூறலாகாது. அங்குச் சத்தாகிய ஆன்மா இருந்தது. அதுவே நனவுக்கு வந்தபின் உறக்கத்தில் இருந்த தன் நிலைமையைக் கூறியது. இவ்வாறு உறக்கத்தில் சத்தான ஆன்மா இருக்கும் நிலையையே,”
“உராவுகர ணாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்த னித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்”
என்றுரைத்தார்.
உறக்கத்தில் ஞானமேயான மெய்ப்பொருள் இருந்தது, கருவிகள் தொழிற்படாமையினாலே அது காணப்படவில்லை, காணப்படாமையினாலே அம்மெய்யறிவில்லை, அங்குச் சூனியமே இருந்தது எனக் கூறாலாகாதென்பதற்குப் பகவத் பாதரவர்கள் ஓரெடுத்துக் காட்டுக் கூறுகிறார்.
சூரிய சந்திர கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகளாக நிகழ்கின்றன. புராணக் கதைகள் இராகு கேது எனும் பாம்புகள் சூரிய சந்திரனை விழுங்குவதால் கிரகணங்கள் தோன்றுகின்றன என்றும் பின் அவற்றைக் கக்குவதால் மீண்டும் சூரிய சந்திரவொளி தோன்றுகின்றன எனவும் கூறும். வான நூல் வல்லார் பூமியின் நிழல் சூரிய சந்திரன்மேல் விழுவதால் அவற்றின் ஒளி மங்கியதாக நமக்குத் தோன்றுகின்றதென்பர். ஜோசியர்கள் இராகு கேதுவினைச் சாயா கிரகங்கள் அல்லது நிழற்கிரகங்கள் என்பர். சாயை சூரியனையும் சந்திரனையும் மறைத்ததனால் இருள் நிலவியதேயன்றி சூரியசந்திரவொளி இல்லாமற்போகவில்லை. இதுபோன்றதே உறக்கத்தில் ஆன்மாவின் நிலையும்.
சத்தான ஆன்மா எப்படி சூனியம்போல மறைந்தது/?
இந்த சத்திலேயே ஆவரண சத்தியென்றும் விக்ஷேபசத்தியென்றும் இருசத்திகள் உண்டு. ஆவரணசத்தி அறிவை மறைக்கும் சத்தி. விக்ஷேபம் அறிவை மயக்கும் சத்தி. ஆவரணம் இயங்கி அறிவை மறைத்தது; விக்ஷேப சத்தியினால் கருவிகரணங்கள் செயலொழிந்தன. அதனால் உறக்கத்தில் ஒன்றுமே இல்லாதபாழ் போன்ற வெறுமை தோன்றியது. உறக்கத்தில் கருவிகள் இயங்காததால் நான் கேட்பதொழிந்தேன்; அருந்துவதொழிந்தேன் காண்பதொழிந்தேன் ; ஸ்பரிசித்தலொழிந்தேன்; நினைவதுமொழிந்தேன். எச்செயலும் இல்லாததன்பால் ஆன்மாவாகிய நான் இல்லாததுபோல் உறக்கத்தில் இருந்தேன். உறக்கத்தில் ‘நான்’ எனும் ஆன்மா இல்லாமற் போகவில்லை.
இவ்வாறு இப்பாடல் பவுத்தர்களின் ஒரு பிரிவாகிய சூனிய ஆன்ம வாதீயர்களான மாத்தியாமியர்களை மறுத்தது.
அரா- பாம்பு. நுகர்- விழுங்கிய. கலாதரர்- சந்திரன். திவாகரன் – சூரியன். சமானமுற- அரவு விழுங்கியதனால் தோன்றிய இருளை போல. மாயையுள் மறைந்தே – மாயையின் செயலாகிய ஆவரண விக்ஷேப சத்திகளால் மறைக்கப்பட்டு. கருவிகரணங்கள் செயல் படாததனால் இவைகளெல்லாம் ஒடுங்கிய உறக்கத்தில் ஒர் சத்தாகிய மெய்ப்பொருள் ஆன்மா தனித்து இருக்கும். அவ்வான்மாவே விழிப்பு வந்த நிலையில் நான் நன்கு உறங்கினேன் என்று தன் இருப்புக்குச் சாட்சி பகரும்.
அத்தகைய மெய்ப்பொருளாக விளங்கி நிற்கும் தக்ஷிணாமூர்த்திக்கு வணக்கம்.
சிவஞானபோதம் நூற்பா 3,ஆன்மாவின் உண்மையைக் கூறுகின்றது. பிராண ஆன்மவாதியென்பவன், செயலற்ற உறக்கத்திலும் பிராணவாயுவின் செயற்பாடு உள்ளமையினால், பிராணவாயுவே ஆன்மா என்றான். அவனுக்கு மறுப்பாகச் சிவஞானபோதம், “கண்படில் உண்டிவினை யின்மையின் ஆன்மா உளது” என்று கூறியது. நனவிலும் கனவிலும் கருவிகரணங்களை இயங்கச் செய்வதும் உறக்கத்தில் அவற்றை ஒடுங்கச் செய்வதும் ஆகிய ஆன்மா உடலில் உள்ளது என்பது கருத்து.
பகவத்பாதர்கள் ஆன்மா எனக் கூறியது பரமான்மாவாகிய பிரமத்தினை. சிவஞானபோதம் ஆன்மா என்றது சீவான்மாவாகிய உயிரை.
-------------------------
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம் -7
பாலியமு தற்பருவம் நினைவாகி நிலையெனப்
படுவேறு நிலையி லெல்லாம்
மாலையுறு நாறென ஒரேபொருள தாய்நின்று
மாறா ததன்ம யத்தைக்
கோலியசின் முத்திரையின் அறிவுறுக் கின்றநற்
கோலத்த ஞான யோகச்
சீலமுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி ! 7
இந்தப் பாடலில் பகவத்பாதரவர்கள் ஆன்மாவின் சொரூபத்தை, உண்மைநிலையை உணர்த்தியருளுகின்றார். முந்திய பாடல்களில் ஆன்மா சூனியமன்று, தேகமன்று, இந்திரியங்களன்று, பிராணனன்று என்பதை உணர்த்தினார். இப்பாடலில் ‘தன்மயம்’தான் (வடமொழியில் ஸ்வாத்மானம்’ svatmanam) ஆத்மாவின் இயல்பு. ‘நான்’ என்பதுதான் ஆத்துமாவின் சொரூபம் என்பதை அழகாக விளக்குகின்றார்.
மனித வாழ்க்கையில் நான்கு நிலைகள் அல்லது அவத்தைகள் கூறப்படும். பாலியம், குமரம் அல்லது கௌமாரம், வாலிபம், முதுமை அல்லது கிழப்பருவம் இது தொடர்ச்சியாக வரும் நிலைகள். நாள்தோறும் நாம் அனுபவிக்கும் அவத்தைகளும் உண்டு. நனவு, கனவு, சுழுத்தி, உறக்கம், பேருறக்கம் என்பன அந்த அவத்தைகள். இவைதொடர்ச்சியாக நிகழ்வன அல்ல. இடையீடுபட்டு நிகழ்வன. இவைபோலவனவே கோபம், மகிழ்ச்சி இன்பம் துன்பம் வெறுப்பு விருப்பு போன்ற உணர்வுகளை நாம் அனுபவிக்கின நிலைகள்.
இந்த நிலைகள அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம்.
இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுது.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும். அதாவது பூக்கள் எந்நிறத்தவாயினும், எந்த அளவினவாயினும் அவற்றை மாலையாகக் கட்டபெற்ற நார் ஒரே பொருளாக இருப்பது போல, எல்லா அவத்தைகளிலும் மாறாத ”ஒரேபொருள தாய்(நின்று ) மாறா ததன்ம ய) “நான்” இருக்கின்றது.
இந்த ‘நான்’ எனும் மாறாத தன் மயத்துடன் , ‘நான் இவ்வாறு இருக்கிறேன்’ எனும் அடைமொழி அல்லது அவத்தைக் குணம் சேரும் போது ‘அஹங்காரி’ எனப்படும். எந்த அடைமொழியும் இன்றித் ‘தன்மயமாய்’ இருக்கும்போது ‘ஆன்மா’ எனப்படும்.
இவ்வாறு ஆன்மா எனும்பொருள் எத்தகையது எனக் குருநாதர் மாணாக்கருக்கு அறிவித்தார்.
இந்த உண்மையைக் குருநாதராக வந்த பரம குருவாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி எவ்வாறு உணர்த்தினார்? வாக்கால் சொல்லாமல் ‘மௌன வியாக்கியானம்’ செய்தார். உடல்மொழியால் (body language) உணர்த்தினார். ஏனெனில் ஆன்மாவின் ‘தன்மயமாகிய’ நிலை ஓதி, அறிவித்து அறிவதன்று. வாக்கு மௌனம், காயமௌனம் மனோமௌனமாக இருந்து அனுபவித்து உணர்வதாகலான். ஆன்மாவின் ‘தன்மயம்’ அனுபவ அறிவேயன்றி ஓதியறியும் அறிவன்று.
ஆன்மாவின் ‘தன்மய’மாம் உண்மையை மாணாகருக்கு உணர்த்த ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி பயன்படுத்திய உடல்மொழிக்குச் ‘சின்முத்திரை’ என்பது பெயர். அவர் தமது வலக்கரத்தால் சின்முத்திரைகாட்டி ஆன்மாவின் தன் மயத்தை உணர்த்தினார். ( வரலாற்று மரபின்படி வராத குருக்கள்மார் சிலர் இடக்கரத்தால் சின்முத்திரை காட்டுகின்றனர். அதுமரபன்று. பிழையும் பாவமுமாகும்)
மாணக்கர்கள் சர்வதுக்க நிவிர்த்தி பரமானந்த பிராப்தி (பேரின்பவீடு) அடையும்பொருட்டுசற்குருநாதர் தம் கையில் அமைத்துக் காட்டும் உத்திரை சிந்முத்திரையாகும்.
வலக்கரத்தில் ஐந்து விரல்கள் உள்ளன. அவற்றில் கட்டைவிரல் தனித்தும் மற்றைய நான்கு விரள்கள் இணைந்தும் உள்ளன. தனித்து நிற்கும் கட்டைவிரல் சிவப்பிரமத்தைக் குறிக்கும். சுட்டுவிரல் சீவனைக் குறிக்கும்.
நடுவிரல் ஆவரணம் எனும் அறியாமையைக் குறிக்கும்.
மோதிரவிரல் அவரணத்தின் நீட்சியாகிய விக்ஷேபத்தைக் குறிக்கும் அறியாமையினால் விளைவது சித்தசலனம் எனும் சித்தசஞ்சலம்.
சிறுவிரல் மலம் எனும் பாப கருமங்களைக் குறிக்கும். பாபவினைகள் ஆவரணம் எனும் அறியாமையினாலும் விக்ஷேபம் எனும் சித்த சஞ்சலத்தாலும் விளைவது.
குருநாதர் சுட்டௌ விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்.
இந்தச் சின்முத்திரையின் பொருள்: சுட்டுவிரலை நடுவிரலினின்றும் பிரித்துக் காட்டுவதால் ஆவரணம் என்னுமறியாமையை ஆத்மபிரம்ம ஐக்கிய (ஏக) சொரூபத்தை அறிவதாகிய ஞானத்தால் விலக்க வேண்டும்.
மோதிர விரலை விலக்குவதால், ஈசனைக் குறித்த நிஷ்காம உபாசனையால்( எதனையும் வேண்டாத வழிபாடு) விக்ஷேபம் எனும் சித்த சஞ்சலத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
சுண்டுவிரலாகிய சிறுவிரலை விலக்கிக் கொள்வதால், ஈசுவரனைக் குறித்த நிஷ்காம புண்ணிய கர்மத்தால் மலம் எனும் பாபகருமத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆவரணம் விக்ஷேபம் மலம் ஆகிய மூன்று உபாதிகளையும் நீக்கிக் கொண்ட ஆன்மா சச்சிதானந்தமாக விளங்கும். இவ்வாறு அது நீ என்ற தத்துவமசி மஹாவாக்கியம் சின்முத்திரையின் வாயிலாக உணர்த்தப்பட்டது.
மற்றொரு விளக்கம்.
நடுவிரல் தூலதேகம்; மோதிரவிரல் சூக்கும தேகம்; சுண்டுவிரல் காரணதேகம்.தூலதேகம் ஆன்மாவுக்கு நெருக்கமாகவும் காணும்படிப் பெரிதகவும் உளது. ஆன்மாவாகிய சுட்டுவிரல், இம்மூன்று தேகங்களையும் விட்டு விலகிக் கட்டைவிரலாகிய சிவப்பிரமத்துடன்நிற்றல் முத்தியாகும். கட்டைவிரல் சத்து ஆகிய உள்பொருள் (existence) ; ஞானமாகிய ஆன்மா (consciousness). இரண்டும் ஒன்றே; இதத்தவிர வேறு பொருள் இல்லை என உணர்த்துவதாகும். இந்தச் சின்முத்திரையில் சுட்டுவிரல் நுனி பெருவிரல்மேல் நின்று ஒரு வட்ட வடிவை (circle)க் காட்டும். விலக்கப்பட்ட மூன்று தேகங்களும் அவற்றின் காரணமுமே சித்தைச் சத்துடன் சேராமல் பிரித்துள்ளன என்பது கருத்து.
சைவத்தில் சின்முத்திரை கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
உமையம்மை இமய அரசன் வேண்டுகோலுக் கிரங்கி அவனுக்கு மகளாக இறைவன் அனுப்பப் பிரிந்தவுடன் , இறைவன் தனியே இருந்தனன். அப்பொழுது வேதம் முழுதும் கற்றுணர்ந்த சனகாதி முனிவர் இறைவனிடம் வந்து,” ஐயனே!கடல் போல விரிந்த பொருட்பரப்புள்ள வேதன்ஹ்களைக் கற்ரு மனம் அடங்காமல், நள்ளிரவில்சூறாவளிக் காற்றடிக்க எழும் அலைகளால் அலைப்புண்ட கப்பல் போல மனம் ஒருநிலைப்படாமல் கலங்கினோம். இந்தக் கலக்கம் ந்நிங்க அருளுவாயாக” என்று இரந்தனர். இறைவன் அந்தமில் ஆகமத்தின் அரும்பொருள் மூன்றும் (சரியை, கிரியை, யோகம்) கூறினன். முனிவரர்கள் மனம் அடங்கும் ‘ஞானபோதகம்’ போதி என்றனர்.
இறைவன் அது சொல்லத்தக்கதன்று; இப்பரிசினால் இருத்தல் கண்டீர் எனக் கூறி,
“உரத்திர் சீர்கொள் கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி, ஒருகணம் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்”
மோனமுத்திரை என்றது, சின்முத்திரையை சின்முத்திரை உணர்த்தும் பொருள்யாது?
கட்டைவிரல் சிவபரம்பொருளைக் குறிக்கும் . சுட்டுவிரல் உயிரைக் குறிக்கும் சுட்டுவிரலுடன் ஒட்டிய நடுவிரல் உயிருடன் இணைந்த ஆணவமலத்தையும் மோதிரவிரல் மாயாமகத்தையும் சுண்டுவிரல் கன்மமலத்தையும் குறிக்கும்.
சுட்டுவிரலாகிய உயிர் ஆணவம் மாயை கன்மம் ஆகிய மும்மலங்களையும் விட்டு நீங்கிக் சிவத்தின் தாளினைக் குறிக்கும் கட்டைவிரலின் முதல்வரியின் அடியினைப் பொருந்தி நிற்றலாம். இதனை,
“மும்மலம் வேறுபட் டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த் தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவ நல்கிய
செம்மலை யலதுஉளம் சிந்தி யாதரோ.”
எனத் திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம். உணர்த்திற்று
சின்முத்திரையின் மூன்றுவடிவங்கள் இங்குச் சுட்டப்பட்டன. முதலாமது, சுட்டுவிரலின் நுனி கட்டைவிரலின் நுனிமேல் படிந்திருத்தல். (மூக்குப் பொடியைப் ப்டித்திருத்தல் போல என வேடிக்கையாய்க் கூறுவர்) இரண்டாவது, சுட்டுவிரலின் நுனி கட்டை விரலின் நுனிமீது பொருந்தி , இரு விரல்களுமிணைந்து ஒருவட்டம் போன்ற வடிவினைக் காட்டல். மூன்றாவது, சுட்டு விரல் வளைந்து கட்டைவிரலின் முதல் வரியின் அடியில் படிந்து நிற்றல். இது,சிவனுடைய திருவடியில் அடியவனின் தலை படிந்து நிற்றல் போன்றது என்பர்.
-------------
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம் -8
நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந் தேமா யையால்
கனவிய பிராந்தனாய் உலகமிதனைக் கார்ய
காரணத் தன்மையோடும்
தனதுதன் சாமிதாய் தந்தைமுத லியபேதத்
தன்மையும் காண வல்ல
சினமதறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! 8
ஆன்மா சித்சத்து;சித்தாகிய அறிவும் சத்தாகிய உண்மையும் ஆகும். ஆன்மா மெய்ஞ்ஞானமும் உள்பொருளுமாகிய சத்துசித்து ஆகும். இவ்வாறு தன்னை அறியுந்துணையும் அகண்டாகார ஞானமய ஆன்மாவாகும்; எப்பொழுது மாயையின் குணங்களுடன் சேருகின்றதோ அப்பொழுது ஆன்மா தன் சத்து சித்தாகிய வியாபகத் தன்மையின் நீங்கி ‘நான்’’ எனும் அகங்காரியாகிக் குறுகிவிடுகின்றது. துக்கியாகிய ஏகதேச அறிவை உடையதாகின்றது. மயக்க அறிவுடன் கனவுலகில் வாழும் பிராந்தனாகி விடுகின்றது. பாரமார்த்த ஆன்மா என்ற நிலை ஒழிந்து வியவகாக அஹங்காரி என்ற நிலையை அடைகின்றது. இது ஆத்மாவின் வீழ்ச்சி..
வியாபகஞானமான ஆன்மா, ‘நான்’ எனும் வியவகார அஹங்காரியாக வீழ்கின்றபோது அதன் நிலையில் பல மாறுதல்கள் விளைகின்றன. மாண்டூக்கிய உபநிடதம் அந்த நிலைகளைக் கூறுகின்றது.
ஆத்மா வாகிய ‘நான்’, நனவுலகில், அதாவது சாக்கிரஉலகில் தூல உடலில் ‘விஸ்வன்’ என்ற பெயருடைவன் ஆகி, வெளிஉலக அனுபவம் அடைகின்றேன். . சொப்பன வுலகில், சூக்கும உடலில், ‘தைஜசன்’ எனப் பெயருடைய வனாகிக் கனவுலக அனுபவத்தை உண்மையென அனுபவிக்கின்றேன்.. சுழுத்தியாகிய அவத்தையில் , காரண சரீரத்தில்,ப்ராஞ்ஞன் எனும் பெயருடன் எந்தப் பொருளையும் அனுபவியாமல் அறியாமையை உடையவனாக இருக்கிறேன். [ இன்பமோ துன்பமோ எந்த அனுபவத்தையும் அனுபவிக்காமல் இருளாக இருக்கும் இந்த அறியாமையை இன்பமென்று கூறுவாருமுளர்.]
ஆனால், ஆத்மாவாகிய என் உண்மை நிலை துரியன் எனப்படுகின்றது. துரியம் எனும் நிலையில் ஆத்மா எந்தவொரு அனாத்மாவுடனும் சம்பந்தப் படுவதில்லை. விஸ்வன், தைஜசன், பிராஞ்ஞன் எனும் மூன்று நிலைகளும் தூலம், சூக்குமம், காரணம் எனும் மூன்றுவகை உடல்களுடனும் சம்பந்தப்பட்டநிலை. உண்மையில் ஆன்மாவுக்கு இந்த மூவகை உடல்களுடனும் சம்பந்தமில்லை. தனக்கொரு சம்பந்தமில்லாத ஒன்றினைச் சம்பந்தமுடையதாக நினைத்துக் கொண்டு கீழ்நிலை அடைவதைத்தான் பகவத்பாதரவர்கள்,
“நனவிலும் கனவிலும் உறக்கத்திலும் யாவன்
நள்ளிருந் தேமா யையால்
கனவிய பிராந்தனாய்”
என்றருளினார். பிராந்தன் – அறிவு மயங்கியவன்.
பிராந்தனாய் அறிவுமயங்கிய நிலையைக் “காரிய காரணத் தன்மையோடும்” எனக் கூறியது எவ்வாறு பொருந்தும்?
அஹங்காரியின் வியவகார உறவுகளெல்லாம் காரண காரியங்களாகும்.. பிறப்பு என்ற காரியம் கன்மம் எனும் காரணத்தின் விளைவாகும் என்னுடைய பிராரப்த கன்மம் என்னுடைய உலக வாழ்க்கையின் இன்பதுன்பங்களுக்குக் காரணமாகிறது.
என்வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் என் கன்மமே காரணமாகிறது.
பலவித உறவுகளுக்கும் அதனால் வரும் பேதங்களுக்கும் இக்காரணகாரியமே அடிப்படையாகும். பகவத் பாதர்கள் அத்தகைய உறவுகள் சிலவற்றை எடுத்துக் காட்டாகக் கூறுகின்றார்.
சிஷ்யன் – குரு, தாய்- தந்தை ,மகன் – தந்தை, உடையான் – உடைமை, ஆண்டான் – அடிமை, ஆண்டவன் - பக்தன் முதலிய உறவுகளும் அதனால் தோன்றும் பேதங்களும் அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய பிரமமாகிய ஆன்மா, ஏகதேசியாகிய அஹங்காரியாகத் தன்னைக் கருதிக்கொள்வதன் விளைவாகும். விஸ்வன், தைஜசன், பிராக்ஞன் ஆகிய மூன்று அவத்தைகளிலும் எவ்வித விகாரமுமின்றி இருப்பவன் ‘துரியன்’ எனும் நான்காமவனே. பொன்னால் ஆன அணிகலன்களின் வடிவம் வேறுவேறாக இருந்தாலும் அவற்றின்மூலப்பொருள் பொன்னாகிய ஒன்றே. அவ்வாறே பிரமமே பிரபஞ்சத்தில், விவகார நிலையில் பல்வேறு வேறுபாடுகளை உடையதாகக் காணப்படுகின்றது.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அதனுள் மெய்ப்பொருள்காணும் நுண்ணறி வுடை யவனுக்கு வியவகார நிலையில் இத்தனை பேதங்களாகவும் இருப்பவன் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஒருவனே என்பது புலனாகும். அத்தகைய ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு என் வணக்கம்.
இந்தப்பாடலுக்கு மாண்டூக்கிய உபநிடதத்தை வைத்துப் பொருள் காண முயன்றுள்ளேன். பிழையாகவும் இருக்கலாம். அறிந்தவர் திருத்தினால் பணிவுடன் ஏற்றுக் கொள்வேன்.
மாண்டூக்கிய உபநிடதத்தைச் சைவசித்தாந்தி நோக்கும் நிலை தனிக் கட்டுரைக்கு உரியது. எனவே, அதனை இங்கு விளக்கவில்லை.
மணிவாசகப் பெருமான் கோயில் திருப்பதிகத்தில், திருவாசகத்தின் உயிர்ப் பாடல் எனக் கருதப்படும் “இன்றெனக் கருளி இருள்கடிந்திட்டு” எனத்தொடங்கும் பாடலின் இறுதியில், “ஒன்றும்நீயல்லை யன்றியொன்றில்லை யாருன்னை அறியகிற்பாரே” என அருளியதை இங்கு நினைவு கூர்க.
-----------------
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
நிலம்நீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானன் என்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன் கூர்த்த மதியால்
அலசுவார்க்குத் தன்னை யன்றியொன் றேனுமின்
றானவன் பரம வான்மா
திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !! 9
அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பகிய சொரூப சிவம், ஆன்மாக்கள் தன்னை உணர்ந்து வழிபட்டு உய்யப் பல்வேறு தடத்தத் திருமேனிகளைக் கொள்கிறது. அவை அனைத்தும் நந்தம் கருமேனிகளைக் களையும் அருட்டிரு மேனிகளாம் என்பது சைவக் கோட்பாடு.
அத்தடத்தத் திருமேனிகள் அரு அருவுரு வுரு எனவும், மந்திர வடிவென்றும், அத்துவா வடிவென்றும் அட்டமூர்த்தி வடிவென்றும் பல்வகைப்படும்.
உருவத்திருமேனிகளில் பரமகுரு மூர்த்தமாகிய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி வடிவம் மிகச்சிறப்பானது. உலக காரணனாகிய பரமசிவன் அருளினால் உருவுகொண்டு ஆரணம் (வேதம்) ஆகமங்களை அருளாதிருப்பனாயின் உயிர் முப்பொருளுண்மை உணர்ந்து வீடுபேறு அடைதல் இல்லையாகும்; மானுடர் முதலிய உயிர்கள் உய்ய குருபரம்பரை இல்லாமற்போகும்.
எனவே, குருபரம்பரையில் சொரூபசிவன் கொண்ட திருமேனியாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தலையாய திருமூர்த்தமாம். இத்திருமூர்த்தத்தை வேதாந்திகள் ‘ஏகரூப ஈஸ்வரன்’ என்பர். இம்மூர்த்தி வடிவினைக் கந்தபுராணமும், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமும் கச்சியப்பமுனிவரின் திருவானைக்காப் புராணமும் பொருளொடு போற்றுகின்றன.
ஏகனாகிய சிவமே அநேகனாக அருளால் உருவு கொள்கின்றதெனச் சிவஞான சித்தியார் உரைப்பதற்கேற்ப, ‘ எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களினும் இயைந்தே விளங்க லுறுமோ’ என்னுந் தொடர், வியாபக மெய்ப்பொருளான சிவம், தன்னுள் அடங்கியிருக்கும் வியாப்பியப் பொருள்களான சேதன அசேதனங்களுக்கு இருப்பினையும், முறையே அறிவு, இயக்கங்களையும் தந்து ‘நான் அறிந்தேன்’ எனும் அறிவினைத் தந்துதவுவதை உணர்த்துகின்றது.’ என்பதனையும் முன் பாடல்களிற் கண்டோம்.
குணங்குறி கடந்து ஏகனாக நின்ற சிவமே எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானாக அநேகனாகவும் உள்ளான். இவ்வாறு உருவ அருவமானத் தடத்த வடிவினனே பேருருவினனாக விசுவரூபனாகவும் உள்ளான். பரமனின் விசுவரூபத்தைக் கந்தபுராணம் முதலிய புராணங்கள் கூறுகின்றன. அப்பேருருவைப் பரமனமுடைய அருளாளர்களே தங்கள் அகத்தில் ஞானக்கண்ணால் நோக்குவர். நம்மனோரால் அதனை உணர முடியாது.
விசுவநாதனாகவும் விசுவாதீதனாகவும் இருப்பதுடன் உலகுயிர்கள் இயங்குதற்பொருட்டுச் சிவன் விசுவாந்தர்யாமியாகவும் உள்ளான். அந்நிலையைச் சித்தாந்த நூல்கள் அட்ட மூர்த்தம் என்று குறிப்பிடுகின்றன. ஐம்பெரும் பூதங்களான நிலம் நீர் நெருப்பு வளி ஆகாயம் என்பனவும் ஞாயிறு திங்கள் எனும் சுடர் இரண்டும் ஆன்மாவும் எனும் எட்டுமட்ட மூர்த்தமாம். இவற்றுள் முதலேழும் அசேதனம் (அறிவற்ற பொருள்); ஆன்மா ஒன்று சேதனம் (அறிவுடைப்பொருள்) இந்த எட்டினையும் இறைவன் தனது திருமேனியாகக் கொண்டு இயங்குகின்றான். இதனை, “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி, இயமனனாய் எறியுங் காற்று மாகி, அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தியாகி --- --- நிமிர்புன்சடையடிகள் நின்றவாறே” என்னும் அப்பர் பெருமானின் நின்றதிருத்தாண்டகமும், “நிலம் நீர்நெருப்பு உயிர்” எனத் திருவாசகம் திருத்தோணோக்கம் (5) கூறின. சிவன் கலப்பினால் அவ்வப் பொருளாக இருத்தலை ஸ்ரீருத்திரமும் கூறிற்று. பொருள்களுடன் கலந்து ஒன்றி நின்று உயிர்களுக்கு உபகரித்தலை விவேக அறிவுடையவர் எவரும் அறிந்துய்யச் சிவம் இவ்வாறு அட்ட மூர்த்தமாக விளங்குகின்றது.
ஏகரூப ஈசுவரனாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே விசுவாந்தரியாமியாக உலகுயிர்களுக்கு உபகரிப்பதைப் பகவத்பாதர் அவர்கள்,
“நிலம்நீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானன் என்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன்” என்றருளினார்.
(சரம் இயங்குபவை ;அசரம் – இயங்காதவை locamotary and stationery)
சிவபரம்பொருளாம் பரம ஆன்மாவாகிய ஒன்றே ஆன்மாக்களுக்கு உபகாரமாய் மந்திர உரு, அத்துவ வடிவு, விசுவரூபம், அட்டமூர்த்தம் எனப்பலவாக நிற்கும் உண்மையை மெய்ப்பொருள் உணரும் கூர்த்த மதியுடைய எவரும் அறிவர் என்றும் அவ்வொன்று சிவப்பிரமமாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியே என்றும் பகவத் பாதரவர்கள்,
“கூர்த்த மதியால்
அலசுவார்க்குத் தன்னை யன்றியொன் றேனுமின்
றானவன் பரம வான்மா”
என்று உணர்த்தி அப்பரமான்மவாகிய அத்“திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி” யின் திருவடிகளுக்கு வணக்கம் எனத் துதிக்கின்றார்.
--------------
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம்
நூற்பயன்
எல்லாம் ஏக பிரம்மமயம் என்றே இயம்புமித் துதியை
வல்லார் சொல்லக் கேட்டாரும் மனத்தால் நினைக்கப் பெற்றாரும்
கல்லால் நீழற் கடவுளருள் கைவந் தவரே தாமாவார்
வல்லார் சித்தி யெல்லாமும் வாழ்வார் வானோர் மதித்திடவே! (10)
இந்தப் பத்தாவது பாடல் , இந்நூலைப் பாராயணம் செய்வோர், நூற்பொருளைச் சிந்திப்போர், நூற்பொருளைப் பிறர் விரித்துச் சொல்வோர், சொல்லச் செவி மடுத்துக் கேட்போர் ஆகியோர் பெறும் பயனக் கூறுகிறது.
நூற்பயனைக் கூறும் பாடலைப் பலசுருதி என்பர். திருஞானசம்பந்த சுவாமிகளின் பதிகங்களில் இறுதிப் பாடல் அப்பதிகத்தினைப் பாரயணம் செய்வோர் அடையும் பயனைக் கூறுவதால் அதனைத் திருக்கடைக் காப்பு என்று அழைப்பதைப் போல இப்பாடலும் பலசுருதி எனப்படுகின்றது.
இத்தக்ஷிணாமூர்த்தி தோத்திரம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அட்டகம் என்றும் கூறப்படுகிறது. எட்டுப்பாடல்களைக் கொண்ட நூலை அட்டகம் (அஷ்டகம்) என்பர். முதல் எட்டுப்பாடல்களே தோத்திர வடிவில் வேதாந்தப் பரப்பினைச் சுருக்கிக் கூறுவன. அவையே நூற்பொருள் உணர்த்துவன. ஒன்பதாவது பாடல் பிரமமே பிரபஞ்சமாக நிறைந்துளது என அறிந்து, அப்பிரபஞ்ச வடிவினதான பிரமத்தை மனதிலிருத்தித் தியானிக்கத் தரும் பாடலாகும்.
ஒன்பது, பத்து ஆகிய இருபாடல்களும் நூற்பொருளுக்குப் புறத்தே நிற்பன. இவற்றை பிற்காலத்தில் யாரோ ஒருவர் இயற்றி நூலுடன் சேர்த்திருக்கலாம், அல்லது’, பகவத் பாதர்கள் இயற்றியதாகவும் இருக்கலாம் என இருவகைக் கருத்து நிலவுகின்றது.
சைவசமய உலகில் எல்லாம் சிவமயம் எனவும் வேதாந்திகளிடையில் சர்வம் பிரம்மமயம் என்னும் வழக்கும் நிலவிவருவதைக் காண்கிறோம். அந்தச் சிவப்பிரமமே ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி. சேதன அசேதனப் பிரபஞ்சம் முழுவதும் இச்சிவப்பிரமமேயன்றி வேறொன்றில்லை யென்று போதித்து அதை அனுபவத்துக்குக் கொணர உதவுவது இந்நூல். அதனால்,’எல்லாம் ஏக பிரம்மமயம் என்றே துதிக்கும் இத்துதியை’ என்றார்.
‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.
அனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும்மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும். இதனைத் திருவாசகம், ‘விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க’ என்றும்,
“நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன்; திருத்தகு
மதியின் தண்மை வைத்தோன்; திண்டிறல்
தீயின் வெம்மை செய்தோன்; பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன்; மேதகு
காலின் ஊக்கங் கண்டோன்; நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட
மண்ணின் திண்மை வைத்தோன்; என்றென்
றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் “
எனவும் கூறிற்று.
அவன் அவையாகி இருப்பதால்தான் அவை அவ்வக்குணங்களும் உடையவாயின.
இச்சர்வாத்தும பாவனையைத் தனக்கு உதவுமாறு முருகப்பெருமானை அருணை முனிவர் அழகாகச் சுருக்கமாக வேண்டுகின்றார். “ எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாக இதய பாவனாதிதன் அருள்வாயே” (அமலவாயு’ எனத்தொடங்கும் பொதுத் திருப்புகழ்)
இவ்வாறு எல்லாம் சிவமயமே என்ற உணர்வடைவதற்குச் சாதனங்களாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் , நிட்டை கூடுதல் எனச் சைவம் கூற சிரவணம் ,மனனம், தியானம், நிதித்தியாசனம் என்னும் சாதனங்களைவேதாந்தம் கூறுகின்றது.
நிதித்தியாசனம் இந்நூலினுட்பொருளைப் பிறருக்கு உபதேசிப்பவருக்கு மிகவும் இன்றியமையாத சாதனமாகும். தியானம் செய்வோராகிய சாதகர் (சீடர்) மனம் அவ்வப்போது கலைந்து வேறு பொருளின்மேற் சென்றாலும் குறையில்லை. ஆனால் நூலினை உரைக்கும் ஆசிரியனின் மனம் நூற்பொருளினில் முதலந்தம் சிதறாமல் ஒன்றி நிற்க வேண்டும். இதுவே நிதித்தியாசனம். அதனால் ‘இத்துதியைச் சொல்ல வல்லார்’ என்றார்
இச்சாதனங்கள் முற்றியவர்கள் கல்லால் நீழற் கடவுளாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அருளைப் பெற்றவராவர்; அவ்வருளாவது அக்கடவுளின் சொரூபமாக விளங்குதல்; பரமான்ம சொரூபமாதல்; சிவமயமேயாதல்.
சிவமயமாதல் , இதுவே இந்நூலினை அனுசந்தித்தலின் பயன். இந்நூற்பயன் கைவந்தவர் சிவஞானியாவர். சிவஞானம் பெறலே இந்நூலினைக் கற்றலின் முக்கியப் பயன். சிவஞானம் பெற்றவர்கள் ‘ஈசுவரத்துவம், சுவாமித்துவம்’ எனும் தலைமைத்தன்மை உடையவர்களாவர். பிரபஞ்ச வாதனை அற்றவராவர்.
அவாவந்தப் பயனாக வேறு சில சித்திகளும் அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு வந்து சேரும் அச்சித்திகளை அந்த ஞானியர் பொருட்படுத்துவதில்லை. ஞானியர் அட்டமா சித்திகள் கைவரப் பெற்றாலும் அவற்றைக் ‘கான்ற சோறு’ என அருவருத்து ஒதுக்குவர்.
இத்தகைய ஞானியரை வானகத்துத் தேவரும் வணங்குவர்.
---------------